Easuve Vasal Ministries

Easuve Vasal Ministries Ministry carrying the gospel to not reached places through TV, Magazine, Camps, Convention & Cottage

25/05/2026

இயேசுவே வாசல் ஊழியங்கள்,
கொளப்பாக்கம்,
சென்னை 127.

Mobile No. 9442323665 & 9789146640
Email ID: [email protected]

25.05.26.
இந்த வார தியானம்.

பொருள்: *கடைசிக்கால சம்பவங்கள்.*
தியானிக்கும் பகுதி: அப்போஸ்தலர் 2:17-21.

காலங்கள் கடைசி ஆயிற்று, நாம் விழிப்பாயிருப்பதும் அவசியமாயிற்று. தேவபக்தியுள்ள யூதர்கள் எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையிலே பலியான பஸ்கா திருநாளின் ஐம்பதாவது நாள் பெந்தெகொஸ்தே நாளாகும். அந்த நாளிலே அப்.1:5ம் வசனத்திற்குக் கீழ்ப்படிந்து எருசலேமிலே ஒரு மேல் வீட்டில் 120 பேர் கூடியிருந்தார்கள். அப்பொழுது யோவேல் தீர்க்கதரிசியால் கூறப்பட்ட தீர்க்கதரிசனத்தின்படி கூடி இருந்த அவர்கள், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். அவர்கள் கலிலேயர்களாய் இருந்தும், அவர்களைச் சுற்றி இருந்த 16 வகையான மொழி பேசுகிறவர்களின் மொழியிலே தேவனுடைய மகத்துவங்களைப் பேசினார்கள். அதைக் கண்டவர்களில் சிலர் ஆச்சரியப்பட்டார்கள்; சிலர் பரியாசம் செய்தார்கள். (அப்.2:12-13) இந்த சூழ்நிலையில் பரி.பேதுரு அப்போஸ்தலர் யோவேல் தீர்க்கரால் சொல்லப்பட்ட தீர்க்க தரிசன வார்த்தை இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது என்று கூடி வந்த தேவபக்தியுள்ள யூதர்களுக்கு உபதேசித்தார்.

அப்.2:17ம் வசனத்தில் மூன்று அற்புதமான காரியங்களை, மூன்று வேறுபட்ட பருவத்தைச் சார்ந்தவர்களால் செயல்படுத்தப்படும் என்று சொல்லுகிறார். இதன் அடிப்படையில் இக்காலங்களில் பல வாலிபர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள் என்று கேள்விப்பட்டு, கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும், ஐயா...! அம்மா...!! என்பிள்ளைக்கு வேலை கிடைக்குமா? திருமணமாகுமா? குழந்தை இருக்குமா? வியாதி தீருமா? என்று கேட்க ஓடுகிறார்கள். இப்படித் தேடிச் செல்லுகிறவர்களுக்கு, அவர்கள் பரவசத்தோடு சாதகமான பதிலைச் சொல்லி அனுப்புகிறார்கள். இவர்கள் சொல்லுவது தீர்க்கதரிசனமல்ல, ஒளியின்தூதனின் வேஷத்தைப் பெற்று ஜோசியம் சொல்லுகிறார்கள்.

குறிசொல்லுகிற ஆவியைப் பெற்றிருந்த ஒரு ஸ்திரீ, பவுலையும் சீலாவையும் நோக்கி, "இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்." இவர்களுக்கு 1கொரி.12:10ல் கூறப்பட்டுள்ள ஆவிகளைப் பகுத்தறியும் ஆவியின் வரத்தைக் கர்த்தர் கொடுத்திருந்தார். ஆகையால் அவர்கள் அவளைக் கடித்துக்கொண்டு அந்த ஆவியைத் துரத்தினார்கள். (அப்.16:17-18) நீங்களும் கடைசிக் காலத்தில் இப்பொழுது வாழ்கிறபடியால், பரிசுத்த ஆவியின் வரமாகிய இந்த வரத்தைப் பெற்றிருந்தால் மட்டுமே நீங்கள் தேடிச்செல்லும் தீர்க்கதரிசிகள் எந்த ஆவியை உடையவர்கள் என்று பகுத்தறிந்து, அவர்களை விட்டு விலக முடியும். அப்பொழுது பரிசுத்த வேதத்தில் அவர் உங்களுக்காக எரே.32:27 போன்ற வசனங்களை வெளிப்படுத்துவார். விழிப்பாயிருங்கள்.

வாலிபர்கள் தரிசனங்களை அடைவார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இப்பொழுது முதல்வராகி இருக்கும் இவரையே நான் தரிசனத்தில் கண்டேன். ஊடகங்களில் பல வாலிபர்கள் அறிக்கையிட்டிருப்பதைக் காண முடிந்தது. இவர் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவராய் இருந்திருந்தால், அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு உங்களைக்கொண்டு தரிசனமாக இதை அறிவித்திருந்திருக்கலாம்! இவர் ஒரு பெயர் கிறிஸ்தவர்தான் என்பது அவருடைய நடவடிக்கைகளில் இருந்தே விளங்குகிறதே. இது பரிசுத்த ஆவியானவர் காண்பிக்கும் தரிசனமல்ல, தனது நினைவில் மண்டிக்கிடக்கும் சுய நினைவின் தரிசனமாகும். பவுல் அப்போஸ்தலர் மக்கெதோனியா ஊழியத்தைப் பற்றி ஒரு தரிசனம் கண்டு, அதன்படி செயல்பட்டு, ஆத்துமாக்களை ஆதாயம் செய்தாரே அதுவே தரிசனம். (அப்.16:9-15) நீ வாழும் இந்தக் காலம் கடைசிக் காலமாய் இருக்கிறபடியால், ஜாக்கிரதைப்படு.

பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற சபையின் மூப்பர்கள் சொப்பனங்களைக் காண்பார்கள். இன்றையத் திருச்சபைகளிலே ஆவிக்குரிய வளர்ச்சி இல்லாமல் இருப்பதற்குக் காரணம், மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளாதிருப்பதுவே ஆகும். இந்த வசனப் போதனைப்படி மூப்பர்களைச் சபையில் ஏற்படுத்தி நடத்தப்படும் திருச்சபைகளில் ஆவிக்குரிய நிலமையில் நல்ல வளர்ச்சி இருப்பதும், சுவிஷேசம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிஷேசம் அறிவிக்கப்பட்டு, திருச்சபை இல்லாத பகுதிகளில் திருச்சபைகள் நிறுவப்படுவதும் தற்காலங்களிலும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அப்போஸ்தலர் 7ம் அதிகாரத்தில் வரும் ஸ்தேவான் போன்றவர்கள் திருச்சபைகளிலே மூப்பர்களாக இருக்க வேண்டும். அப்பொழுது திருச்சபையில் சுவிஷேச குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, சுவிஷேச ஊழியம் நடைபெறும். ஆத்துமாக்கள் ஆதாயம் செய்யப்பட்டு, சபை விருத்தியடையும்.

அப்.2:18ம் வசனத்திலே, "என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்." என்று ஆவியானவர் சொல்லியிருப்பதின் அடிப்படையிலேயே இன்று புராதன சபைகள் மற்றும் Evangelical Church of India (E C I ) போன்ற சபைகளில், பெண்களை ஆயர்களாகவும், பேராயர்களாகவும் நியமித்திருக்கிறார்கள். இந்த வசனத்தில் 'ஊழியர்கள்' என்று சொல்லப்பட்டிருப்பதின் பொருள், திருச்சபைகளிலே ஆலயத்தில் பணிசெய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் கோவில்பிள்ளை மற்றும் பல பணிகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளர்களையே குறிக்கிறது. இவர்களையும் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவர்களாகவே நியமிக்க வேண்டும் என்று போதிக்கிறார். அவர்களுக்கும் தீர்க்கதரிசன வரம் கொடுக்கப்படும். இவ்வாறாக நம்முடைய திருச்சபைகளின் ஒவ்வொரு கட்டமைப்பும் ஏற்படுத்தப்படுமென்றால், திருச்சபைகள் எத்தனை பரிசுத்தமுள்ளதாயும், ஒழுங்கும் கிரமுமானதாயும் இருக்கும். இதைக் காணும் வேறுமதத்தைச் சார்ந்தோரும் கிறிஸ்தவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டு, சபைகளிலே சேர்க்கப்படுவார்கள், இல்லையா? திருச்சபைகளின் நிர்வாகிகளே! சிந்தியுங்கள்.

அப்.2:19-20 வசனங்களிலே யோவேல் தீர்க்கதரிசியின் வெளிப்பாடும், மாற்கு 13:24ம் வசனத்தில் இயேசு தமது இரண்டாம் வருகையைக் குறித்துச் சொன்ன இறுதிகாலச் சம்பவங்களையும் ஆவியானவர் லூக்காவைக்கொண்டு சொல்லி, இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் இயேசுகிறிஸ்துவை மேசியாவாக விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரைத் தொழுதுகொள்ளுகிறவன் "இரட்சிக்கப்படுவான்" என்று போதிக்கிறார். பிரியமானவர்களே! பவுல் அப்போஸ்தலரைக்கொண்டு ஆவியானவர் சொல்லும் வார்தையைக் கவனியுங்கள், "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்." (2கொரி.6:2) காலந்தாழ்த்தாது இரட்சிக்கப்பட இயேசுகிறிஸ்துவுக்கு உங்களை இன்றே ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

நேசரின் பணியில் சகோதரன்,
N.SELVIN, EVM, CHENNAI 127.

18/05/2026

இயேசுவே வாசல் ஊழியங்கள்,
கொளப்பாக்கம்,
சென்னை 127.

Mobile No. 9442323665 & 9789146640
Email ID: [email protected]

18.05.26.
இந்த வார தியானம்.

பொருள்: *ஜீவபலியும், மறுரூபமடைதலும்.*
தியானிக்கும் பகுதி: ரோமர் 12:1-2.

இந்த இரண்டு வசனங்களிலும் கிறிஸ்தவர் அல்லது கிறிஸ்தவள் என்று அழைக்கப்படுவோர், தங்கள் சரீரத்தைத் தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்திருக்க வேண்டும் என்பதும், மறுரூபமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை வாசிக்க முடிகிறது. இதிலிருந்து, நம்முடைய சரீரத்திலே இருக்கும் ஆவியும் (உயிரும் - இரத்தத்திலே பார்க்க முடியாததாய்க் கலந்திருக்கும் ஒரு அணு) ஆத்துமாவும் (நம்முடைய சிந்தையிலே நன்மை தீமையை அரியத்தூண்டும் பார்க்க முடியாத ஒரு மரபணு) பரிசுத்தமுள்ளதாய் இருக்க வேண்டும் என்று கிறிஸ்தவ மார்க்கம் உபதேசிக்கிறது. அதேபோல நம்முடைய சரீரமும் பரிசுத்தமுள்ளதாய் இருக்கவேண்டும் என்றும் பரிசுத்த வேதம் ரோமர் 12:1லே போதிக்கிறது.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எருசலேம் ஆலயத்தில் மிருகங்கள் பலியிடப்பட்டன. அதேவிதத்தில், இன்றும் இந்து மதத்தில் அவர்கள் வழிபடும் தெய்வங்களுக்கு மிருகங்கள் பலியிடப்பட்டு வருகின்றன. அவைகள் யாவும் மரித்து விடுகின்றன. இதற்கும் மனிதன் தன் சரீரத்தை ஜீவபலியாக ஒப்புவிப்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். நம்முடைய சரீரம் ஏன் ஜீவபலியாகத் தேவனுக்கு ஒப்புவிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட வேண்டும் என்றால், ரோமர் 6:13ம் வசனத்தை வாசியுங்கள் விளங்கும். "நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்." நம்முடைய சரீர அவயவங்கள், தீமை செய்ய ஒப்புக்கொடுக்கபடாமல், நன்மை அல்லது நீதி செய்ய ஒப்புக்கொடுப்படுவதே, ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கப்படுவதாகும்.

