28/06/2019
ஆசீவகத்தை உருவாக்கியவர் மற்கலி என்பதை தமிழ் இலக்கியம், பௌத்தம், சைனம் ஆகிய மூன்று மரபுகளும் உறுதிசெய்துள்ளன. ஆனால், ஆசீவகம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அனைவரும் பௌத்த, சைன மரபுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதால், அந்த ஆய்வு ஒருதலைச் சார்பாக அமைந்துவிட்டது. தமிழ் இலக்கிய, நாட்டார் மரபுகளையும் சேர்த்து ஆராய்ந்தபோது, மற்கலிதான் தமிழ் மக்கள் வணங்குகிற ‘தர்ம சாஸ்தா’ (அய்யனார்களில் ஒருவர்) என்று உறுதிசெய்ய முடிந்தது. மகாவீரரும் மற்கலிகோசாலரும் ஒன்றாகப் பணியாற்றி, பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர் என்று சைன இலக்கியத்தில் குறிப்பு உள்ளது. மற்கலியின் ஆயுதம் செண்டாயுதம். நம் அய்யனார் கையில் இருப்பதுவும் அதுவே. பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று அறிய முடிந்தது. அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது. அவ்வூரில் சிவாலயமும், அய்யனார் கோயிலும் உள்ளன. சிவாலயத்தை நுட்பமாக ஆராய்ந்தபோது, அதுவும் ஆசீவக ஆலயமாக இருந்து பறிக்கப்பட்டதுதான் என்ற உண்மை விளங்கியது.
‘தர்ம சாஸ்தா’ வீடுபேறு அடைந்த இடமான சித்தன்னவாசலில், குகைக்குள்ளாக மூன்று சிலைகள் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தில் துறவியர் தொடங்கி போப் ஆண்டவர் வரையில் படிநிலைகள் இருப்பதுபோல, ஆசீவகத்திலும் வண்ணக் கோட்பாடு இருந்தது. கருப்பு, நீலம், பச்சை, செம்மை எல்லாவற்றையும் கடந்து கழிவெண் பிறப்பு (பரம சுக்ல) நிலையை அடைந்தவர்கள் இவர்கள் மூவரும். நடுவில் இருப்பவர் வேளிர் மரபில் பிறந்து சிற்றரசராக வாழ்ந்து, துறவியான அறப்பெயர் சாத்தன் (தர்ம சாஸ்தா). இரண்டாவது நபர் கிராமங்களில் பூரணம், பொற்கலை எனும் இரு மனைவியரோடு அருள்பாலிக்கிற பூரண அய்யனார். மூன்றாவதாக இருப்பவர் அடைக்கலம் காத்த அய்யனார் (பாண்டிய மன்னரின் படைத்தளபதியாக இருந்து துறவியானவர்).
ஆசீவகம் தாக்கப்பட்டபோது, ஓவியம் சிதைக்கப்பட்டது. இப்போது மலையடிவாரத்தில் மூன்று அய்யனாருக்கும் கோயில்கள் கட்டி வணங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆசீவகத்தின் வண்ணக்கோட்டுப் படிநிலை யின் குறியீடுதான் 18 படிகள். அந்த அடையாளத்தை முன்பு ஆசீவகத்தலமாக இருந்த திருச்சி திருவெள்ளறை, மதுரை அழகர்கோயில் முதலான இடங்களில் இப்போதும் பார்க்கலாம். சபரிமலை இப்போதும் சாஸ்தா கோயிலாகவே இருக்கிறது.
ஆசீவகம் - #கடவுள்_மறுப்புக்_கோட்பாடு
வானத்தையும் பூமியையும் உயிரினங்களையும் படைத்தது இறைவன் என்று மத நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால், ஆசீவகம் அணுக்கோட்பாட்டின் அடிப்படையில், தற்செயலாகவே உலகம் தோன்றியதாகச் சொல்கிறது. இதுகுறித்து ‘ஆசீவகம் எனும் தமிழர் அணுவியம்’ என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளேன். இந்தப் பேரண்டத்தின் தோற்றம், பெருவெடிப்பு, கருந்துளை பற்றியெல்லாம் அறிவியல் உலகம் 40, 50 ஆண்டுகளாகத்தான் பேசத்தொடங்கியிருக்கிறது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியமான பரிபாடலில் இதுபோன்றதொரு குறிப்பு உள்ளது.
◆“பாழ்பட்டுப்போன வெட்டவெளியில், அணு கரு நிலையில் இருந்தபோது ஏற்பட்ட பெரிய வெடிப்பின் காரணமாக வெப்பம் தோன்றியது. பிறகு காற்றும் தோன்றியது. வெப்பத்தின் மீது காற்று மோத மோதத் தீயாகியது. தீ எரிந்து எரிந்து அணையத் தொடங்கியபோது ஆவிப்படலம் மேகமாகப் படிந்து, அது குளிர்ந்து மழையாகப் பெய்தது”◆
என்கிறது #பரிபாடல். இதுதான் ஆசீவகத்தின் பேரண்டம் பற்றிய கோட்பாடு.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 90% கோயில்கள் ஆசீவக (ஆதிநாதர், ஸ்ரீ) கோயில்களாக இருந்து, பிற மதத் தலங்களாக மாற்றப்பட்டவையே. தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் எல்லாம் ஸ்ரீ என்ற திருநிலைக்கு (இன்றைய கஜலட்சுமி) தனி சன்னதி இருக்கிறதோ அவை அனைத்தும் ஆசீவக ஆலயங்கள்தான். அதேபோல எந்தெந்த சிவன்கோயில்களில் யானையை முதலை விழுங்குவது, சிங்கம் தாக்குவது போன்ற புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளனவோ அவை அனைத்துமே ஆசீவகத்திடமிருந்து பறிக்கப்பட்ட ஆலயங்களே..
- முனைவர் க.நெடுஞ்செழியன்
குறிப்பு : திகாம்பர சமணமத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதன் தான் நாம் வணங்கும் சிவன் ஆவர்.. ஆசீவகத்தில் இருந்து தனியே பிரிந்து சென்றது தான் சைவம்,வைணவம்,கௌமாரம் போன்ற சமயங்கள் ஆகும்.. இன்றும் ஆசிவகத்தின் முதல் தீர்த்தங்கரர் சிவன் தான்.. அதனால் இந்த சமய சண்டைகள் யாவும் கருத்து மோதலால் ஏற்பட்டவையே அன்றி வேறில்லை.. ரிஷபநாதன் (சிவன்) மற்றும் பார்சுவநாதன் (விஷ்னு) உட்பட யாவரும் தென்னகத்தே வாழ்ந்து மறைந்த தமிழ் அரசர்கள் மற்றும் வெண்பிறப்பு நிலை அடைந்த சித்தர்கள் என அறிக.. #அறிவோம்_ஆசீவகம்