14/06/2026
✝️ஆலயம் அறிவோம் வரிசையில் 1,076-வதாக இன்று "தூய தைநேசி மாதா திருத்தல ஆலயம், பார்வதிபுரம்" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.
🌽🍆🧅🍆🌽🍆🌽🍆🌽🍆🌽🍆🌽🍆🌽🍆🌽🍆
🛐பெயர்: தூய தைநேசி மாதா திருத்தல ஆலயம்
🍓இடம்: குருசடி தெரு, பார்வதிபுரம்,
நாகர்கோவில் -629003
🍇மாவட்டம்: கன்னியாகுமாரி
🍑மறைமாவட்டம்: மார்த்தாண்டம்
🍏மறைவட்டம்: நாகர்கோவில்
🌻நிலை: பங்குத்தளம்
💐பங்குதந்தை: Rev.Fr. அபின்சன் அலெக்ஸ்
👉Mob:+91 83008 30131
👪குடும்பங்கள்: 32
☂️அருள்வாழ்வியங்கள்: 5
💚புனித தோமையார் அருள்வாழ்வியம்
❤️புனித சவேரியார் அருள்வாழ்வியம்
💜புனித அந்தோனியார் அருள்வாழ்வியம்
💛புனித சூசையப்பர் அருள்வாழ்வியம்
💙புனித ஜார்ஜியார் அருள்வாழ்வியம்
ஆராதனை நேரங்கள்:
✝️ஞாயிறு காலை 9.00 மணி காலை ஜெபம், திருப்பலி
✝️புதன் மாலை 5.00 மணி மாலை ஜெபமாலை, திருப்பலி
✝️சனிக்கிழமை காலை 10.00 மணி ஜெபமாலை, 10:30 மணி நவநாள், 11.00 மணி திருப்பலி, 12:15 மணி நற்கருணை ஆராதனை, சாட்சியப் பகிர்வு,12:45 மணி நேர்ச்சை கஞ்சி.
🎉திருவிழா: ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையின் போது 5 நாட்கள் நடைபெறும்
👉வழித்தடம்: பார்வதிபுரம் மேம்பாலம் கீழ் பஸ் நிறுத்தத்திலிருந்து, இலந்தையடி செல்லும் சாலையில் 100 மீட்டர் தொலைவில் வலது புறமாக ஆலயம் அமைந்துள்ளது.
👉Map:
https://share.google/NPwi3Horh4MjqOJln
ஆலய வரலாறு:
# # # # # # # # # # # # # #
🪴மேற்குத் தொடர்ச்சி மலைகள் மேகங்களைத் தழுவி நிற்கும் கன்னியாகுமரி மண்ணில், இயற்கையின் பேரழகையும், இறையருளின் பேரொளியையும் தன்னகத்தே தாங்கி நிற்கும் புனிதத் தலமாக விளங்குகிறது பார்வதிபுரம் தூய தைநேசி மாதா திருத்தல ஆலயம். காலத்தின் சாட்சியாகவும், பக்தர்களின் நம்பிக்கையின் அடையாளமாகவும், அன்னையின் அன்பு நிறைந்த அரவணைப்பின் இல்லமாகவும் இந்தத் ஆலயம் திகழ்கிறது. இந்தப் புனித மண்ணை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு ஜெபமாகவும், இங்கு உயர்த்தப்படும் ஒவ்வொரு பார்வையும் ஒரு நம்பிக்கையாகவும், அன்னையின் சன்னிதியில் சிந்தப்படும் ஒவ்வொரு கண்ணீரும் ஒரு ஆறுதலாகவும் மாறுகிறது. இயற்கையின் அமைதியோடு இணைந்த இந்தத் திருத்தலம், மனித உள்ளங்களை இறைவனை நோக்கி உயர்த்தும் ஆன்மிகப் பாலமாக விளங்குகிறது.
🦋அத்தகைய அருள்நிறைந்த திருத்தலத்தின் பெருமை, வரலாறு, இயற்கை வளம், பக்தி அனுபவம் மற்றும் அன்னையின் அன்பின் ஆழம் ஆகியவற்றை கூறும் இந்த தொகுப்பு வெறும் சொற்களின் தொகுப்பல்ல; அன்னையின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கப்படும் பக்தி மலர்களாகும். பசுமை மலையின் நிழலில், தென்றல் காற்றின் இசையில், மணியோசையின் இனிமையில், அன்னையின் அருள் கதைகளைப் பாடும் இந்த தொகுப்பு, வாசிக்கும் ஒவ்வொரு உள்ளத்திலும் நம்பிக்கையை விதைத்து, அன்பை வளர்த்து, இறைநெருக்கத்தை ஏற்படுத்தட்டும்.