இந்த ஜீவபலிக்கு அச்சாரமாகவே இயேசுகிறிஸ்து நிக்கோதேமுவுக்கு போதித்திருகிறார். "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால்..." (யோவான் 3:3) மறுபிறப்பு என்றால் என்ன என்பதையும் இயேசு அவனுக்குப் போதித்திருப்பதை யோவான் 3:5ம் வசனத்தில் வாசிக்கிறோம். "இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால்..." இதைத்தான் ஞானஸ்நானம் என்று இயேசு போதித்தார். இதன் மூலம் நம்மிலே நடைபெறும் நிகழ்வு என்ன? வாசியுங்கள் கொலோ.2:12 "ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்." அதாவது, ரோமர் 6:13லே இருந்த அநீதியான பாவ எண்ணம், சிந்தை, செயல்போன்ற அசுத்தத்திற்கு கிறிஸ்துவோடேகூட மரித்து, நம்முடைய விசுவாசத்தினாலே நீதி செய்யும்படியாய் இயேசுகிறிஸ்துவோடே உயிரோடே எழுந்திருக்கவும் செய்கிறோம். நம்முடைய சரீரம் ஞானஸ்நானத்தினாலே மரித்தது, ஆனால் சாகாமல் உயிர்த்தது. இதுதான் நாம் தேவனுக்கு அனுதினமும் செலுத்த வேண்டிய ஜீவபலி. இவ்வாறு செய்வதுவே சீரான கிறிஸ்தவ வாழ்க்கையாகும். இவர்களே கிறிஸ்தவர்களாவார்கள். உங்களை நீங்களே நிதானித்து ஆராய்ந்து கொள்ளுங்கள்.

கிறிஸ்தவர்களாகிய நம்மிலே பலர் எண்ணுவதுண்டு, இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலே நாம் மறுரூபாகி, அவரோடு பரலோக ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். ரோமர் 12:2ம் வசனத்திலே ஆவியானவர் போதிக்கிறார், நாம் இந்த உலக வாழ்க்கையில் வாழும்போதே மறுரூபமாக வேண்டும். இந்த அனுபவத்தை நாம் பெற்றுக்கொள்ள முதலாவது அவர் கூறுவது: "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்," இப்பொழுது இந்த டிஜிட்டல் நாகரீகத்திலே சிக்குண்டு, இரட்சிக்கப்படாத பிறரைப்போல, இரட்சிப்பும் வேண்டும்; இந்த உலகத்தின் டிஜிட்டல் நாகரீகமும் வேண்டும் என்று ஆடை அலங்காரத்திலும், அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதிலும் உலகத்திற்கு இசைந்திருக்கிறார்களே இதுதான் உலகத்திற்கு ஒத்தவேஷம் தரிப்பதாகும். இப்படியான நீ மறுரூபமாக்கப் பட்டவனாய், பட்டவளாய் இயேசுவே கர்த்தர் என்று இந்த உலகிற்குக் காண்பிக்க முடியாது. நீ கிறிஸ்துவை இந்த சமுதாயத்திற்குக் காண்பிக்க விரும்பினால், கிறிஸ்துவைத் தரித்துக்கொள்.

ரோமர் 13:2ன் இறுதிப் பகுதியில் பரிசுத்த ஆவியானவர் பவுல் அப்போஸ்தலரைக்கொண்டு சொல்லுகிறார், "உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." நம்முடைய மனம் எத்தகையது? "இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்." (மத்.15:19) இதிலிருந்து மாசற்றவனாய் ஜீவிக்க, "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்;" (கலா.2:20) இந்த அனுபவத்தை நீ பெற்றுக்கொள்ளும்போது உன்னுடைய மனதின் எண்ணங்கள் எல்லாம், மறுரூபமாக்கப்பட்ட எண்ணங்களாக மாற்றப்படுகிறது. உன்னில் இந்த மரூபத்தைக் காணும் யாவரும் இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவார்கள். குடும்பத்தில், சமுதாயத்தில், சபைகளில் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; போன்ற நற்பண்புகள் ஏற்படும். உங்கள் எண்ணங்கள் எல்லாம் மாற்றப்பட நீங்கள் ஆயத்தமா! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

நேசரின் பணியில் சகோதரன்,
N.SELVIN, EVM, CHENNAI 127.

11/05/2026

இயேசுவே வாசல் ஊழியங்கள்,
கொளப்பாக்கம்,
சென்னை 127.

Mobile No. 9442323665 & 9789146640
Email ID: [email protected]

11.05.26.
இந்த வார தியானம்.

பொருள்: *கலக்கத்தில் ஆறுதல் செய்யும் தேவன்.*
தியானிக்கும் பகுதி: ஏசாயா 41:8-13.

