13/06/2020
ஆத்து வாத்தியார்
“ஆத்து வாத்யார்” என்று ஒருவரை அமைத்துக்கொள்ளும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. இனிவரும் காலங்களில் இல்லாமலேயே போய்விடும் போல் தோன்றுகிறது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு, ப்ராம்மணர்கள் க்ராமங்களில் உள்ள அக்ரஹாரங்களில் அதிகமாக வசித்து வந்த காலங்களில் இந்த வழக்கம் இருந்து வந்தது நம்மில் பலருக்கும் தெரியும். ஒவ்வொரு அக்ரஹாரத்திலும் மூன்று / நான்கு வைதீகர்கள் இருப்பார்கள். அவர்களும் அவரது வாரிசுகளும் அங்குள்ள ப்ராம்மணர்களின் குடும்பங்களுக்கு தலைமுறை தலைமுறையாக “உபாத்யாயம்” செய்துவைக்கும் “ஆத்து வாத்யார்களாக” இருப்பார்கள். ஒவ்வொரு வாத்யாருக்கும் 20-30 வீடுகள் “உபாத்யாயம்” இருக்கும். அந்த வீடுகளில் நடக்கும் எல்லா வைதீக கர்மாக்களும் அவர்கள் மூலமாகவே செய்யப்படும். இத்தகைய சூழ்நிலையில் வாத்யாரின்/ அவர் தம்மோடு அழைத்து வரும் ரித்விக்குகளின் யோக்யதாம்சங்கள் க்ருஹஸ்தனுக்கும், க்ருஹஸ்தனின் சரத்தை/வசதி வாய்ப்புகள் வாத்யாருக்கும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நன்கு தெரிந்திருக்கும். ஆகவே இந்த க்ருஹங்களில் நடக்கும் பூர்வ/அபர/இத்யாதி வைதீக கார்யங்கள், க்ருஹஸ்தன்/வாத்யார் இருவரின் முழுமையான புரிதலுடன் சுமுகமாக நடந்துகொண்டிருக்கும். இருபாலாருக்கும் பூர்ண மனநிறைவும் இருக்கும்.
ஆனால் காலங்கள் மாற மாற, ப்ராம்மணக் குடும்பங்கள் உத்யோக நிமித்தம் ஊர்விட்டு ஊர் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான மைல்கள்கூடத் தாண்டிப் புலம்பெயர, அக்ரஹாரம் என்ற ஒன்றே அனேகமாக இல்லாது போய்விட, இந்த “ஆத்து வாத்யார்” Concept-ம் இல்லாமலேயே போய்விட்டது. இதன் விளைவுகள் என்ன? உத்யோக நிமித்தம் ஊர்விட்டு ஊர் 3, 4 வருடங்களுக்கு ஒருமுறை மாறிப் போய்க்கொண்டிருக்கும் இன்றைய ப்ராம்மணக் குடும்பங்கள் வருடந்தோறும் செய்ய வேண்டியிருக்கும் சிராத்தாதி கார்யங்கள், பூஜைகள், விரதங்கள் இன்ன பிற கார்யங்களுக்கு அவ்வப்போது ஒரு வாத்யாரை Temporary ஆகத்தான் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். வாத்யாரைப் பற்றிய விவரங்கள் க்ருஹஸ்தனுக்கோ, க்ருஹஸ்தனைப் பற்றிய விவரங்கள் வாத்யாருக்கோ, அனேகமாக பூர்ணமாகத் தெரிவதில்லை. ஆகவே ஒரு சின்ன ப்ரமேயத்திற்குக்கூட வாத்தியார்கள் “கொள்ளை கொள்ளையாகக்” கேட்கிறார்கள் என்று க்ருஹஸ்தனும், மற்ற எல்லா கார்யங்களுக்கும் தாராளமாகச் செலவு செய்யும் இந்த க்ருஹஸ்தர்கள், வைதீக கார்யம் என்று வரும்போது மட்டும் ஏன் இப்படி “சுஷ்கம்” பிடிக்கிறார்கள் என்று வாத்யார்களும். அங்கலாய்த்துக்கொண்ட நிலையிலேயே வைதீக கார்யங்கள் பெரும்பாலும் (மனநிறைவின்றியே) செய்யப்படுகின்றன.
