10/01/2026
திருப்பாவை பாசுரம் - 26
**********************************
ஶ்ரீராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.
தனியன்கள்:
நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம்
உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்
ஸித்தம் அத்யா பயந்தீ
ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்
யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
பூய ஏவாஸ்து பூய :
அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்த சுடர் கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்! - நாடி நீ
வேங்கடவற்கெம்மை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு
********************************
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வன வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
**************************************
விளக்கவுரை:
ஆண்டாள், 'மாலே மணிவண்ணா', என்றழைக்கிறாள். இதன் பின்னர் வரும் வரிகளுக்கு பூர்வாச்சார்யர்கள் சொல்லும் விளக்கம் கருத்தில் கொள்வோம்.
'மேலையார் செய்வன வேண்டுவன கேட்டியேல்' - அதாவது அடியார்களை உன் மீது மயக்கங்கொள்ளச் செய்த மாலவனே, நீலமணி கண்ணனே, எங்கள் உத்தமபுருஷர்கள், குலப் பெரியோர் நீண்ட காலமாக கடைபிடித்து வந்த காரணத்தாலே, நாங்களும் இந்த மார்கழி நீராடலைத் தொடர்கிறோம். ஆதலால், நாங்கள் மேற்கொள்ள இருக்கும் நோன்புக்குத் தேவையான பொருட்கள் தேவைப்படுகிறது.
அது யாதெனில், இந்த உலகமனைத்திலும் உள்ள அடியார் களுக்கு ஞாலத்தையும், துஷ்டர்களுக்கு பயத்தையும் உண்டு பண்ணக் கூடியதான உன் பாஞ்ச சன்னியம் போன்ற சங்குகள் வேண்டும். பெரிதான பேரிகைகள் வாத்தியங்கள் வேண்டும். திருப்பல்லாண்டு பாடுபவர்களையும், விடியற்காலை என்பதால், இருள் விலக்க மங்கள தீபங்களையும், நோன்புக்கு வந்து கொண்டிருக்கிற பேர்களுக்கு தொலைவிலேயே இடத்தை அடையாளம் சொல்லத்தக்க கொடிகள் வேண்டும். இவற்றை யெல்லாம் குடையாகக் காக்க கூடிய மேல்விதானம் வேண்டும், இவை களையெல்லாம் பிரஸாதித்து அருள வேணும், என்று ஒரு பெரிய பட்டியலையே வேண்டுகிறார்கள்.
ஆச்சார்யர்கள் இன்னும் அழகாய் மேலும் உரை எழுதுகிறார்கள். ஆச்சர்யமான விளக்கங்கள்.
கண்ணன் கேட்கிறானாம், "ஆமாம், இதெல்லாம் வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தெரியும், இதெல்லாம் மேலையார் செய்வனகள் ஆயிற்றே", என்றானாம்.
அதற்கு நோன்பிருப்போர் சொல்கிறார்கள், " எங்களுடைய பூர்வாசார்யர்கள் செய்தவைகள் எங்களுக்கு தெரியும், அதனால் அவைகளையே அருள வேண்டும்", என பதிலளிக்கிறார்கள்.
வியாக்கியானத்தில் இந்த இடத்தை பூர்வாசார்யர்கள் அழகாக விளக்கியிருக்கிறார்கள். இவர்கள் கேட்டபடி, கண்ணன் பதிலளிக்கிறான்.
"என்னிடம் பாஞ்சசன்யம் ஒன்றுதான் இருக்கிறது, அதன் ப்ரபாவங்களுக்கு ஈடாக இன்னொன்றில்லை, அதை எடுத்துக்கொள்ளுங்கள்.
நோன்பிருக்கும் பாவையர் சொல்கிறார்கள், "மணிவண்ணா, நீ தருவதாகச் சொல்வதெல்லாம் ஒன்றுதானே இருக்கிறது. எங்களுக்கு இதுமாதிரி பல வேண்டும் என்று இவர்கள் கேட்க,
அவன் இல்லாததை எப்படி தருவது என்று திகைக்க, இவர்கள் சொல்கிறார்கள். உன்னிடம் இல்லாதது என்று ஒன்று உண்டா? ஆலினிலையாய்! ஞாலமேழும் உனக்குள் கொண்டு ஆல இலையில் சிறு குழந்தையாக துயில் கொண்டவனாயிற்றே நீ! இருப்பது இல்லாதது எல்லாவற்றையும் கடந்து ‘இல்லாததையும்’, ‘இருப்பதையும்’ உண்டு பண்ணுபவனாயிற்றே நீ, உன் அருளாலே எல்லாம் முடியும் என்று சொல்கிறார்கள்.
பகவான் சொல்கிறானாம், " நான் உங்களுடன் கூத்தாடின பறை இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள். பல்லாண்டு பாடின விஷ்ணு சித்தரே இருக்கிறார். அந்த பெரிய ஆழ்வாரை ஆசார்யானாக வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு நப்பின்னையே கோல விளக்காக உங்களை காட்டித் தருகிறாள். அவளை எடுத்துக் கொள்ளுங்கள். என் கருடன் ஆரோகணித்த கொடி இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள். விதானத்துக்கு என் உத்தரீயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்", என்கிறானாம்.
தன்னுடைய வஸ்துக்களையும் பகவான் கொடுக்க ஆரம்பித்தானாம்.
*****************************************
தேசிகர் பிரபந்தம்:
வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
துழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறைந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே
வேதப்பிரான் பட்டர் அருளியது:
கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர்; நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான் மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு
மணவாளமாமுனிகள் அருளியவை:
இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோ மனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு
அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே
ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!