இயேசுகிறிஸ்துவின் பரிசுத்த ரத்தத்தினால் கழுவப்பட்டு, அவரை இரட்சகர் என்று விசுவாசித்து ஏற்றுக்கொண்ட அனைவரும் தேவனின் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே. ஏசாயா 41:8ம் வசனத்தில் 'யாக்கோபே' என்று தேவன் அழைக்கிறாரே இவர் ஒரு கொடிய பாவி என்பதை நாம் யாவரும் அறிவோம். தன்னுடைய மாமாவை ஏமாற்றி, தனக்கான பொருள்களையும் மனைவிகளையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, சகோதரனாகிய ஏசாவைச் சந்திக்கவரும் வேளையிலே, தேவனிடத்தில் அவனுடைய பாவங்களையெல்லாம் அறிக்கை செய்து பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டான். ஆகவே தேவன் அவனுக்கு "இஸ்ரவேல்" என்று பெயர் சூட்டினார். (ஆதி.32:22-29)

பிரியமானவர்களே! நீங்களும் இப்பொழுது இந்த சந்தர்பத்திலாவது, உங்கள் பாவங்கள், அக்கிரமங்கள் யாவற்றையும் இயேசுகிறிஸ்துவிடம் லூக்.19:8ம் வசனத்தில் அறிக்கை செய்ததுபோல அறிக்கை செய்து விட்டுவிட்டால், உங்களையும் பார்த்துச் சொல்லுவார், "இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே." (லூக்.19:9) இப்படி நீங்கள் ஆபிரகாமின் குமாரனாய், குமாரத்தியாய் மாற்றப்பட்ட பின்பு கர்த்தர் சொல்லுவார், "...நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்." (ஏசாயா 41:9)

உங்கள்மேல் எரிச்சலாயிருப்பவர்களையும், உங்களோடே வழக்காடுபவர்களையும் கண்டு கலங்குகின்றவேளையிலும், பொருளாதார நெருக்கத்தின் சமயங்களிலும், நோய்கள் பெலவீனத்தால் சோர்ந்திருக்கிற வேளையிலும், ஐயோ, நான் தனித்திருக்கிறேனே என்று கவலைப்படுகிற எல்லா சமயத்திலும் தேவன் உங்களை நோக்கிச் சொல்லுகிறார்: "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." (ஏசாயா 41:10) உங்கள் சத்துருக்கள் எல்லாம் உங்களோடு நல்மனம் பொருந்துவார்கள். இரக்கங்களின் பிதாவாகிய தேவனிடத்தில் கிருபையினால் பாவமன்னிப்பைப் பெற்ற உனக்குத் திரும்பவுமாக ஒரு வாக்குறுதியைக் கொடுக்கிறார், "யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்." (ஏசாயா 41:14)

கர்த்தராகிய இயேசு உன் பாவங்கள் யாவற்றையும் மேற்குக்குக்கும் கிழக்குக்கு உள்ள தூரமாய் மன்னித்து, மறுபிறப்படைந்த மனிதனாய் மனுஷியாய் மாற்றிவிட்டதால், இந்தப் பூலோக வாழ்வில் உனக்கு வரும் எல்லாக் கவலைகளையும் இயேசுகிறிஸ்துவிடமே தெரியப்படுத்திவிடு. பரிசுத்த வேதத்தில் ஆவியானவரைக்கொண்டு அவர் எழுதிக்கொடுத்திருப்பதை ஒருமுறை வாசித்துப் பார்ப்போமா? "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்." (பிலி.4:6-7) இனி கவலைப் போடுவீர்களா? கவலைப்படாதிருங்கள்.

நேசரின் பணியில் சகோதரன்,
N.SELVIN, EVM, CHENNAI 127.

27/04/2026

இயேசுவே வாசல் ஊழியங்கள்,
கொளப்பாக்கம்,
சென்னை 127.

Mobile No. 9442323665 & 9789146640
Email ID: [email protected]

27.04.26.
இந்த வார தியானம்.

பொருள்: *புதிய எருசலேம்.*
தியானிக்கும் பகுதி: வெளிப்படுத்தின விஷேசம் 21ம் அதிகாரம்.

"பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று." - வெளி.21:1. ஒழிவு மறைவு இல்லாமல் இந்த வசனம் நமக்குச் சொல்லும் செய்தி, இப்பொழுது நாம் வாழும் இந்த பூமியும், நாம் காணும் இந்த வானமும் காணப்படாமற்போகும். இதை எபிரேயர் ஆக்கியோனைக்கொண்டு பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார், "கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்களும் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;" - விஞ்ஞான உலகத்திற்கு இதை ஏற்க முடியுமா? முடியாது. அந்த வசனத்தைத் தொடர்ந்து வரும் 11-12 வசனங்கள் சொல்லுகிறது, "அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்; ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர்." படைக்கப்படுகிற எதுவும் யாரால் படைக்கப்படுகிறதோ, அவரால் அதை அழிக்கவும் முடியும் என்பது பொது நியதி. எடுத்துக்காட்டாக, குயவன் மண்பாண்டத்தை வனைகிறான், அது சரியாக அமையாத பட்சத்தில் அவனே அதை அழிப்பதற்கும் உரிமை உடையவனாய் இருக்கிறான். இப்படி அழியப்போகும் இந்த மண்ணிற்குத்தான், மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதன் சண்டை போட்டு அபகரிக்கிறான். நமக்கு இருக்கும் இந்த மண்ணின் ஆசையைக் கிறிஸ்துவோடே சிலுவையில் அடிக்க ஒப்புக்கொடுப்போம்.

குயவன் எவ்வாறு கெட்டுப்போன மண்பாண்டத்தை அழித்து புதிய பாத்திரத்தை உருவாக்குகிறானோ, அவ்வாறே பாவத்தினாலும், அக்கிரமத்தினாலும் கெட்டுப்போயிருக்கும் இந்த உலகத்தையும் தேவன் ஒழித்துப்போடுவார். ஆனால் நோவா காலத்தில் இருந்த அதே பாவமான பூமியைத் திரும்பவும் படைக்காமல், புதிய ஒன்றைப் படைக்கப்போகிறார். இது இன்றைய விஞ்ஞானிகளுக்குப் புரியாதது, ஆனால் அது நடந்தேயாகும் என்பதை வெளி.21:2,10 வசனங்களில் வாசிக்கிறோம். "யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்."

