13/02/2024
குற்றவாளிக்கூண்டில் கிருபை?
கிறிஸ்தவம் உலகிற்குத் தந்திருக்கும் மகத்தான மற்றும் தனித்துவமான பங்களிப்பு கிருபை என்கிறார் C. S. Lewis என்னும் கிறிஸ்தவ தத்துவ அறிஞர். கிருபையைக் குறித்த ஆச்சரியம் என்ன? இது தகுதி இல்லாதவர்களுக்கு அருளப்படும் வரப்பிரசாதம். கிறிஸ்துவுக்குள்ளான அற்புத உறவினை விளக்கும் முகமாக பவுல் அதிகம் பயன்படுத்திய சில முக்கிய வார்த்தைகளில் கிருபையும் ஒன்று (அன்பு, விசுவாசம், நம்பிக்கை போன்றவை வேறு சில அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகள்). கிறிஸ்துக்குள்ளாகும் இந்த உறவில் நாம் வர அவர் தம் இன்னுயிரையே பலியாகத் தர வேண்டியதாயிற்று. கிறிஸ்தவ அடிப்படை விசுவாசத்தின் நடுநிலை நாயகன் கிறிஸ்து இயேசு என்பதில் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும் அன்றாட விசுவாச வாழ்வில் கிருபையின் உபயோகம் மற்றும் அது குறித்த புரிதல்கள் - விளக்கங்களில் பல்வேறு அர்த்தங்களில் வெளிவந்திருப்பதற்கு சபை சரித்திரம் சான்று தருகின்றது.
கிருபையின் உபதேசங்கள் சபை வரலாற்றில் மிகப்பெரும் முரண்களைச் சந்தித்திருக்கின்றன. கிருபையைப் போன்ற மிக அழகான சத்தியத்தைச் சூழ இந்த முரண்பட்ட காரியங்கள் நிற்கக் காரணம் என்ன? ஜோசப் பிரின்ஸ் நமது எதிராளியாக சாத்தான் மீது கைகாட்டுகிறார். *தேவ சத்தியங்களை முரண்களால் சூழ்ந்து தெளிவற்றதாக்க முயற்சிப்பது பிசாசின் யுத்தி. ஆண்டவருடைய மக்கள் சத்தியங்களின் முழுமையான பலனை அடைய முடியாதபடிக்கு அவைகளைச் சுற்றிலும் தடையானவைகளையும் முரணானவைகளையும் நிறுத்துவது அவனுக்குக் கை வந்த கலை* என்கிறார் அவர்.
இன்று கிருபையின் பிரசங்கியார்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் பிரின்ஸ் போன்ற வெற்றிகரமான பிரபலங்கள் கிருபையை மேம்படுத்திக் காட்டும் போக்கில் வேதம் காண்பிக்கும் மற்ற முக்கியமான சத்தியங்களைப் புறந்தள்ளி விடும் அபாயத்தில் இருக்கின்றனர் என்பதையே எனது ஆய்வு வெளிப்படுத்த முயல்கிறது. வேதம் எடுத்தியம்பும் தனிப்பட்ட பொறுப்புணர்வு, ஒழுக்கம் சார்ந்த கொள்கைகள் குறித்த அளவீடுகள் அதீத கிருபை பேசுகிறவர்கள் பார்வையில் எவ்வாறு காணப்படுகின்றன? என்கிற கேள்விக்கான விடையையும் காண விளைகிறது இந்த ஆய்வு.
கிருபையின் செய்தி தேவ பிள்ளைகளை மதத்தின் பிடியிலும் சுய கிரியைகளின் அடிமைத்தனத்திலும் இருந்து மீட்டு சிலுவையில் கிறிஸ்து நிறைவேற்றிய கிருபையின் செயலில் நம்பிக்கை வைக்கச் செய்ய வேண்டும் என்பதே. தற்போது கிருபையை வைத்து மிதமிஞ்சிப் போகும் போதகர்கள் சீர்திருத்தவாதிகளான மார்டின் லூத்தர், கால்வின் போன்றவர்களே கிருபையை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்று கருதுகின்றனர். அவர்கள் நீதிமான்களாகுதலைக் குறித்த சரியான புரிதலில் இருந்தாலும் பரிசுத்தமாகுதல் குறித்த சரியான புரிதல் அவர்களுக்கு இல்லை. அந்த வகையில் சீர்திருத்தவாதிகள் போதுமான சீர்திருத்தம் உடையவர்களாக இருக்கவில்லை என்கிறார்கள்.
