23/08/2026
ஸ்ரீரங்கம் பெரிய கோயில்—
திருப்பவித்ரோத்ஸவம்--
ஆவணி 07 (24/08/2026) முதல் ஆவணி 15 (01/09/2026) வரை:
*ஸ்ரீரங்கம் திருப்பவித்ரோத்ஸவம் !*
பற்றி இணையத்தில் வரப்பெற்ற தகவல்கள்.
1. ஒவ்வொரு திருக்கோயிலிலும் ஆண்டுதோறும் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் திருப்பவித்ரோத்ஸவம் 3 அல்லது 5/ 7 /9 நாட்களுக்குக் கொண்டாடப்படும்.
எம்பெருமானுக்குத் திருவாராதனம் சமர்பிக்கப்படும் போதும், மற்றைய உத்ஸவங்களிலும் மந்த்ர லோபம் (குறைவு) ஏற்படக்கூடும். அதனால் எம்பெருமானுடைய சாந்நித்யம் குறைய வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஏற்படும் குறைகளைப் போக்குவதற்காகப் திருப்பவித்ரோத்ஸவம் கொண்டாடப்படுகிறது.
2. ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் வருகிற 24/08/2026 முதல் 9 நாட்களுக்கு நடைபெறுகிறது.பெரிய கோயிலில் உள்ள சேனை (சேரனை) வென்றான் மண்டபத்தில் (திருப்பவித்ரோத்ஸவ மண்டபத்தில்) தற்போது நடைபெறுகிறது.
3. கலாப காலத்துக்குப் பிறகு, 1371 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் நாள் நம்பெருமாள், திருவரங்கத்திற்குத் திரும்பி எழுந்தருளிய தினத்தன்று இந்த மண்டபத்தில்தான் உபயநாச்சிமார்களோடு எழுந்தருளியிருந்தார்.
4. முதலாழ்வார்கள் ஸந்நிதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, 12.08.1530-ஆம் தேதியிட்ட விஜயநகர மன்னனான மல்லிகார்ஜுனன் காலத்துக் கல்வெட்டின்படி திருப்பவித்ரோத்ஸவமானது முதலாழ்வார்கள் திருமண்டபத்தில் நடை பெற்றதாகவும், சாற்று முறையன்று, விட்டவன் விழுக்காடு (பிரஸாதத்தில் நான்கில் ஒரு பங்கு) அண்ணன் ராமாநுஜ அய்யன் என்பாருக்குத் தரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. காலப்போக்கில் முதலாழ்வார் ஸந்நிதிக்கு திருப்பவித்ரோத்ஸவ காலங்களில் நம்பெருமாள் எழுந்தருளுவது நின்றுபோய் சேரனை வென்றான் மண்டபத்திற்கு எழுந்தருளுவது என்ற முறை ஏற்பட்டுள்ளது.
6. திருப்பவித்ரோத்ஸவத் திருநாளுக்கு முதல்நாள் மாலை, சேனை முதலியார், அநுமான் ஆகியோர் திருவாராதனம் முடிந்து, பெருமாள் *”க்ஷீரான்னம்”* அமுது செய்த பிறகு புறப்பட்டருளி, ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதி வில்வமூலத்திலிருந்து பாலிகைகளுக்காக மண் எடுத்துக் கொண்டு வருவார்கள்.
*_முதல்நாள் (24/08/2026) உத்ஸவம்:_*
7. திருப்பவித்ரோத்ஸவம் முதல்நாள் நித்தியப்படி ஏற்பட்ட முதல் திருவாராதனமான பொங்கல் நிவேதனமானதும், நம்பெருமாள் புறப்பட்டு, யாகசாலை வாசலில் பலவித புஷ்பங்களை பெரிய அளவில் பரப்பி--பூப்பரப்பி ஏகாதசி-- அதன்மேல் நின்றவாறே கந்தாடை ராமானுச முனிக்கும் சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் சேவை மரியாதைகளை அனுக்ரஹிப்பார்.
8. ஸ்ரீநம்பெருமாள் யாகசாலையில் எழுந்தருளியதும் திருவாராதனம். இங்கு வேதபாராயணம் தொடங்கும் போது திருவாராதனம் ஆரம்பிக்கப்படும்.
9. திருப்பவித்ரோத்ஸவம் நித்திய திருவாராதன மந்த்ர லோபத்துக்காக ஏற்பட்டதாகையால், இன்றைய திருவாராதனத்தின் முடிவில் ஒவ்வொரு அர்க்கிய பாத்தியத்துக்கு ஒரு தீபமாக 360 ஆவ்ருத்தி தீபாராதனம் நடக்கும்.
10. 360 ஆவ்ருத்தி தீபாராதனம் முடிவதற்கு நாலு மணி நேரத்துக்கு மேலாகும்.
11. அதுவரையிலும் வேதபாராயணம் இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கும்.