இந்தப் புதிய எருசலேம் என்று இங்கு கூறப்பட்டிருப்பது, பரலோக ராஜ்யமே. இன்று பலரும் பரலோகத்தைப் பார்த்தது யார்? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கர்த்தர் கொடுக்கும் பதில், இப்பொழுது காணக்கூடாததாய் இருக்கும் இந்த ராஜ்யம், யாவரும் காணக்கூடியதாயும், அதிலே நாம் வாசம்பண்ணுவதாகவும் இருக்கும். எப்படிப்பட்டவர்கள் அதில் வாசம் செய்வார்கள் என்றால், இந்தப் பூமியின் சாத்தானால் வரும் சகல கண்ணிகளையும், உபத்திரவங்களையும், மாம்சஇச்சைகளையும் ஜெயித்தவர்களும், (வெளி.21:7) "....ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." (வெளி.21:27) இந்த பூமி அழிந்து, புதிதாகத் தோன்றப்போகும் புதிய உலகமாகிய பரலோக ராஜ்யத்தில் வாசஞ்செய்வோர் எப்படி இருப்பார்கள்? கண்ணீர்களையெல்லாம் ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு துடைப்பார். இந்த புதிய ராஜ்யத்தில் வாழும் யாவரும் துக்கமே இல்லாமல், மகிழ்ச்சியாய் இருப்பார்கள். ஆகவே இவர்கள் அலறுதலோ, வருத்தமோ இல்லாதிருப்பார்கள். மட்டுமல்ல, தாகமுள்ளோருக்கு தாகமே எடுக்காத ஜீவ தண்ணீரைக் கொடுப்பார். (யோவா.4:13-14) எத்தனை ஆசிர்வாதமான வாழ்க்கை, யோசித்துப் பாருங்கள்!

தோன்றப்போகும் அந்தப் பரலோக ராஜ்யத்தின் மகிமையை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். அங்கே சூரியனும் சந்திரனும் இருக்காது. தேவ மகிமையே அதைப் பிரகாசிப்பிக்கும். ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுவே அங்கு வெளிச்சமாயிருப்பார். இரவு பகல் அங்கே இல்லாததால், மின் கட்டணம் அங்கே கிடையாது. எத்தனை வசதிமிக்க வாழ்க்கை! இந்தப் பரலோக ராஜ்யமாகிய புதிய உலகத்தில், சபைச் சண்டை கிடையாது. டினாமினேஷன் சண்டையும் இல்லை. காரணம், இங்கே சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே ஆலயமாய் இருப்பார்கள்.

தோன்றப்போகும் இந்தப் புதிய உலகமாகிய பரலோக ராஜ்யத்தில் யார் யாரெல்லாம் பிரவேசிக்க முடியாதென்றால், "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும், தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; " (வெளி.21:8,27) வரவிருக்கும் இந்த ராஜ்யத்தில் வாழத் தகுதியில்லாதோறெலாம் எங்கே இருப்பார்கள்? "இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்." (வெளி.21:8) இந்த இடம் எப்படி இருக்கும்? "அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்." (மத்.13:50)

இந்தப் புதிய எருசலேமை நீ சுதந்தரித்துக்கொள்ள விரும்பினால், இன்றே இயேசுகிறிஸ்துவை இரட்சராக விசுவாசித்து ஏற்றுக்கொள். அப்படிதான், சமாரிய ஸ்திரீ ஜீவ தண்ணீரைப் பெற்று, புதிய எருசலேமின் சிட்டிசனானாள். சகேயு இயேசுகிறிஸ்துவிடம் பாவத்தை அறிக்கை செய்து விட்டுவிட்டதால், ஆபிரகாமின் குமாரனாக புதிய எருசலேமின் குடிமகனானான். சன்மார்க்கமாய் வாழ்ந்த கொர்நேலியு, குடும்பமாக இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தபடியால், பாவமன்னிப்பைப் பெற்று, ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் நிறைவையும் பெற்று, குடும்பமாகப் புதிய எருசலேமின் அங்கமானான். இதுவரையிலும் நீ பட்ட பாடுகள் போதும். இயேசுகிறிஸ்த்தண்டை வா! உன் அக்கிரமங்களையும், பாவங்களையும் அறிக்கை செய்து விட்டுவிடு. உன் பாவங்கள் யாவும் கழுவப்பட்டு, உன்னையும் புதிய எருசலேமாகிய பரலோக ராஜ்யத்தின் குமாரனாய், குமாரத்தியாய் இயேசுகிறிஸ்து ஏற்றுக்கொள்ளுவார். ஆயத்தமா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

நேசரின் பணியில் சகோதரன்,
N.SELVIN, EVM, CHENNAI 127.

20/04/2026

இயேசுவே வாசல் ஊழியங்கள்,
கொளப்பாக்கம்,
சென்னை 127.

Mobile No. 9442323665 & 9789146640
Email ID: [email protected]

20.04.26.
இந்த வார தியானம்.

பொருள்: *நான் பயப்படேன்.*
தியானிக்கும் பகுதி: எபிரேயர் 13:1-6.

எபிரேயர் ஆக்கியோனைக்கொண்டு பரிசுத்த ஆவியானவர் இந்தப் பகுதியிலே கிறிஸ்தவர்களுக்கு முதலாவது சொல்லும் அறிவுரை, "சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது." (எபி.13:1) சகோதரர் - என்று இங்கே சொல்லப்பட்டிருப்பது, உடன் பிறந்த சகோதரன், சகோதரியை மட்டும் குறிப்பிடாமல், இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவர்களையும் குறிக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு விளங்கிக்கொண்டால், கிறிஸ்தவக் குடும்பங்களிலும், திருச்சபைகளிலும் இயேசுகிறிஸ்து உலகத்திற்குச் சிலுவையிலே சம்பாதித்து வைத்திருக்கும் சமாதானம் (யோவா.14:27) எப்பொழும் நம்மிடையே நிலைத்திருக்கும். இது கிறிஸ்தவத்தில் செயல்படுத்த வேண்டிய முதல் காரியம்.