அதீத கிருபைப் பிரசங்கங்கள் சமீப காலமாக சமுக ஊடகங்கள் வழியாக மிகத் தாராளமாக உலா வருகின்றன. இளைஞரைக் கவரும் வகையிலான பிரசங்க அணுகுமுறை, மக்களின் வசதிக்கேற்ப கவர்ச்சிகரமான செய்திகளைத் தருதல் போன்றவை காட்டுத்தீ போலப் பரவும் இந்தக் காலத்தில் இவை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை ஆராய வேண்டியது அவசியம். *கிறிஸ்தவ உலகில் இந்த உபதேசம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? தேவ ஆலோசனையில் முழுமையையும் போதிக்கிற ஒரு சபையாக இந்த உபதேசத்தை அணுகுவது எப்படி என்கிற கேள்விக்கான பதிலை நாம் கண்டுணர வேண்டியது மிக அவசியம்.*
*சினிமாப் பாடல்கள் கூட நாங்கள் பாடுவோம். ஆனால் பாவத்தைக் கண்டித்து உணர்த்த மாட்டோம் என்கிற போக்கு அதீத கிருபை வட்டாரத்தில் சகஜமாய்த் தோன்றுகிறது.* பரிசுத்தம் குறித்து சபையில் பேசினால் அந்த சபை நியாயப்பிரமாணம் பேசும் சபை. அது பழைய உடன்படிக்கைப் போதனை என்றெல்லாம் முத்திரை குத்துவது மிகவும் இயல்பான ஒன்று தான். இந்த அக்கறை இல்லாத அணுகுமுறை கட்டுப்பாடு இல்லாத வாழ்வுக்கு வழிவகை செய்து விடும் அபாயம் இருக்கிறது. கிருபையைக் குறித்த இத்தகைய புரிதல்கள் பலவகைகளில் வேதத்தின் முழுமையை அங்கிகரிக்கத் தவறுகின்றன. பழைய ஏற்பாடு குறித்த அவர்களது புரிதல்கள், புதிய ஏற்பாட்டிலும் தவிர்க்க வேண்டிய பழைய ஏற்பாட்டுப் போதனைகள் போன்ற விளக்கங்கள் எல்லாம் வேதத்தின் அடிப்படையில் ஏற்புடையது தானா? நமது சமகாலத்திற்கும் முன்பாக ஈராயிரம் ஆண்டுகால வேத போதனைப் புரிதல்களின் தொடர்ச்சியாகவே இந்தப் போதனை இருக்கிறதா என்கிற கேள்விகளை எழுப்பி நாம் பதில் பெற வேண்டியது அவசியம்.
அடிப்படையில் சந்தேகத்திற்குரிய பல கேள்விகளை இந்த உபதேசம் எழுப்பினாலும் ஏன் அநேகர் இதில் ஈர்க்கப்படுகிறார்கள்? இந்த செய்தி எங்களுக்குப் புதிதாக இருக்கிறது. விடுதலை உணர்வைத் தருகிறது. நவீன வாழ்வு முறைகளைப் பிரதிபலிக்கிறது. கேட்கிறவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. இந்த செய்தியைப் போதிக்கிறவர்கள் நவநாகரீக வியாபார நுணுக்கங்களை தங்கள் பிரசங்க பீடங்களிலும் சபைகளிலும் அருமையாய் நடைமுறைப்படுத்துகின்றனர். கடந்த சில தசாப்தங்களில் பெரும்பாலான செய்திகள் தனி மனித மகிமையைப் புனிதப்படுத்தி விட்டன. சுயத்தை வெறுப்பது, சத்தியத்திற்கேற்ற பரிசுத்த வாழ்வு, மெய்யான சீஷத்துவம் போன்றவை அலமாரிகளில் பார்வைக்கு வைக்கப்பட வேண்டிய தூசி படிய மட்டுமே தகுதியான பாரம்பரியக் கருத்துக்கள். அவை இந்தக் காலத்துக்கு உதவாத போதனை என்கிற பாங்கு பெருகி வருகிறது.