12. அப்போது முதலில் நாராயண உபநிஷத்து, தொடங்கிப் பிறகு மற்ற உபநிஷத்துகளும், அச்சித்ர அஸ்வமேதங்களும் பாராயணம் செய்யப்படும்.
13. திருவாராதனம் ஆனபிறகு திருமஞ்சனமும் தளிகை நிவேதனமும் நடந்து பஞ்சகுண்ட ஹோமம் நடக்கும்.
14. ரக்ஷாபந்தனமாகி உத்ஸவருக்கு எதிரே, வேதபாராயணத்துடன் திருப்பவித்திரப் பிரதிஷ்டையாகும்.
15. திருப்பவித்திரத்தை ஸ்வஸ்தி வாசனத்துடன் பெரிய பெருமாளிடம் கொண்டு போய் முதலில் அவருக்கும், பிறகு அனைத்து மூர்த்திகளுக்கும் திருமார்பு பவித்திரம் சாற்றப்படும்.
16. தீர்த்த விநியோகமானதும் நம்பெருமாள் யாக சாலையிலிருந்து உள்ளே எழுந்தருளுவார்.
17. பிறகு யாகசாலையில் எழுந்தருளப் பண்ணப்படும், திருவரங்க மாளிகையார் உத்ஸவம் முடியும் வரையில் அவ்விடத்திலேயே எழுந்தருளியிருப்பார்.
*_இரண்டாம் நாள் (25/08/2026) அங்கோபாங்கம்/பூச்சாண்டி சேவை:_*
18. இரண்டாம் திருநாள்--நாளை துவாதசி உதயத்திலேயே பொங்கல் அமுது செய்வித்த பிறகு யாக சாலையில் வேதபாராயணத்தோடு திருவரங்க மாளிகையாருக்குத் திருவாராதனம் தொடங்கும்.
19. துவாரபூஜை, மண்டல பூஜைகள் நடக்கும்.
20. பிறகு ஸ்வஸ்தி வாசனத்தோடு பெரியபெருமாளிடம் வந்து நித்தியப்படி ஏற்பட்ட பெரிய அவசரத் திருவாராதனம் நடைபெறும்.
21. ஆண்டு முழுவதும், எம்பெருமானுக்கு அமுதுபடிகள், வஸ்திரங்கள், திருவாராதனங்கள், அர்க்ய பாத்ய ஆசமனீயம், போன்ற உபசாரங்கள், மந்திர உச்சாடனம் ஆகியவற்றில் குறைபாடுகள் நேர வாய்ப்புண்டு. இவ்வாறு ஏற்படும் குறைபாடுகளைப் போக்குதற்காக ஆகமங்களில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
22. எம்பெருமானிடம் உள்ள சாந்நித்யம் குறையாது இருப்பதற்கு பிராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமுதுபடிகள் சமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு *”ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு”* அடுத்த நாள் *“பெரிய திருப்பாவாடை”* என்ற நிகழ்ச்சியும், வஸ்திரங்கள் அணிவிப்பதில் ஏற்படும் குறைபாடுகளைக் களைவதற்காகக் கார்த்திகை *கைசிக ஏகாதசியன்று “360 பட்டு போர்த்துதல்”* என்ற நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. திருவாராதனம் சமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் *“திருப்பவித்ரோத்ஸவம்”* கொண்டாடப்படுகிறது.
23. உள்ளே இருக்கும் ஒவ்வொரு மூர்த்திக்கும் 360 ஆவ்ருத்தி தீபாராதனம் நடக்கையில் ஒவ்வொரு திருவாராதனத்தின் முடிவிலும் பெரியபெருமாளுக்குத் திருமுடி முதல் திருவடி வரையில் பவித்ரம் சாற்றப்படும். இன்றைய வேதபாராயணமும் முந்தைய தினத்தைப் போலவே ஆனால், துவாதசியாகையால் அச்சித்ரம், அச்வமேதங்களுக்கு பதிலாக காடகம் பாராயணம் செய்யப்படும்.
24. மற்றைய மூர்த்திகளுக்கும் பவித்திரம் சாற்றிய பிறகு, தாயார் ஸந்நிதிக்கு மேள தாளத்துடன் பவித்திரம் கொண்டு செல்லப்பட்டு அங்கே தாயார் திருமேனிகளுக்கு சாற்றப்படும் வரையில் பெரியபெருமாளும் ஸ்ரீநம்பெருமாளும் (உத்ஸவர்) பல பவித்திரங்களோடு ஜனங்களுக்கு ஸேவை சாதித்துக் கொண்டிருப்பார்கள்.
25. வனமாலை, அங்கோபாங்கம் முதலிய பவித்திரங்களோடு இரண்டாம் திருநாள் (25.08.2026) மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, பெரியபெருமாள் சேவை சாதிப்பார்.
