23/04/2022
அன்பான கத்தோலிக்க இறைமக்களே... உங்கள் உள்ளங்களைத் தொடும் ஒரு கேள்வி...!!!
நமது ஆலயங்களில் உள்ள தூயகம் (பலிபீடம்) என்பது வெறும் ஒரு அலங்கார மேடையா...????
"ஐயையோ!!!! இப்படி அபத்தமான கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்?
பலிபீடம் என்பது எவ்வளவு பரிசுத்தமானது.. கல்வாரி நாயகனாம் கிறிஸ்து இயேசுவின் பலிபீடமும், ஆலயமும் கத்தோலிக்க இறைமக்களாகிய நமக்கு உயிருனும் மேலானது. அதனை நீங்கள் அலங்கார மேடையா என்று கேட்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!!!" -என்று நீங்கள் எல்லாரும் இணைந்து குரல் கொடுப்பது நமக்கு தெளிவாக கேட்கத் தான் செய்கிறது...!
அப்படியானால் தெரிந்தே தான் நாம் தவறு செய்கின்றோம். பரிசுத்தமான பலிபீடத்தை மறைத்து, தேவைக்கு அதிகமாக அலங்காரப் பூக்களை வாங்கி அலங்காரம் வைத்து விட்டு, அழகாக ஒவ்வொரு கோணங்களில் நின்று கொண்டே விலையுயர்ந்த கைப்பேசிகளில் சுயமி (செல்ஃபி) எடுத்து அழகு பார்க்கின்றோம். திருப்பலி நிறைவேறிய உடனே பரபரப்பாக சென்று அனைத்து பூக்களையும் எடுத்து பத்திரமாக ஃப்ரிட்ஜில் அடைத்து வைத்து, அதனை அடுத்த ஞாயிறு எடுத்து வந்து மீண்டும் பீடத்தில் வைத்து அழகு பார்க்கின்றோம். இந்த அழுகிய பூக்கள் வேண்டும் என்று இறைவன் நம்மிடம் கேட்டாரா என்ன...! பின்னர் யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த ஆர்ப்பாட்டம்...!!
நம்முடைய இல்லங்களில் உள்ள பூக்களையோ அல்லது அளவாக பூக்கடையில் வாங்கி வந்தோ, பீடத்தை எளிய முறையில் அழகு படுத்தலாம்.
மேலும் தேவையில்லாமல் பதாகைகளை அடுக்கி வைத்து பலிபீடத்தின் பரிசுத்தத்தை களங்கப்படுத்தாதீர்.!
பலிபீடத்திற்கு முன்னர் தேவையில்லாமல் கூடுவதையும், கைப்பேசிகளில் பேசிக் கொண்டு திரிவதையும் தவிர்ப்போம். அலங்காரம் என்னும் பெயரில் அழுகிய பூக்களையும், தேவையற்ற அலங்காரங்களையும் பீடத்தில் வைப்பதை நிறுத்திக் கொள்வோம்.
முக்கியமாக நமக்கு இருக்கும் கலைஞானத்தை பீடத்தில் காட்டுகிறேன் என்ற பெயரில், ஏராளமான பொருட்களைக் கொண்டு பீடத்தை அடைத்துக் கொண்டு, கலைமேடையாக மாற்றுவதை மாற்றிக் கொள்வோம். நமது கலைத் திறமைகளை வெளிக் கொணர்வதற்கென ஆலய விழா, கலைவிழாக்கள், விவிவிலிய விழாக்கள் எனப் பல உண்டு. அவற்றில் திறமைகளை பயன்படுத்திக் கொள்வோம்.
முக்கியமாக ஆலயத்தினுள் அமைதி காப்போம். அரட்டைகளை வெளியே வைத்துக் கொள்வோம்.
பலிபீடம் அது "பரிசுத்தமான இடம்" என்பதை என்றும் மனதில் நிலைநிறுத்திக் கொள்வோம்.
இப்பதிவு எவரையும் குறைகூறுவதற்காக அல்ல. குறைவு படாமல் வாழ்வதற்காகத் தான். நன்றி...!!!
“விண்ணகம் என் அரியணை; மண்ணகம் என் கால்மணை; அவ்வாறியிருக்க, எத்தகைய கோயிலை நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்?"
திருத்தூதர் பணிகள் 7:49