எனக்குத் தெரிந்த ஒரு வாத்யார் அடிக்கடி கூறுவார் “கல்யாணத்திற்கு வாசிக்க உள்ளூர் கோவிலில் வாசிக்கும் நாதஸ்வரக்காரர்களையும் ஏற்பாடு செய்யலாம்; ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாச்சலம் பிள்ளை போன்ற பிரபல வித்வான்களையும் ஏற்பாடு செய்யலாம்; இரண்டுமே நாதஸ்வரம்தான். ஆனால் இந்த இருவகையானவர்களுக்கும் ஒரேவிதமான சன்மானம் அளிக்க முடியுமா? பூர்ணமாக ஏறத்தாழ 7, 8 வருடங்கள் வேத பாடசாலையில் சேர்ந்து பதாந்தம்/ க்ரமாந்தம்/ கனாந்தம் என்று அத்யயனம் செய்துள்ள வாத்யாருக்கும், “ப்ரயோகம்” மட்டும் கற்றுக்கொண்டு அதற்குத் தேவையான, வேகத்தில் உள்ள அத்யாவச்யமான பகுதிகளை மட்டும் கற்றுக்கொண்டு உபாத்யாயம் பண்ணி வைத்துக்கொண்டிருக்கும் வாத்யார்களுக்கும் ஒரே மாதிரி தக்ஷீனை தர இயலுமா? இது ஏன் க்ருஹஸ்தவர்களுக்குப் புரிவதில்லை?” என்பது உண்மை தான். இதற்கு முக்கியக் காரணம் தற்கால பெரும்பாலான க்ருஹஸ்தர்களுக்கு வேதத்தைப் பற்றிய புரிதலும் அதிலுள்ள பல்வேறு படிப்பு நிலைகளும் தெரிவதில்லை. வேத அத்யயனத்தில் “அஸித்வயம், பதம், க்ரமம், கனம்” என்றும், பின்னர் “பாஷ்யம், லக்ஷணம்” என்றும் பல நிலைகள் உள்ளன. இவற்றைத் தற்காலப் படிப்பான Under Graduate Level, Graduate Level, Post Graduate Level, Doctorate Level ஆகியவற்றிற்கு ஒப்பிடலாம். ஏதோ “நாலு ஸமஸ்க்ருத மந்திரங்கள்” காதில் விழுந்து கர்மாக்கள் முடிந்தால் போதும் என்ற “ஏனோ தானோ” மனப்பான்மை பெரும்பாலோரிடத்தில் பெருகிவிட்டது. “சீக்ரம் கார்யங்களை நடத்தித் தாருங்கள், ஆபிஸீக்கு லீவ் போட முடியாது. பர்மிஷன் மட்டுமே போட்டுள்ளேன்” என்று வாத்யார்களை நிர்ப்பந்திக்கும் க்ருஹஸ்தர்கள் இன்று அதிகமாகிக்கொண்டே போகிறார்கள்.
கண்டிப்பாக இந்நிலை மாற வேண்டும். இவர் என்“Family Doctor” எதுவானாலும் யாருக்கானாலும் இவரிடம்தான் நாங்கள் செல்வது வழக்கம். அவர் சொல்வது “வேதவாக்கு” என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் க்ருஹஸ்தர்கள் ஏன் தங்களுக்கென்று ஓர் “ஆத்து வாத்யாரை”ப் பரிச்சயப்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார்கள்?
என் நண்பர் ஒருவர் 3, 4 வருடங்களுக்கு ஒருமுறை ஊர் ஊராக, ஏன் மாநிலம் விட்டு மாநிலமும்கூட மாற்றலாகிச் செல்லும் வங்கிப் பணியில் உயர் அதிகாரியாய் இருந்தார். அவர் தகப்பனார் அவரிடம் கூறுவார், “நீ எந்த ஊருக்கு மாற்றலாகிச் சென்றாலும் முதலில் அந்த ஊரில் உள்ள ஒரு நல்ல வாத்யாரை அணுகி “ஆத்து வாத்யாராக” ஸ்வீகரித்துக்கொண்டுவிடு. அந்த ஊரைவிட்டு நீ வேறு ஊர் மாற்றலாகிச் செல்லும்வரை அவர்தான் நம் ஆத்து வைதீக கர்மாக்களைச் செய்து தர வேண்டும். அப்போதுதான் உனக்கும் கவலையில்லாமல் இருக்கும் கார்யங்களும் க்ரமப்படி நடக்கும் என்று”; என் நண்பர் இந்த அறிவுரையை இன்றளவும் விடாமல் கடை பிடித்துக்கொண்டு வருகிறார்.