🍊கிபி 1710 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டை சார்ந்த இயேசு சபை குருவானவர், கான்ஸ்டான்ஸோ ஜோசப் பெஸ்கி என்பவர் ( தைரியநாதர் என்னும் வீரமாமுனிவர்). இவர் மறைப்பரப்பு பணிக்காக தனது முப்பதாம் வயதில் கோவா வந்தடைந்தார். சிறிது காலம் கோவாவில் தங்கிய அவர் தமிழகம் வர எண்ணி கடல் மார்க்கமாக கேரளாவில் கொச்சி வந்தடைந்தார். பின்னர் கால்நடையாக அம்பலக்காடு வந்து சிறிது காலம் தங்கி விட்டு மதுரை நோக்கி பயணமானார். செல்லும் வழியில் பார்வதிபுரம் பகுதியில் குளத்தின் அருகில் குடிசை அமைத்து ஓய்வெடுப்பதற்காக சிறிது காலம் தங்கினார். அப்பொழுது, ஒரு கல்குருசை (கற்சிலுவை) நட்டுச் சென்றார் என்பது வரலாறு.
✝️பின் நாட்களில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை (இன்று புனித தேவ சகாயம்) மறைவிற்குப் பிறகு அவரின் நினைவாக வீரமாமுனிவர் கல்குருசின் அருகில் ஒரு சிறிய கல் குருசு நாட்டப்பட்டது என்பதும் வரலாறு.
🏵️சில காலங்களுக்கு பிறகு திருவிதாங்கோடு பகுதியை சார்ந்த, கிறிஸ்துவின் மீது அதிக விசுவாசம் கொண்ட சைனிக்கிரியா என்ற பெண் இந்த கல் குருசுகளால் ஈர்க்கப்பட்டு, தினமும் ஒரு மண் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு, சிலுவையின் கீழ் தீபமாக ஏற்றி வழிபட ஆரம்பித்தார். கி.பி 1885 முதல் கி.பி 1924 வரையிலான திருவிதாங்கூர் மன்னர் ஆறாம் ராஜவர்மா என்று அழைக்கப்பட்ட மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ஸ்ரீ ராஜ வர்மா VI அவரின் ஆட்சி காலத்தில், ஒரு நாள் தன்னுடைய குதிரையில் நகர் வலமாக இந்தப் பகுதிக்கு வந்தபோது அவரின் குதிரை அதிகமாக கனைத்து, மன்னரை குதிரையில் இருந்து கீழே தள்ளி அடம்பிடித்து அவ்விடத்தில் படுத்து கொண்டது. உடனே மன்னர் சேவகர்களை அழைத்து அருகில் கோவில்கள் ஏதாவது இருந்தால் விபூதி எடுத்து வர கூறினார். அவர்கள், திரும்பி வந்து கோவில்கள் எதுவும் இல்லை. ஆனால், ஒரு சிலுவையின் கீழ் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருப்பதாக கூறினர். உடனே, அவர் அவ்விடத்திற்கு சென்றார். அங்கு சிலுவையின் கீழ் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து எண்ணெய் எடுத்து குதிரையின் நெற்றியில் பூசினார். உடனே, குதிரை உற்சாகமாக எழுந்து நின்றது. அப்போது, மிக்க மகிழ்ச்சி அடைந்த மன்னர் அங்கிருந்த சைனிக்ரியா என்ற பெண்ணிடம் அந்த இடத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். பின்பு, அவர் அவரிடம் உமக்கு என்ன உதவி வேண்டும் என கேட்டுள்ளார். சைனிக்கிரியா அவரிடம் தனக்கு இந்த இடத்தை தானமாக தருமாறு வேண்டிக் கொண்டதால், மன்னர் சைனிக்கிரியாவிற்கு 18 சென்ட் நிலம் தானமாக வழங்கினார். அது மட்டுமல்லாமல், ஓலை குடிசையாக இருந்த அந்த ஆலயத்தை ஓடு வேய்ந்த ஆலயமாகவும் கட்டிக் கொடுத்தார்.
