18/12/2023
*விசுவாசியே இது உனக்கு நியாயமாகப்படுகிறதா?*
எங்கள் பாஸ்டர் காணிக்கையை கொள்ளையடித்து கணக்குக் காட்டாமல் ஆடம்பரமாக வாழ்கிறார், ஆனால் ஆதி திருச்சபையில் எளிமையாக அப்போஸ்தலர்கள் ஊழியம் செய்தார்கள் இவர்கள் என்று மாறுவார்களோ என கூப்பாடுபோடும் விசுவாசியே உன்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள்...
காணிக்கையை வாங்கிவிட்டார், ஏமாற்றிவிட்டார் என்று சொல்லுகிறாயே, நீ ஆடம்பரமான வாழ்க்கை வாழ விரும்பி காணிக்கையை வாரி இறைத்தாய், இப்போது நீயே அவரை ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார் என குற்றம் சாட்டுகிறாயே இது நியாயமா?
சாதாரணமாக சைக்கிளில் வரும் ஊழியர்களை ஏறெடுத்தும் பார்க்காத நீ, காரில் வந்து இறங்கும் பாஸ்டர்களை தெய்வமாக பார்த்து, ஆடம்பர கலாச்சாரத்திற்கு விதைபோட்டவனே நீதான், இப்போது நீயே அவரை குறை சொல்லுவது நியாயமா?
மேடையில் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ஊழியர் வந்துவிட்டால், சற்றும் மதிக்காத நீ, சொன்ன நேரத்தைவிட தாமதமாக, அதுவும் கைத்தடிகள் புடைசூழ மேடைக்கு வரும் ஊழினைத்தானே கரம் தட்டி வரவேற்று இமேஜ் அரசியல் நாடகத்திற்கு அடித்தளமிட்டாய், இப்போது நீயே அவரை ஆடம்பரவாளி என்கிறாயே இது நியாயமா?
வேதாகமத்தை கிரமமாகபோதிக்கும் சபைகளையெல்லாம் வேண்டாம், அறுவை, போர், உற்சாகமில்லை என விட்டுவிட்டு, உன்னை ஆடவைக்கவும், விழவைக்கவும், டச் மொபைலை மன்னிக்கவும் டச் பரிசுத்த ஆவியானவரை வாரி வழங்கும் ஆசாமிகளையும், மேடையில் புகைமூட்டத்துடன், இறந்துபோன மைக்கேல் ஜாக்சனே வந்துவிட்டானோ என எண்ணவைக்கும் ஆண்டவர்களையும், நீ உனக்காக சேர்த்துக்கொண்டவன் நீ, இப்போதோ அவர் அடம்பரமாக ஆட்டம் ஆடுகிறார், குத்தாட்டம் போடுகிறார் என குறை சொல்லுகிறாய் இது நியாயமா?
வீடுகளிலும் சாதாரண இடங்களிலும் கூடிவரும் சபையை அசட்டை பண்ணி உன் தகுதிக்கு தக்கவாறு மாடமாளிகைபோன்ற கட்டிடத்தை உடைய சபையை தேடி ஓடினாய், இப்போது அவர் வீடு ஆடம்பரமாக இருக்கிறது என குத்தம் சொல்லுகிறாய் இது நியாயமா?
மொத்தத்தில் அரசாங்கம் சீட்டு கம்பெனியில் பணம் போடவேண்டாம் என சொன்னாலும் ஏமாந்து பணத்தை இழக்கும் மக்கள் போல, வேதாகமத்தைத் துளியளவும் வாசிக்க பிரியமில்லாத நீ, ஒருவர் என்னை ஏமாற்றிவிட்டார் என கூப்பாடு போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை, உன் போதகர் தவறுகிறார் என்றால் ஒருவிதத்தில் நீயும் ஒருகாரணம் என்பதை என்று உணர்வாயோ….
*எல்லா கள்ளப்போதகனும் காணிக்கை கொள்ளையர்களும் விசுவாசிகளால்தான் நிலைத்து நிற்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்*
*சாலமன் திருப்பூர்*