26. இந்த சேவைக்குப் *_பூச்சாண்டி சேவை_* என்ற பெயர் வழங்குகிறது. பெரியபெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள் / நூல்சரடுகள்) சாற்றப்படுகிறது. சிறு குழந்தைகள், புதியதோர் பழக்கமில்லாத தோற்றத்தைக் காணும்போது பூச்சாண்டி என்று சொல்லும். அதுபோலே நாளை பெரியபெருமாள் திருமேனியில் திருப்பாதங்கள் தொடங்கி திருமுடி ஈறாக நூற்றுக்கணக்கான பவித்ரங்கள் சாற்றப்பட்டிருக்கும். இத்துடன் மூலவரும், உத்ஸவரும் பல வண்ணங்கள் கொண்ட பட்டினால் ஆன பவித்ர மாலையையும் சாற்றிக் கொண்டிருப்பர்.
27. கும்ப ஆரத்திக்காக திருமடைப் பள்ளியிலிருந்து *”தட்டி”* (தட்டி என்பது திருமடைப் பள்ளியிலிருந்து எடுத்துவரப் படும் சிறு தீபமாகும்.) இரண்டு தீபங்கள் கொண்டு வரப்படும். அவற்றில் ஒன்று மட்டும் உபயோகத்தில் கொள்ளப்படும். ஒன்று அணைந்து போனாலும் மற்றொன்றைப் பாதுகாப்பாக எடுத்து வரலாம் என்பதற்காக, இரண்டு தீபங்கள் கொண்டு வரப்படுகின்றன.
28. ”பெரியஅவசரத்” தளிகை எழுந்தருளப் பண்ணப்படும்.
29. பெரியபெருமாள் சாற்றிக் கொண்டிருக்கும் அங்கோ பாங்க பவித்திரங்களைக் களைந்து, ஆழ்வார், ஆசார்யாள் முதலிய ஒவ்வொரு ஸந்நிதிக்கும் கொடுத்து, தளிகை அமுது செய்த பிறகு, ஸ்ரீநம்பெருமாள் பட்டுப் பவித்திரம் சாற்றிக் கொண்டு தோளுக்கினியானில் புறப்பட்டு திருப்பவித்ரோத்ஸவ மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.
*_3,4,5,6,8 ஆம் திருநாட்கள்:_*
30. மாலை ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, திருப்பவித்ரோத்ஸவ மண்டபம் எழுந்தருளி இரவு மூலஸ்தானம் வந்து அடைவார்.
*_7ஆம் திருநாள் உத்ஸவச் சிறப்பு:_*
31 ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் திருச்சிவிகையில் எழுந்தருளி ஸந்நிதி வாசலில் சூர்ணாபிஷேகம் செய்து கொண்டு புறப்பட்டு, கொட்டார வாசலில் நெல்லளவையும் ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதி வாசலில் திருவந்திக்காப்பும் கண்டருளிப் பிரதட்சிணமாய் வந்து உள்ளே எழுந்தருள்வார்.
32. உபயநாச்சிமாருடன் எழுந்தருளும் பெரிய ஆசனமான திருச்சிவிகை திருப்பவித்ரோத்ஸவ மண்டபமேறித் திரும்பாது. ஆகையால் அன்றைய தினம் ஸ்ரீநம்பெருமாள் மண்டபம் எழுந்தருள்வதில்லை.
*_9 ஆம் திருநாள் சாற்றுமறை:_*
33. காலையில் நித்தியப்படி போல ஸ்ரீநம்பெருமாள் பொங்கல் அமுது செய்து, சந்திரபுஷ்கரிணிக்கு எழுந்தருளித் தீர்த்தவாரி கண்டருளி, மண்டபத்தில் திருமஞ்சனம் முதலியவை ஆனதும் புறப்பட்டு உள்ளே எழுந்தருள்வார்.
34. நம்பெருமாள் உள்ளே எழுந்தருளியதும் யாகசாலையிலிருந்து திருவரங்க மாளிகையார் உள்ளே எழுந்தருள்வார். வர்த்தமான வாதூலதேசிகாசார்யர் ஸ்வாமியை மஹா வைபவத்தோடு திருமாளிகையிலிருந்து எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து, ஸந்நிதி வாசலில் அவருக்குப் பவித்திரம் விநியோகம் செய்யப்படும். கோஷ்டிக்கும் பவித்திரம் விநியோகமாகும். அன்று இரவு பெரியபெருமாள் ஸந்நிதியில் கூடியிருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் பவித்ரம் விநியோகமாகும். வாதூலதேசிகர் பெரியபெருமாளுடைய அனைத்துக் கொத்து பரிஜனங்களுடனும் புறப்பட்டு, பிரம்மரத மரியாதையாகத் திருமாளிகை எழுந்தருளி சந்தன தாம்பூல மரியாதையான பிறகு, புஷ்கரிணிக் கரையில் குலசேகராழ்வாரால் எப்பொழுதும் மங்களாசாசனம் பண்ணப்படும். சக்ரவர்த்தித் திருமகனுக்குத் தன்னை ஆராதித்ததற்காகப், பெரியபெருமாள் தம்முடைய பிரசாதமான பவித்திரத்தை மேளதாளத்துடன் அனுப்பி வைப்பார்.