🌺கி.பி 1924 முதல் 1987 வரையிலான காலகட்டத்தில், ஒருமுறை கார்த்திகை மாதம் காலரா நோய் வந்து அந்தப் பகுதியில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இறந்தனர். அப்போது, சைனிக்கிரியா அந்த குருசின் கீழ் விளக்கேற்றி, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கஞ்சி காய்த்து இந்த பகுதி மக்களுக்கு தானம் செய்வேன் காலரா நோயை நீக்கி தாரும் என மன்றாடினார். அவரின், வேண்டுதல்படி காலரா நோய் அந்தப் பகுதியில் முற்றிலுமாக குறைய ஆரம்பித்தது. அதன் பிறகு சைனிக்கிரியா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் கஞ்சி காய்த்து இப்பகுதி மக்களுக்கு தானம் செய்ய ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து இதை அறிந்த மக்கள் இங்கு ஏராளமாக வந்து ஜெபிக்க ஆரம்பிக்க தொடங்கினர். அவ்விடம் “குருசடி” என அன்று முதல் அழைக்கபட்டது.
🌹சைனிக்கிரியா முதிர் வயதில் இந்த இடத்தை பராமரிக்க இயலாமல் அதன் பொறுப்பை தன் மகன் முத்தையாவிடம் ஒப்படைத்தார். முத்தையா தனது அக்கா மரியம்மாவோடு சேர்ந்து இந்த குருசடியை பராமரித்து வந்தனர். முத்தையா சில நாட்களுக்குப் பிறகு, வறுமையினால் அந்த இடத்தை சிறிது சிறிதாக விற்கத் தொடங்கினார். இதனால், முத்தையாவின் மகள் அந்தோணியம்மாள் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டு, ஆலயத்தை பராமரிக்க ஆரம்பித்தார். தன் பாட்டி செய்தது போல தினமும் விளக்கேற்றி, ஒரு சிறிய மாதா சுரூபம் வைத்து ஜெபமாலை, மாலை நேர வழிபாட்டை ஆரம்பித்தார். தன் பாட்டியைப் போன்று ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் நேர்ச்சை கஞ்சி வைத்து மக்களுக்கு வழங்கினார். தன் வறுமை நீங்க ஜெபிக்க ஆரம்பித்த அந்தோணியம்மாளின் வறுமை குறைய ஆரம்பித்தது. பின்னர் அவர் கஞ்சிக்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாசம் 9 ஆம் நாள் பாயாசம் வழங்க ஆரம்பித்தார்.
🍓குருசடியில் நடக்கும் அதிசயங்களை அறிந்த சுற்றுவட்டார மக்கள் இன்னும் ஏராளமானோர் வந்து தங்கள் வறுமை போக்கவும், நோய் பிணிகள் நீக்கவும் வேண்டி அங்கு தங்கி ஜெபிக்க ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் நாகம்மாள் என்ற பெண்மணி, தனது உடலில் ஒரு கட்டியோடு தனது குழந்தையையும் தாயையும் அழைத்து இங்கு வந்து தங்கி ஜெபிக்க ஆரம்பித்தார். அப்போது அங்கிருந்த மக்கள் அவரை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்திய போதிலும், அவர் அதிக விசுவாசத்துடன் அங்கேயே தங்கி ஜெபித்தார். அவர் தேங்காய் எண்ணெய் வாங்கி வந்து, அதை கல்குருசின் மீது பூசி அதை எடுத்து தன் உடல் முழுவதும் பூசிக்கொண்டு தினமும் ஜெபிப்பார். ஒரு நாள் அவர் ஜெபித்து விட்டு இரவு தூங்கும் போது கனவில் ஒரு காட்சியைக் கண்டார். அந்த கனவில் ஆலயத்தின் முன்பு ஒரு ரதம் வந்து நின்றது. அதிலிருந்து, ஒரு செல்வந்தர் இறங்கி ஆலயத்தின் உள் வந்து தூங்கிக் கொண்டிருந்த நாகம்மாள் நெத்தியில் சிலுவை வரைந்து விட்டு சென்றுள்ளார். மறுநாள் அவள் உடலில் இருந்த கட்டி உடைந்து விழுந்து இருக்கிறது. பின்னர், அவர் ஒரு புதிய துணியை வாங்கி அதை மூன்று துண்டாக கிழித்து, ஒரு பகுதியை ஆலயம் முன்பு போட்டு எரித்து சிலுவையில் இருந்து எண்ணெயை எடுத்து குழைத்து. புண்ணிற்கு மருந்தாக அதை தினமும் பூசிக்கொண்டு குணமானார். அதன் பிறகு நாகம்மாள் கிறிஸ்துவை இன்னும் அதிகமாக ஏற்றுக் கொண்டு அந்த ஆலயத்தை தன் சொந்த இடம் போல பராமரிக்க ஆரம்பித்தார். இந்நிகழ்வை கேள்விப்பட்ட பிறகு இன்னும் ஏராளமான மக்கள் வந்து மாலை நேர ஜெபமாலை வழிபாட்டில் கலந்துக்கொண்டு ஜெபிக்க ஆரம்பித்தனர்.
