10/03/2015
சுந்தரமூர்த்தி நாயனார்
ஏழாம் நூற்றாண்டில் அவதரித்த எம்பெருமான் சுந்தரமூர்த்தி நாயனார் ஒவ்வொரு தலமாக சேவித்துக் கொண்டு திருக்கச்சூர் வந்தார். மருந்தீஸ்வரரை வணங்கி கிரிவலம் வந்த சுந்தரர் தாழக்கோயிலுக்குச் சென்றார். மருந்தீஸ்வரர் நம்மை வணங்கிச் சென்ற சுந்தரன் பசியோடு செல்கிறான். நண்பகல் ஆகிவிட்டது. எனவே சுந்தரர் பசியை போக்க வேண்டும் என எண்ணிணார்.
தாழக்கோயில் நடை சாத்தி இருந்தது. கோயில் வெளியில் இருந்த கல்லால மரத்தின் கீழ் அமர்ந்தார். சிவபெருமான் அந்தணர் வேடம் பூண்டார். சுந்தரா இங்கேயே இரும். சோறு இரந்து வருகிறேன் என்றார். சிவபெருமான் அடியார்கள் வீடு தோறும் யாசித்து உணவு கொண்டு வந்து சுந்தரருக்கு உணவளித்தார். சுந்தரர் பசி ஆறினார். இந்த உணவில் மேலான ருசி உள்ளதாக தெரிகிறதே! என்று நினைத்தபடி குளத்தில் கை கழுவி விட்டு பெரியவருக்கு நன்றி சொல்ல திரும்பினார். அவர் அங்கு இல்லை. வயதானவராக வந்தவர் சிவபெருமான் என்று உணர்ந்து கதறினார். எளியவனுக்காக சுடும் வெய்யிலில் கச்சூர் மனைதோறும் நடந்தீரா என்று கதறினார்.
“முதுவாய் ஓறி கதற முதுகாட்டு ஓறி கொண்டாடல் முயல்வானே” என்று தொடங்கும் பாடல் பத்து பாடல் பாடினார். தலப்பெறுமையை மிகவும் சிறப்பான முறையில் எடுத்துச் சொல்லும் பாடல். காலத்தால் கடவுளின் புகழ் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக நால்வரைக் கொண்டு தலப்பாடல் மூலம் தன் அருளை பரப்பியுள்ளார். விருத்த காஞ்சியும் சுந்தரால் பாடல் பெற்ற தலம் என்ற புகழ் பரவியுள்ளது. அவர் பாடலில் மருந்தீஸ்வரரை அனைத்து தலத்திற்கு மணிமகுடம் போன்றவர் என்றும், உன் அருளைக் கொண்டு அனைத்து தலங்களும் உருவாகின என்றும், சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்த தலம் என்றும் காலையில் எழுந்தவுடன் உங்களை நினைப்பவர்கள் குறையை நீக்குபவர் என்றும் பாடியுள்ளார். மூன்று பாடல் மலைக் கோயிலையும், ஏழு பாடல் தாழக் கோயிலையும் ஊரின் பெருமையையும் பாடியுள்ளார்.