அடிக்கடி மாற்றலில் செல்லும் என் நண்பரை ஒத்தவர்கள் செல்லும் புது இடங்களில் எல்லாம் வீட்டு வேலை செய்ய ஒரு Servant maid, குழந்தைகளை ஸ்கூலில் கொண்டு விட்டு, கூட்டி வர ஒரு ஆட்டோ ரிக்ஷாக்காரர், ஒரு Family Doctor ஆகியவர்களை அந்தந்த ஊர்களில் தேடிப்பிடித்து, கூடுமானவரை அவர்களையே மாற்றாமல் வைத்துக்கொள்ளும் போது ஓர் “ஆத்து வாத்யாரை”த் தங்களுக்கென அமைத்துக்கொள்வது முடியாதா என்ன? நம்மைப் பற்றிய ஒரு முறையான அறிமுகம் வாத்யாருக்கும், வாத்யாரைப் பற்றிய, அவரது யோக்யதாம்சங்கள், எதிர்பார்ப்புகள் பற்றிய ஒரு முறையான அறிமுகம் நமக்கும் கிடைத்துவிட்டால், வாத்யார், க்ருஹஸ்தன் இருவருக்கிடையே பரஸ்பர அவநம்பிக்கைக்கு இடம் ஏது?
இருவேறு நபர்களுக்குக் கொடுக்கப்படும் பணி ஒன்றேயாயினும் அவர்களது Qualification/ Skills/Experience ஆகியவற்றை பொறுத்து அவர்களது ஊதியத்தில் வித்யாசம் ஏற்படும்தானே?
இந்த வித்யாசம் Doctor, Lawyer, Auditor, Engineer ஆகியோரது தொழில்களில் உள்ளதுதானே? “காசுக்குத் தகுந்த பணியாரம்” என்ற வழக்கு கொச்சையாகத் தோன்றினாலும் அதுதானே உண்மை? ஜுரத்திற்காகக் கொடுக்கப்படும் Paracetamol மாத்திரை ஒன்றானாலும் கொடுக்கும் டாக்டர் MBBS அல்லது MDயா என்பதைப் பொருத்து அவரது திமீமீs வேறுபடுகிறதுதானே? அதே டாக்டர்கள் கிராமப்புறத்தில் பணிபுரிந்தால் ஒரு Feesம் நகர்ப்புறத்தில் பணிபுரிந்தால் கூடுதலான Feesம் தானே வாங்குகிறார்கள்? அப்படி இருக்கும்போது நன்றாக அத்யயனம் செய்த, ப்ரயோக அனுபவம் உள்ள வாத்யார்களுக்கும் ‘make shift’வாத்யார்களுக்கும் கொடுக்கப்படும் பணி, ச்ராத்தம் என்ற ஒன்றேயாயினும் தக்ஷிணையில் வேறுபாடு கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும் என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன? இதைப் புரிந்துகொள்ளாமல் இந்த வாத்யார் குறைத்து வாங்குகிறார், அந்த வாத்யார் கூடக்கேட்கிறார் என்று அங்கலாய்ப்பதில் நியாயம் இல்லை.
காய்கறி அங்காடி உட்பட எந்த ஓரிடத்திலும் பேரம் பேச முடியாத இந்தக் காலத்தில், ஓர் வைதீக கார்யம் - அது கல்யாணமாகட்டும், க்ருஹப்ரவேசமாகட்டும், கணபதி/நவக்ரஹ இத்யாதி ஹோமங்களாகட்டும், ச்ராத்தாதி கார்யங்களாகட்டும்/ இவை நன்கு நடந்தால்தான் நமக்கும் நம் குடும்பத்திற்கும் ஷேமம் கிட்டும் என நம்பும் க்ருஹஸ்தன், அதற்கான செலவிற்கு/ தக்ஷிணைக்குப் பேரம் பேசலாமா? நம் சக்திக்குத் தகுந்த ஒரு வாத்யாரை, அவருடன் மனம்விட்டுப் பேசி நாம் நிரந்தரமாக ஏற்பாடு செய்துகொண்டுவிட்டால், பின்னால் பரஸ்பரம் ஓர் அவநம்பிக்கையோ, மனக்லேசமோ, பேரம் பேசும் நிலையோ ஏற்படாதே? நம் ஆத்து வைதீக கர்மாக்களை முழு மனநிறைவோடு நடத்திக்கொள்ளலாமே!
ஆகவே ஒவ்வொரு ப்ராம்மண க்ருஹதனும் Adhocஆக அவ்வப்போது ஒரு வாத்யாரைத் தேடிப்போகாமல் தனக்கென்று, தன் கொடுக்கும் சக்திக்கேற்ப ஒரு வாத்யாரை அவரது யோக்யதாம்சம் அறிந்து, முழு மனதோடு அவரை “ஆத்து வாத்யாராக” அமைத்துக் கொண்டு விட்டால், அந்த க்ருஹஸ்தன் செய்யும் வைதீக கர்மாக்கள் அவருக்கு முழு மனநிறைவைத் தரும் என்பது திண்ணம்.