🌾அந்தப் பகுதியானது, விவசாயப் பகுதி என்பதால் விவசாய பொருட்களான நெல், வாழை, தேங்காய், போன்றவற்றை மக்கள் நேர்ச்சை காணிக்கையாக வைத்து வழிபட ஆரம்பித்தனர்.
🌽கி.பி 1987 ஆம் ஆண்டு பெதனி துறவற கன்னியர் இல்ல அருட்சகோதரி. மெல்கா அவர்களின் துணையோடு அன்றைய மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் மார்த்தாண்ட மறைமாவட்ட மேதகு. ஆயர் லாரன்ஸ்-மார்-எப்ரேம் ஆண்டகை அவர்கள் இந்த இடத்தை திரு. முத்தையா அவர்களிடம் இருந்து முறையாக வாங்கினார்கள்.
🍇ஒரு சிறிய ஆலயம் கட்டி திருவிழா நடத்த அன்றைய பங்குத்தந்தை. மரிய அற்புதம் மற்றும் மேதகு. ஆயர். யூஹோனோன் -மார்-கிறிஸோஸ்டோம் ஆண்டகை ஆகியோரால் முடிவு செய்யப்பட்டு, ஜனவரி 15 நாள் விதையை குறித்து அன்னையின் விழா என்பதையும், தமிழர்களின் அறுவடை நாளாகிய பொங்கல் விழாவையும் ஒன்றித்து அன்னைக்கு விழா எடுக்கும் பொருட்டு அதிக விளைச்சலை கொடுத்து தை மாதத்தில் மக்களை அதிகமாக நேசித்து வரும் மாதாவிற்கு “தைநேசி மாதா” என பெயர் சூட்டி கிபி 1988 ஜனவரி மாதம் 15 ஆம் நாள் ஆலயத்தை அர்ப்பணம் செய்து முதல் திருவிழா நடத்தப்பட்டது.
💐கி.பி 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 நாள் திரு. வர்கீஸ் என்பவருக்கு முதல் திருமுழுக்கு பங்கு தந்தை மரிய அற்புதம் அவர்கள் வழங்கினார்கள். அன்றைய நாட்களில் சனிக்கிழமை மாலை ஜெபம் மற்றும் திருப்பலி மலங்கரை கத்தோலிக்க முறைப்படி சிறப்பாக நடைபெற்று வந்தது.
🍇கி.பி 1998க்கு பிறகு வந்த மேதகு. ஆயர். யூஹோனோன் -மார்-கிறிஸோஸ்டோம் ஆண்டகை அவர்கள், ஆலயத்தை விரிவுபடுத்த எண்ணி குருசடி அருகில் உள்ள முத்தாபரணம் என்பவரிடமிருந்து 3 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார்கள். பின்னர் வந்த பங்குத்தந்தையர்களின் முயற்சியில் கி.பி 2000 ஆம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.
🙏கி.பி 2006 ஆம் ஆண்டு தூய தைநேசி மாதாவின் பெயருக்கு ஏற்றார் போல் ஒரு சொரூபம் செய்ய வேண்டும் என்று அன்றைய பங்குத்தந்தை. ஜஸ்டின் அவர்கள் ஆயரின் அனுமதியுடன் தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் பாரம்பரியத்தோடு கூடிய ஒரு மாதா சுரூபத்தை உருவாக்கி, 12-02-2007 (ஞாயிற்றுக்கிழமை) மேதகு. ஆயர். யூஹோனோன்-மார்-கிறிஸோஸ்டோம் ஆண்டகை அவர்களால் மிகவும் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டது.
