17/10/2024
*ஆறுமுகன் அவதாரம்*
🍀🍀🍀🍀🍀🍀
ஒரு கற்பத்தில் இந்த அண்டத்தையும் அதில் உயிர்த் தொகுதிகளையும் சிவனருளால் படைத்தவர் காசிப முனிவர். அவர் பெயரால் இந்த பூமிக்குக் காசினி என்பதும் பெயரானது.
அவர் தனது பதிமூன்று மனைவியருடன் சேர்ந்து இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தார்.
சிவனருளால் அரிய வரங் களையும் தபோ பலத்தையும் பெற்றிருந்தார்.
அசுரர்களை வலிமையுள்ளவர்களாகவும் ஆளும் உரிமை உள்ளவர்களாகவும் ஆக்க விரும்பிய அசுர குலமகளான மாயை என்பவள் காசிபமுனிவரை அணைந்து சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய மூன்று புதல்வர்களையும் அசமுகி எனும் பெண்ணையும் பெற்றாள். அசுர சகோதரர்கள் அரிய தவங்களைச் செய்து பெரிய வரங்களைப் பெற்றனர். சூரபத்மன் 1008 அண்டங்களையும் 108 யுகங்கள் வரை ஆட்சிபுரியும் வரத்தையும் பெற்றான்.
அதன்படி அண்டங்களின் அதிபதியானான். தொடக்கத்தில் மிகவும் நல்லவனாக ஆட்சி புரிந்த அவன் படிப்படியாக அசுர குணம் ஏறி கொடுங்கோலனானான். அவன் தமது சகோதரர்களான தேவர்களை மிகவும் துன்புறுத்தினான். அவனது அட்டகாசத்தையும் அவனால் செய்யப்படும் துன்பங்களையும் பொறுக்க முடியாத தேவர்கள் பெரிதும் துன்புற்று வாடி வதங்கினர்.
அவர்கள் சிவபெருமானைச் சரணடைந்து, அசுரர்களை அழித்துத் தம்மைக் காக்கும் படியாக வேண்டினர். சிவபெருமான் அவர்களது துயரத்தைத் தீர்த்து இன்பமாக வாழ்விக்கும்படியான ஒரு குமாரனைத் தோற்றுவிக்க எண்ணம் கொண்டார்.தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அதை அக்னியிடம் அளித்துப் பாதுகாத்து வருமாறு கூறினார்.
அந்தப் பொறிகளின் வெப்பத்தைத் தாங்கமுடியாத அக்னி அவற்றை வாயுவிடம் அளித்தான். அவனாலும் அதன் ஒளியையும் வெப்பத்தையும் தாங்கமுடிய வில்லை.
அதனால் குளிர்ச்சி மிகுந்தவளான கங்கையிடம் அளித்தான். கங்கையும் அதன் அளவற்ற ஆற்றலைத் தாங்கமுடியாது, கயிலை மலைச்சாரலில் நாணற்காட்டிற்கு நடுவே இருந்த சரவணப்பொய்கையில் விடுத்தாள். அங்கு அந்தத் தீப்பொறிகள் குளிர்ந்து குழந்தை வடிவம் பெற்றன. அங்கிருந்த ஆறு தாமரை மலர்களில் அந்த ஆறு குழந்தைகளும் ஏறி அமர்ந்து விளையாடத் தொடங்கின.
அவற்றைப் பாலூட்டிச் சீராட்டச் சிவபெருமான் கார்த்திகைப் பெண்கள் அறுவரை அந்தப் பொய்கைக்கு அனுப்பினார். அவர்கள் பொய்கையை அடைந்து அங்கு தாமரை மலர்களில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஆறு குழந்தைகளையும் எடுத்துப் பாலூட்டி சீராட்டி அவர்களுடன் விளையாடி மகிழ்ந்திருந்தனர்.
பின்னர், சிவபெருமான் உமாதேவியை அழைத்துக் கொண்டு சரவணப் பொய்கையை அடைந்தார். அங்கு சென்ற உமையன்னை கார்த்திகைப் பெண்களுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் ஆறு குமாரர்களையும் கண்டாள். அப்பெண்கள்
அந்தக் குழந்தைகளை உமாதேவியிடம் அளித்தனர். அவள் ஆறு குழந்தைகளையும் ஒன்றாகச் சேர்த்துத் தழுவினாள். அப்போது ஆறு குழந்தைகளும் ஒன்றாகி, ஒரே திருமேனியைப் பெற்றன. அது ஆறுமுகங்களும் பன்னிரண்டு கரங்களும் கொண்டு ஒளிவீசி நின்றது.
பார்வதி மகிழ்ச்சியுடன் அந்த ஆறுமுகக் குழந்தையை எடுத்து மடிமீது அமர்த்திக் கொண்டு மகிழ்ந்தாள்.
கந்துதல் என்றால் ஒன்றாகச் சேருதல் என்பது பொருள். ஆறுதிருவுருங்களாகத் தனித்தனியே தோன்றி அன்னை பராசக்தியால் ஒன்றாக்கப்பட்டதால் அவர் ஸ்கந்தன் எனப்பட்டார்.
சரவணப்பொய்கையை இடமாகக் கொண்டு தோன்றியதால் சரவணபவன் (சரவணம்-நாணற்காடு; பவனம்-உயர்ந்தோர் வாழுமிடம்) என்றும்
கார்த்திகைப் பெண்களின் மடி தவழ்ந்ததால் கிருத்திகா புத்ரன் என்றும் கார்த்திகேயன் என்றும்,
பார்வதியால் தழுவப்பட்டு ஒன்றானதால் ஸ்கந்தன் என்றும்,
கங்கையால் ஏந்தப் பெற்றதாலும், தீக்கங்குகள் வடிவில் தோன்றியதாலும் காங்கேயன் என்றும்,
உமையின் மடியில் அமர்ந்ததால் உமாசுதன் என்றும்,
அக்னியில் இருந்து தோன்றியதால் அக்னிஜாதன் என்றும் பெயர்களைப் பெற்றான்.
உமாதேவி ஆறுகுழந்தைகளை ஒன்றாக அணைக்க, அவை ஒரு திருமேனியும் ஆறுமுகங்களும் பன்னிரண்டு கரங்களையும் கொண்டு விளங்கியதையும் கந்தன் எனப் பெயர் பெற்றதையும், கந்தபுராணமும், கந்தர் கலிவெண்பாவும் அழகாகச் சொல்வதைக் காணலாம். தேவர்களை வாழ்விக்க வந்த பெருமானாக ஆறுமுகன் விளங்குகிறார்
❤❤❤❤❤❤
இவண்👉 சென்னை ஆலப்பாக்கம் அருள்மிகு நடராஜர் கோயில் பூசகர் மற்றும் ஜோதிடர் ஆ.சீ.சிவதாசன்
(9884014363)
இந்த ஞானத்தை எனக்கு நல்கிய குருவாகிய சிவசுந்தரிர மாதயிதழ் ஆசிரியர் பூசை
ச.ஆட்சிலிங்கம்
ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன் (ஓம் குருவே சரணம்)
சிவசுந்தரி மாத இதழை நீங்களும் பெற 👉 (ஆண்டு சநதா 180₹)
9941124964