10/12/2021
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
*ஆடி காரும் ஆசாரியனும்*
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Forwarded message
ஒரு ரூபாய் கூட இல்லாமல் ஊழியத்திற்கு வந்தேன். என் ஆரம்ப ஊழிய நாட்களில் சாப்பிட கூட வழியிருக்காது. ஆனால் என்னை அழைத்த கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் என்னை உயர்த்தினார். இன்று எனக்கு ஆடி கார் வாங்க கூடிய அளவிற்கு கர்த்தர் பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றார் என்ற சாட்சி அநேக வாலிபர்களை உற்சாகப்படுத்துகின்றது. இன்னும் அநேகர் ஊழியத்திற்கு வரத் தூண்டுகின்றது.
*ஆனால் இதைவிட வல்லமையான சில சாட்சிகளைப் பாருங்கள்.*
துருபாய் அம்பானியைப் பாருங்க, அவர் ஏமன் நாட்டில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்தவர். இந்தியாவிற்கு வெறும் 500 ரூபாயோடு திரும்பி வந்து பாடுபட்டு உழைத்து, வியாபாரம் செய்தார். அவர் சாகும் போது அவருடைய சொத்து மதிப்பு 7500 கோடி ரூபாய்.
ரமேஷ் பாபு, ஒரு முடி வெட்டும் வேலை செய்பவர். 1994ம் வருடம் கஷ்டப்பட்டு ஒரு மாருதி வேன் ஒன்றை வாங்கினார். 2004ம் வருடம் அவர் 7 கார்களுடன் டேக்ஸி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். 2014 ம் வருடம் 200 கார்களுடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். தற்போது BMW, Jaguar, and Rolls Royce போன்ற கோடிக்கணக்கான மதிப்புள்ள ஏராளமான கார்களை வைத்துள்ளார்.
சீனாவில் ஜேக் மா என்ற நபர் தன் வாலிப வயதில் எங்கும் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டார். பின்னர் அவர் ஆரம்பித்த China Yellow Pages, Alibaba போன்ற கம்பெனிகள் வளர்ந்து பெருகி இன்று 4 லட்சம் கோடிக்கும் அதிகமான பணத்தின் அதிபதியாயிருக்கின்றார்.
*இன்னும் பிச்சைக்காரன் போலிருந்து கோடீஸ்வரனான லட்சக்கணக்கானோர் உலகில் உண்டு.* பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு. நம் தமிழ் நாட்டின் இன்டர்நெட் புகழ் ஜி.பி. முத்து கூட ஆடி கார் வாங்கியிருக்கார் என்றால் பாருங்களேன். அவர் எப்படி சம்பாதிக்கிறார் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
*வியாபாரம் செய்து பணக்காரராவதில் தவறில்லை.* பெரிய அளவில் விலையுயா்ந்த ஆடைகளை வியாபாரம் செய்துகொண்டிருந்த லீதியாள் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளையான பின்பாக அவள் வியாபாரத்தை விட்டுவிட்டதாக வேதத்தில் எழுதப்படவில்லை. அவள் உலகமெங்கிலும் இரத்தாம்பர ஆடைகளை ஏற்றுமதி செய்யும் மிக செல்வந்தனான மனுஷியாயிருந்தாள் என்று வேதப் பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.
*ஆனால் ஊழியம் என்பது கர்த்தருக்கு செய்யும் சேவை. ஊழியம் என்பது நமது பணத்தை, வசதியை, உரிமையை அனைத்தையும் இழக்க ஒப்புக் கொடுக்கும் இடம். இது பணம் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு வழி அல்ல.*
*இன்று ஊழியத்தை பணம் சம்பாதித்து வாழ்க்கையை நடத்தும் ஒரு வழியாக எண்ணுவதால் தான் ஊழியங்களுக்கிடையே போட்டி பொறாமைகள் காணப்படுகின்றது. அவரவர் தங்கள் தங்கள் ஊழியங்களை பிரபலப்படுத்த முயற்சிக்கின்றார்கள்.*
கார்ப்பரேட் சாமியார்களின் சொகுசு வாழ்க்கை கலாச்சாரம், இன்று ஊழியர்களிடமும் காணப்படுகின்றது. 50000 பெறுமான கோட் சூட்டுடன், ஒரு லட்சம் பெறுமான வாட்ச் கட்டிக் கொண்டு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காரில் வருவதை கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதமாக எண்ணுகின்றார்கள். இது தவறு. சொகுசு வாழ்க்கை என்பது, நாம் நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதுதானே தவிர, தேவன் தருவது அல்ல.