தமிழர் பண்பாட்டிலே 'உபசரிப்பு' என்பது மிகவும் சிறந்ததாக போற்றப்படும் ஒன்று. பொதுவாக சமுதாய மக்கள் உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களைத்தான் உபசரிக்கும் பழக்கம் உண்டு. பரிசுத்த வேதம் நமக்கு ஒரு படி மேலே சென்று, "அந்நியரை" என்று சொல்லுகிறது. நமக்கு அந்நியர் யார்? லூக்கா 10:30-37 வரையிலும் வாசித்தால் இதை விளங்கிக்கொள்ளலாம். தேவையுள்ள ஒருவனுக்கு இனந்தெரியாத மற்றொருவன் உதவி செய்யும்பொழுது, உதவியைப் பெற்றுக்கொள்ளுகிறவனுக்கு, உதவியைச் செய்தவன் - அந்நியனாகக் கருதப்படுவான். இப்படியான ஒருவரை, ஒருவர் உபசரித்தால், தங்களையே அறியாமல் அவர்கள் தேவதூதர்களையும் உபசரிக்க நேரிடலாம். நம்முடைய கிறிஸ்தவப் பண்பு எப்படி இருக்கிறது? இதைப் பழக்கத்திற்குக் கொண்டுவருவோம். (எபி.13:2)

வியாதி என்னும் தீங்கினாலோ, பிசாசின் போராட்டம் என்ற தீங்கினாலோ அல்லது மற்ற எந்த ஒரு தீங்கினாலும் கிறிஸ்தவரோ கிறிஸ்தவரல்லாதவரோ கட்டப்பட்டிருந்தால், யோபு என்ற பக்தனின் நண்பர்களைப்போல அல்லாது, அவர்களோடே விசுவாசிகளாகிய நாமும் கட்டுப்பட்டவர்களாக உணர்ந்தால்தான், அவர்களுக்காகப் பாரப்பட்டு ஜெபிக்க முடியும், உதவி தேவையானால் உதவியும் செய்ய முடியும். இந்த எண்ணம் எப்பொழுது நமக்கு வரும்? நாமும் அவர்களைப்போலவே சரீரத்தோடு இருக்கிறவர்கள் என்ற சிந்தை இருந்தாலே வரும். பாவமே அறியாத இயேசு நமக்காகப் பாவமாகிச் சிலுவையில் அடிக்க ஒப்புவித்தாரே அதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் மாதிரியாக நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே எபி.13:3ம் வசனம் நமக்குப் போதிக்கிறது. திருவசனத்திற்குக் கீழ்ப்படிவோமா?

தமிழிலே ஒரு பழமொழி உண்டு, "பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்." ஆனால் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்று, அந்நிய பாஷைகளையும் பேசிக்கொண்டு, நோய்களையும், பேய்களையும் சுகமாக்கும் வரத்தையும் பெற்றுக்கொண்டு, இந்த எல்லா வரங்களுக்கும் மேலாக பரிசுத்த வேதத்திலே கூறப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன வரத்தையும் பெற்றுக்கொண்டிருப்போர் இந்தத் தமிழ் பழமொழிக்கு விலகி இருக்க வேண்டும். திருவசனம் எபி.13:5ல் சொல்லுகிறது, "நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே." இருக்கிறோமா? அப்படி இல்லாதிருந்தால், அந்த வசனத்தில் பரிசுத்த ஆவியானவர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்திற்கு எப்படி நீங்கள் உரிமை கோர முடியும்? இந்த வாக்குத்தத்தத்தம் யார் யாருக்கெல்லாம் பலிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவர்களெல்லாரும் பண ஆசையை விட்டுவிட்டு, இயேசுகிறிஸ்து உங்களுக்குக் கொடுத்திருக்கும் வருமானமே போதும் என்று திருப்தியோடு ஜீவித்தால், உங்களுக்கு ஒரு குறைவும் ஏற்படாது. அதற்கு நானும் என் குடும்பமும் ஒரு சாட்சி.

மேற்சொன்ன இந்தக் குணாதிசயங்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாகிய நம்முடைய குடும்பத்திலும், தனி நபரிலும் காணப்படுமே என்றால், நாம் தைரியமாகச் சொல்லலாம், "கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்." (எபி.13:6) தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டிருந்த நாம், இழந்துபோன அந்தச் சாயலைப் பெற்று, இந்தப் பண்புகளோடு வாழும்பொழுது ஒருவரும் நமக்குத் தீங்கு செய்ய முடியாது. பயப்படாதிருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

நேசரின் பணியில் சகோதரன்,
N.SELVIN, EVM, CHENNAI 127.

13/04/2026

இயேசுவே வாசல் ஊழியங்கள்,
கொளப்பாக்கம்,
சென்னை 127.

Mobile No. 9442323665 & 9789146640
Email ID: [email protected]

13.04.26.
இந்த வார தியானம்.

பொருள்: *அந்த நாள் வராது.*
தியானிக்கும் பகுதி: II தெச. 2:1-17.

தேவன் இன்றும் அன்புள்ளவராகவே இருக்கிறார். (யோவா.3:16; 6:37) எனவே திருச்சபைகளிலும், தொலைக்காட்சி நிலையங்கள் வைத்திருக்கும் ஊழியர்களாலும், உலக அரங்கில் பெயர்பெற்றிருக்கும் பலராலும், தற்காலங்களில் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை மற்றும் இரகசிய வருகையைப்பற்றி ஆணித்தரமாக போதிக்கப்பட்டு வரும் நிலையில், பாவியாகிய நான் இன்று பரிசுத்த வேதத்தை வாசிக்கையில், நம் தியானத்திற்காக எடுத்துக்கொண்ட அதிகாரத்தை விசுவாசிகளுக்கு மட்டுமல்லாது பொதுஜனங்களும் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து சத்தியத்தின்படி எழுதும்படி தேவன் உந்தியதால் எழுதுகிறேன். ஜெபத்தோடு வாசியுங்கள்.