கிருபைப் பிரசங்கிகள் என்று தங்களை மேன்மையாக அழைத்துக்கொள்பவர்கள் மற்ற சபை போதனைகளை நியாயப்பிரமாணப் பிரசங்கம் என்றும் குற்ற உணர்ச்சிகளைத் தூண்டும் அடிமைத்தன முயற்சி என்றும் கிரியைகளை மட்டுமே நம்பி இருக்கும் போதனைகள் என்றும் பட்டம் சூட்டி அகமகிழ்கின்றனர். சபைக்கு ஒழுக்கம் சம்பந்தப்பட்ட புத்திமதிகளே அவசியமற்றது என்பது போன்ற தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்துவதில் காணும் வெற்றி ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதையும் நாம் கவனித்தில் எடுக்க வேண்டியது முக்கியம். இவர்களை ஏற்றுக்கொள்ளாத மற்ற சபைகள் வெறும் மனித நியமங்களையும் பாரம்பரியக் கட்டுகளையும் மட்டுமே போதிக்கின்றன என்பது அவர்களின் சாடல்.
ஒரு நவீன கிருபை பிரசங்கியார் பழைய ஏற்பாடு கிறிஸ்தவ வேதாகமத்தில் இருப்பதை மிகப்பெரிய தவறாக நினைக்கிறார். பழைய ஏற்பாட்டின் எந்தச் செய்தியும் இன்றைய விசுவாசியைக் கட்டுப்படுத்தாது. ஏன், புதிய ஏற்பாட்டில் கூட சிலுவைக்கு முன்னால் உரைக்கப்பட்ட போதனைகள் நமக்கு உரியவைகள் அல்ல! கிருபைக்கும் நியாயப்பிரமாணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரமாண விரோதப் போக்கு இவர்களின் எழுத்துக்களிலும் பேச்சுகளிலும் மேலோங்குகிறது. இந்த அளவிற்கு நியாயப்பிரமாணம் என்பது மிக மோசமான, சொல்வதற்கும் தகுதியில்லாத ஒன்றாகப் பார்க்க வேண்டியதாகப் பவுலோ மற்ற அப்போஸ்தலர்களோ எழுதினார்களா?
எந்த நிபந்தனையும் இல்லாமல் கிறிஸ்து உங்களை நேசிக்கிறார். ஏற்றுக்கொள்கிறார் என்கிற செய்தி உண்மையில் விசுவாசிக்கு அருமருந்தாக அமைகிறது. எனினும் அவர் நம்மில் நிபந்தனை அற்ற அன்பு வைத்திருக்கிறார் என்கிற நம்பிக்கையின விளைவாக நாம் பரிசுத்தத்தில் வளர வேண்டிய அவசியமே இல்லை என்று சாதிக்க என்ன அவசியம் இருக்கிறது? ஒரு விசுவாசி கிறிஸ்துவுக்குள் பரிபூரணமாய் இருக்கிறான். தேவன் அவனைப் பார்ப்பது கிறிஸ்துவைப் போன்றே பார்க்கிறார் என்பதால் அவன் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரமாய் நடக்க வேண்டும் என்று போதிப்பதே தேவையற்றதாகக் கருதுவது எந்த வகையில் ஏற்புடையதாக இருக்கும்?
அதீதக் கிருபை உபதேசிகள் ஒழுக்கக்கேடான வாழ்வை ஊக்கப்படுத்தவில்லை. அதிலும் அநேகர் இந்த உபதேசத்திற்குப் பின்பு தான் தாங்கள் அதிகம் பரிசுத்தமாக வாழ்வதாகவும் அதிகம் ஆண்டவரிடம் நெருங்கி வாழ்வதாகவும் சான்று பகிர்கின்றனர். அவ்வாறு நடந்தால் அது பாராட்டப்படத்தக்கதே. அதே வேளையில் கண்டிக்க வேண்டிய கடமையை நான் செய்யாமல் வெறுமனே உற்சாகமூட்டும் கிளர்ச்சி செய்திகளை மட்டுமே நாம் கொடுத்துக் கொண்டே இருந்தால் விசுவாசிகள் மனந்திரும்பாமல் பாவத்திலேயே தொடர்வதற்கான வழிமுறையை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறதே?
*செழிப்பையும் இணைத்துக் கொண்டு பயணிக்கும் இந்த அதீதக் கிருபை செய்தி வேதம் போதிக்கும் சீஷத்துவம் பரிசுத்தமாகுதல் மற்றும் அருட்பணியின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது*.
*தொடரும் ….*
Pr. Gabriel Antonyraj
9486496706
8838529163