*ஆதிசபையை கவனித்துப் பாருங்கள். அங்கு குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தில் செல்லும் இராஜரீகமாய் செல்லும் ரோம அதிபதிகள் மத்தியில், பவுல் அப்போஸ்தலன் வாழ்ந்த வாழ்க்கையை பாருங்கள்.* செல்வந்தனாய் அதிபதிகள் மத்தியில் வாழ்ந்த பவுல் அப்போஸ்தலன், ஊழியத்திற்கு வந்த பின்பு சொல்கின்றார், ஆகிலும், *எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்... அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.* (பிலி. 3:7,11)
*பணம் பொருள் எல்லாவற்றையும் வெறுத்து, தியாகமாய் ஊழியம் செய்த அவர்கள் ஊழியத்தில் வல்லமையிருந்தது. பெரும் அதிபதிகள், செல்வந்தர்கள் அவர்களை தேடி வந்தார்கள்.* ரோம போர்த்தளபதியான கொர்நெலியு, ஒன்றுமில்லாத பேதுருவிடம்தான் வந்து தன் குடும்பதிற்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்கின்றான். சிறைச்சாலைத்தலைவன், கைதியான பவுலிடம் மண்டியிட்டு இரட்சிக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும் என்று கெஞ்சுகின்றான். பின் நாட்களில் முழு ரோம அரசாங்கமும், சபையின் வல்லமைக்கு முன்பு தன்னை தாழ்த்தினது.
பெரும் செல்வந்தர்கள் தங்கள் பெரும் செல்வங்களை ஊழியத்திற்காக கொடுத்த போது, பேதுரு பவுல் போன்ற ஊழியர்கள் அதை அப்படியே ஊழியங்களுக்காக கொடுத்து விட்டார்கள். *ஊழிய பொருளாதார வளர்ச்சியும், ஊழியருடைய பொருளாதார வளர்ச்சியும் ஒரே நேர்கோட்டில் இருக்கவில்லை.*
*கர்த்தருக்கு ஊழியம் செய்பவர்களுக்கு பொருளாசை வருமானால், ஊழியத்தில் உண்மையிருக்காது.* அத்தனை திரளான செல்வங்களை படைத்தளபதி நாகமான் கொடுத்த போதும், எலிசா அதை நிராகரித்தான். அதனால் *நாகமான் படைத்தளபதியாயிருந்தாலும் எலிசா அவனுக்கு முன்பாக தலைநிமிர்ந்து நின்றான். நாகமான் விருப்பப்படியெல்லாம் எலிசா தலையாட்டிக் கொண்டிருக்கவில்லை.*
*ஆனால் செல்வங்களுக்கு ஆசைப்பட்ட பிலேயாம், பாலாக் ராஜாவினித்தில் சென்று தலைகுனிந்து நின்றான்.*
பணத்தை வைத்து கடவுளை விலைக்கு வாங்க இன்று உலகில் அதிகம் பேர் முயற்சிக்கின்றார்கள். பேதுருவிடம் வந்த மாயவித்தைக்காரன் சீமோனைப் போல் பணத்தைக் கொடுத்து, தேவ ஆசீர்வாதத்தைப் பெற எண்ணுகின்றார்கள். அவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பூனைக் குட்டியைப் போல் அவர்கள் கால்களில் கிடந்தால் ஊழியர்களும் சொகுசு வாழ்க்கை வாழலாம்.
*ஆனால் அவர்கள் பணத்திற்கு ஆசைப்படாமல், வேதத்தின்படி அவர்கள் பாவங்களை கடிந்து கொண்டால், கர்த்தருக்கு உண்மையாய் ஊழியம் செய்யலாம். தலைநிமிர்ந்து வாழலாம். இறுதியில் உண்மையுள்ளவன் என்று கர்த்தரிடம் பெயர் பெறலாம்.*
*ஊழியருக்கு கோடிகள் வந்தால், விமானம் வாங்க வேண்டும் என்று அர்த்தமில்லை.* கர்த்தரை அறியாத எத்தனையோ கோடி மக்கள் உண்டே அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்தலாம். சைக்கிளிலும், நடந்தும் ஊழியம் செய்யும் ஊழியர்களுக்கு பயன்படுத்தலாம். ஒழுகும் கூரையிலும், வாடகை கட்டிடங்களிலும் ஊழியம் செய்யும் சபைகளுக்கு உதவி செய்யலாம். *கர்த்தர் நமக்கு அதிக அளவில் பணம் கொடுக்கும் போது, நம் வாழ்க்கைத்தரத்தை அல்ல, நம் கொடுக்கும் அளவை உயர்த்த வேண்டும்.*
*அவனவனுடைய வேலைப்பாடு (ஊழியத்தின் உண்மை) வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று (கடைசி நாளில்) அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்;* (1 கொரி. 3:13-15)
*இன்று உலகலாவிய ஊழியம் செய்து கோடிகளை ஈட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது வைக்கோல் வீடாயிருந்தால் கடைசி நாளில் அக்கினியிலகப்பட்டு எரிந்து சாம்பலாகும்.*
*இன்று ஏதோ ஒரு கிராமத்தில் எளிய நிலையில் தியாகத்தோடு ஊழியம் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அது பொன்னினால் ஆன் வீடாயிருந்தால் கடைசிநாளில் அக்கினியிலகப்பட்டாலும் ஜொலித்து பிரகாசிக்கும்.*
*பணமும், வசதியும் ஊழியத்தின் நோக்கமாகவும், இலக்காகவும் இருக்குமானால் நம் ஊழியங்கள் அனைத்தும் வைக்கோல் வீடுகளே! ஆத்தும ஆதாயம் ஒன்றே நம் ஊழியத்தின நோக்கமும் இலக்காகவும் இருந்தால் மட்டுமே நம் ஊழியங்கள் பொன்னினால் ஆன வீடுகளாக இருக்க முடியும்.*
கர்த்தர் நம்மை உணர்த்துவாராக!