🍑ஆலய முகப்பானது கி.பி 2010 ஆம் ஆண்டு அன்றைய பங்குத்தந்தை. ஜாண் குமார் அவர்கள் ஆலயத்திற்கு கோபுரம் மிக அவசியம் என்பதை உணர்ந்து கோபுரத்திற்கான கட்டுமான பணிகளை துவங்கி 11-01-2011 மேதகு. ஆயர். வின்சென்ட்- மார்-பவுலோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
🌈ஆலய பலிபீடமானது, கி.பி 2015 ஆம் ஆண்டு பங்குத்தந்தை. அர்னால்டு டயஸ் அவர்களின் முயற்சியால் மறு சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன், ஜனவரி 14 இல் மேதகு. ஆயர். வின்சென்ட்- மார்-பவுலோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அன்றைய தினமே ஆலயத்தின் முன்புறம் புனித தேவசகாயம் குருசடி ஆசிர்வதிக்கப்பட்டு நிறுவப்பட்டது.
🌾அறுவடையின் நாயகியாகிய தைநேசி அன்னையின் திருநாள் விவசாயிகளின் அறுவடை நாளான தை திங்களில் (ஜனவரி 15) ஒவ்வொரு ஆண்டும் பொங்கலிட்டு, திருவிழாவாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்னையை நாடிவரும் மக்கள் தங்களின் குறைகளை மன்றாடி, வேண்டுதல் விண்ணப்பம் வைத்து, தங்கள் வேண்டுதல் நிறைவின் நன்றியாக அன்னைக்கு புடவை காணிக்கை செலுத்தி அன்னையின் பிள்ளைகளாக மாறி வருகிறார்கள்.
👪குழந்தை வரம், திருமண தடை, வேலை வாய்ப்பு, போன்ற வேண்டுதல்களுக்காக ஜெபித்து சாட்சிகளாகவும் மாறி வருகின்றார்கள். மேலும், கல் சிலுவையில் எண்ணெய் மொழுகி அதை எடுத்து செல்கின்றனர். பலி பீடத்தில் வைத்து புனித நீரும் எடுத்துச் செல்கின்றனர். ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து அன்னையை நாடி வந்து ஆசி பெற்று செல்பவர்கள் இங்கு ஏராளம்.
🍫காணிக்கையாக வரும் புடவைகள் மாதாவின் திரு நாட்களில் ஏலம் விடப்படும். அதைப் பெற்று செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து அதை புனித பொருளாக ஏலம் எடுத்து செல்கின்றனர். கடலோர மாவட்ட மக்கள் அன்னையின் திருக்கொடியை காணிக்கையாக பெற்று தங்களின் படகுகளில் அதை கட்டி, அன்னை தங்களோடு பயணிப்பதாக விசுவசித்து, ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு செல்கின்றனர்.
🪴2023 ஜூன் மாதம் பொறுப்பேற்ற புதிய பங்குதந்தை. அபின்சன் அலெக்ஸ் அவர்களின் சீரிய முயற்சியில் ஆலயத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பான முறையில் நற்கருணை ஆராதனை நடத்தப்பட்டு, ஜாதி மத பேதமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வந்து நற்செய்தி பெருவிழா வாயிலாகவும் தைநேசி அன்னையின் பரிந்துரையாலும் நோய் பிணிகள் நீங்கி ஒவ்வொருவரும் சாட்சியம் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் பக்த இயக்கங்களுக்கு நல்ல உறுதுணையும் உற்சாகம் அளித்து மறைக்கல்வி தாய்மார் சங்கம் போன்றவை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது.
🦋பரிவார்ந்த புன்னகையோடு, மழலை இயேசுவை சுமந்து கொண்டு தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு எல்லா வளங்களையும் ஆசீரையும் வழங்குபவளுமாய் பார்வதிபுரம் தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியில் அனுதினமும் மக்களை காத்து வழிநடத்தி வரும் தூய தைநேசி அன்னை நாடிவரும் அன்பர்களுக்கு எல்லாவித அருளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்
"மலைகள் காவல் காக்க,
தென்றல்கள் தாலாட்டு பாட,
தைநேசி அன்னையின் அருள் ஒளியில்
பார்வதிபுரம் என்றும் புனித பூமியாய்."
பங்கின் பங்கேற்புகள்:-
🌻மறைக்கல்வி
🏵️தாய்மார் சங்கம் (MCMF)
🌺MCYM
💐வின்சென்ட்-தே-பவுல்
🌹MCA
👉தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்தந்தை. அபின்சன் அலெக்ஸ் அவர்கள்.
✍️ஆலயம் அறிவோம் பதிவாளர்:
K Jose Mathapuram
Tholayavattam Post
Kanniyakumari District
Kuzhithurai Diocese
Email: [email protected]
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க...🌺🌹🙏🌹🌺