2தெச.2:3ம் வசனத்தில் "விசுவாச துரோகம் முந்தி நேரிடும்," என்ற வாசகத்தைக் கவனியுங்கள். கிறிஸ்தவ மார்க்கத்தில் இன்று அநேகம் பேர், தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்கள் என்ற பேரிலும், தங்களைத் தீர்க்கதரிசிகள் என்று அழைத்துக் கொள்ளுகிறவர்கள் பேரிலும், அதிசயங்களைச் செய்கிறவர்கள் பேரிலுமே விசுவாசம் வைத்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் பேரில் விசுவாசம் வைத்திருப்போர் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே இருக்கிறார்கள். இந்த அனுபவம் கிறிஸ்தவர்களுக்குள்ளே சாத்தானால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை முதலாவது நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எத்தன்மையுடைய கிறிஸ்தவர்களாய் ஜீவிக்கிறீர்கள்? உங்களையே நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். இந்தக் "கேட்டின் மகனாகிய பாவ மனுஷன்" (சாத்தான்) இயேசுகிறிஸ்து நியாயாதிபதியாக இந்த உலகத்திற்கு இரண்டாம் முறையாக வருவதற்கு முன் வருவான். அதுவரையிலும் இயேசுவின் வருகை இருக்காது. மேற்சொன்ன வசனத்திலேயே ஆவியானவர் அப்போஸ்தலரைக் கொண்டு திட்டமாகச் சொல்லிவிட்டார்.

இயேசு யோவான் 16:23ல் சொல்லுகிறார்: "ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்." தன் வயிற்றிலே ஒரு மனுஷனைப் பெற்றெடுக்கும் முன் ஒரு ஸ்திரீ கற்பவேதனை அடைகிறாள். இது எல்லாப் பெண்களுக்கும் பொதுவானது. அதேபோல அந்திக்கிறிஸ்துவின் நாட்களிலே வெளிப்படும் அக்கிரமத்தின் இரகசியம் வெளி.13:15-17 ஆகிய வசனங்களில் ஆவியானவரால் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு இரட்சிக்கப்பட்டுப் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டவர்கள் விலக்கப்பட்டு, இரகசிய வருகையில் மத்திய ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று சில சபைப் போதகர்களாலும், சுவிஷேகர்களாலும் சொல்லப்படும் உபதேசமானது, பரிசுத்த வேதத்திலுள்ள திருவசனங்களைப் புரட்டுவதாகும். எப்படி ஒரு ஸ்திரீக்கு கற்பவேதனை பொதுவானதோ, அதேபோல அந்திக்கிறிஸ்து கொடுக்கும் அக்கிரம சிந்தையான உபத்திரவமும் பொதுவானது. இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகைக்குமுன் யோவான்ஸ்நானனின் தோற்றம் எவ்வாறு முந்தியதாக இருந்ததோ, அவ்வாறே இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் அந்திக்கிறிஸ்துவின் ஏழு ஆண்டு ஆட்சியும் முந்தியதாகவே இந்தப் பூமியில் நடக்கும். இதற்கு ஆதாரமாக வெளி.20:4ம் வசனத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தையைக் கவனியுங்கள். "...நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்." இதற்கு முன் இரகசிய வருகை இருக்கிறது என்ற கருத்து பரிசுத்த வேதத்தில் எங்கும் கொடுக்கப்படவில்லை. ஜாக்கிரதையாய் இருங்கள் என்று இப்பொழுது தேவ ஆவியானவர் உங்களை எச்சரிக்கிறார்.

இந்த அந்திக்கிறிஸ்துவை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ளுவது? யோசிக்கிறீர்களா? வாசியுங்கள், "அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்." (2தெச.2:4) இந்த வகையைச் சார்ந்தவர்கள் இப்பொழுதும் பூமியில் கிறிஸ்தவர்களூடே இருக்கிறார்கள். திருவசனங்களைத் தருகிறேன் வாசித்துப் பாருங்கள். 1யோவா.2:18,22; 4:3; 2யோவா.1:7,10. இவர்களை அடையாளம் கண்டுகொள்ள இன்னும் முடியவில்லையே என்று கலங்குகிறீர்களா? "மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாதவர்கள்." யார் இவர்கள், ஞானஸ்நானத்தைத் தங்கள் சபை சாக்கிரமந்த்படி (கொள்கை கோட்பாட்டின்படி) உபதேசிக்கிறவர்களும், அந்நியபாஷை ஒன்றே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு அடையாளம் என்று போதிக்கிறவர்களுமே ஆகும். மேலும் எபி.10:25ம் வசனத்தைப் புரட்டி, "அற்புதம் நடைபெறாத ஆலய ஆராதனைக்குப் போகாதிருங்கள். எங்கள் கூடுகைக்கு வாருங்கள்," என்று உபதேசித்தால், அவர்களும் திருவசனத்தின்படி அந்திக்கிறிஸ்துவின் ஆவியை உடையவரே. இனங்கண்டுகொண்டு விலகுங்கள்.

இவைகளெல்லாம் நடைபெற்றுக்கொண்டே இருந்தும், அந்திக்கிறிஸ்து இன்னும் வெளிப்படாமல் இருப்பது எப்படி? 2தெச.2:7-8 வசனங்களை வாசியுங்கள் "ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்." இப்பொழுது அந்திக்கிறிஸ்து வெளிப்படையாக வெளிப்படாதபடி தடை செய்வது, "தேவனுடைய கிருபையே." இந்தக் காலத்தில்தான் நீங்கள் எத்தனை கொடிய தீமையான பாவங்களைச் செய்தாலும், அவைகளை மன்னித்து, பிசாசினால் வஞ்சிக்கப்படாதபடி இயேசுகிறிஸ்து உங்களை இரட்சிப்பார். இந்தக் கிருபையின் நாட்கள் எப்பொழுது முடிவுரும் என்று அறுதியிட்டுக் கூறயிலாது. ஆகையால் யாவரும் புத்தியுள்ள கன்னிகைகளைப்போல விழிப்பாயிருக்க வேண்டும். மற்றப்படி, "கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். (2தெச.2:10-12) இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

நேசரின் பணியில் சகோதரன்,
N.SELVIN, EVM, CHENNAI 127.

06/04/2026

இயேசுவே வாசல் ஊழியங்கள்,
கொளப்பாக்கம்,
சென்னை 127.

Mobile No. 9442323665 & 9789146640
Email ID: [email protected]

06.04.26.
இந்த வார தியானம்.

பொருள்: *நாங்கள் சாட்சிகள்.*
தியானிக்கும் பகுதி: அப்.10:39-41; 1கொரி.15:3-8.

இயேசுகிறிஸ்துவின் பிறப்பும், அவர் மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்த சம்பவங்கள் இரண்டும் உலக அதிசயம். இதை கி.பி.முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்ரவேல் மற்றும் யூத ஜனங்களும், ஏன் இன்று வரையிலும் பல தேசத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களும் மறுத்து ஒதுக்குகின்ற அளவிற்கு ரோம அரசாங்கம், "சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள்," (மத்.28:12-13) என்ற ஒரு பொய்யான செய்தியைப் பரவச செய்தார்கள்.

இதை அடிப்படை உண்மையாகக்கொண்டு இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள், "இயேசுவின் கல்லறை இந்தியாவில், காஷ்மீரில் இருக்கிறது," என்ற ஒரு கற்பனைச் செய்தியைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களோடு சேர்ந்து, தெய்வ மறுப்பாளர்களும், இந்துக்களும் இயேசு மரித்து உயிர்த்ததற்கு எந்த வரலாற்றுச் சான்றும் இல்லை என்று வீண் வாது செய்துவருகிறார்கள். உலகத்திலேயே மரித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் இயேசுகிறிஸ்துவை அடக்கம் செய்த கல்லறை மட்டுமே இன்றும் திறந்ததாக இருக்கிறது. இதை இஸ்ரவேல் தேசத்தின் வரலாறு கூறுகிறது. போதாக்குறைக்கு, நம் நாட்டிலும், மற்ற நாடுகளிலும் இருந்து இஸ்ரவேல் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அனைவரும், எருசலேமிலே கொல்கொதா மலையின் அடிவாரத்தில் திறந்திருக்கும் இயேசுகிறிஸ்துவின் கல்லறையைப் பார்த்தோம் என்று சாட்சி கொடுத்தும் வருகிறார்கள். உடலெல்லாம் கோரமாகச் சிதைக்கப்பட்டு, சிலுவை மரத்தில் இரத்தம் சிந்தி, பாவத்தினால் மனுகுலத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த மரணத்தை, அவருடைய மரணத்தால் மீட்டார். இயேசுகிறிஸ்து அவரை அடக்கம் செய்த கல்லறையிலிருந்து மரணத்தை வென்று மூன்றாம் நாளில் உயிர்பெற்று எழுந்தார்.

இயேசுகிறிஸ்துவினால் அழைப்புப் பெற்று, அவருடைய சீஷனாய் பணியாற்றிய பேதுருவும், இயேசுகிறிஸ்துவினால் தமஸ்குவின் நேர்தெருவில் சந்திக்கப்பட்டு, ஊழிய அழைப்பைப் பெற்ற பவுல் அப்போஸ்தலராகிய இருவரும் பிரத்தியட்சமாகச் சாட்சி சொல்லுகிறார்கள். சன்மார்க்கமாக வாழ்ந்த கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதியை தேவ வழிகாட்டலின் பேரில் பேதுரு சந்தித்தார். அப்பொழுது அவருடைய முழுக்குடும்பத்திற்கும் முதலாவது பேதுரு சொன்ன செய்தி, "நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிலும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படிசெய்தார். ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார். (அப்.10:38-41) சீஷர்கள் யாவரும் கூடியிருந்த அறையிலே "வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்." (யோவா.20:19-20) இங்கே இரண்டு வலுவான சாட்சிகளைப் பார்த்தோம்.

யூத மதத்தில் மிகவும் பற்றுக்கொண்டவர் சவுல். கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும்படியாகப் போகும் பாதையில் பேரொளி ஒன்று அவரைச் சந்தித்தது. கீழே விழுந்தார். ஒளி அவரோடுகூடப் பேசியது. (எல்லா மதங்களும் சொல்லி வணங்கிக்கொள்ளுகிறபடி, தேவன் அல்லது ஆண்டவன் ஒளியானவன் என்னும் கூற்று உண்மையாகிறதல்லவா!) நீர் யார் என்றார்? நீ துன்பப்படுத்தும் இயேசுதான் நான் என்று அவரைச் சந்தித்த ஒளியிலிருந்து பதில் வந்தது. இயேசுகிறிஸ்து சொன்னபடி தமஸ்கூவில் மூன்று நாட்கள் காத்திருந்தார். அனனியா என்ற சீஷன் ஒருவர் மூலமாய் தேவசித்தத்தைக் கேட்டறிந்தார். அதன்படி, "தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்." (அப்.9:1-20)

இயேசுகிறிஸ்துவைச் சந்தித்த பவுல் அப்போஸ்தலர் சொல்லும் சாட்சியை வாசிப்போம். "நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். (1கொரி.15:3-8)
இவர்களைப்போல, நாமும் திருவசனங்களைக் கைக்கொண்டு வாழ்ந்து, இயேசுகிறிஸ்து இன்றும் உயிரோடிருக்கிறார் என்பதைப் பறைசாற்றுவோமா! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

நேசரின் பணியில் சகோதரன்,
N.SELVIN, EVM, CHENNAI 127.

Address

F4, Dhakshin City Phase 1, Kolapakkam
Chennai
600127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easuve Vasal Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Easuve Vasal Ministries:

Share