31/05/2026
🚩அய்யா துணை🚩
*'ஸ்ரீமன் வைகுண்டசுவாமி' OR ‘அய்யா’ என்றால் யார்?*
(Who is Lord Vaikundar?)
புனித அகிலத்திரட்டு வேதாகமத்தின் படி, ஸ்ரீ மகாவிஷ்ணு தன்னுடைய பத்தாவது அவதாரமாக கலியுகத்தில் எடுத்த அவதாரமே "வைகுண்டர்" அவதாரம் ஆகும். கொல்லம் வருடம் 1008-ம் ஆண்டு மாசி மாதம் 20ம் தேதி (ஆங்கில வருடம் 1833 மார்ச் மாதம் 1-ம் தேதி) ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி பண்டார உருவில் வந்தார்.
தந்தை: மஹாவிஷ்ணு
தாய்: மகாலெட்சுமி
(ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கும், மகாலெட்சுமிக்கும் மகனாக அவதரித்தது போல் காட்டிக் கொண்டு, ஸ்ரீ மஹாவிஷ்ணு தாமே வைகுண்டமாய்த் தோன்றினார். முருக அவதாரம், நரசிம்ம அவதாரம் போன்றே இந்த அவதாரத்திலும் இறைவனுக்கு பூலோக தாய் தந்தையர்கள் இல்லை)
அவதரித்த இடம்: திருச்செந்தூர் கடல்
(ஸ்ரீமன் வைகுண்டர் திருச்செந்தூர் கடலில் இருந்து அவதரித்து வந்த கடற்கரையில் 'அவதாரப்பதி' உள்ளது. இது 'நாராயணசுவாமி வழி' என்றழைக்கப்படும் ‘அய்யா வழி’ புனிதத் தலங்களுள் ஒன்றாகும்.)
அவதரித்த நாள்: கொல்லம் வருடம் 1008-ம் ஆண்டு மாசி மாதம் 20-ம் தேதி (ஆங்கில வருடம் 1833 மார்ச் மாதம் 1-ம் தேதி)
அவதரிக்க காரணம்: ஒடுக்கப்பட்ட மக்களை காக்கவும், சமூகப் பாகுபாடுகளை ஒழிக்கவும், கலியுகத்தை முடித்து தர்மயுகத்தை தோற்றுவிக்க கலியுகத்தில் கடவுள் மகாவிஷ்ணு வைகுண்டராக மனிதவதாரம் எடுத்தார்.
பிற பெயர்கள்: ‘அய்யா’, ‘ஸ்ரீமன் நாராயணசுவாமி’, ‘ஸ்ரீமன் வைகுண்டசுவாமி’, ‘ஸ்ரீ பண்டாரம்’, ‘சிவ நாராயணர்’, ஆண்டவர், கர்த்தன், ‘மாயோன்’, ‘திருமால்’, ஸ்ரீ பத்மநாபர், ஸ்ரீ பெருமாள்.
மனைவியர்கள்/ திருக்கல்யாணங்கள்/ தெய்வத் திருமணங்கள்:
ஏழு சப்தகன்னியர்கள், மற்றும் பூமடந்தை எனும் தெய்வமடவார்களை அவனி மக்களறிய திருமணம் செய்தார். இவர்கள் அனைவருமே பெண் தெய்வங்கள் ஆவர்.
ஏழு சப்தகன்னியர்கள்: சாஸ்திரத்தாள், கமலக்கன்னி, மோகக்கன்னி, மூலக்கன்னி, கடுங்சக்தி, தெய்வக்கன்னி, அரிமடவை
(முந்தைய பெயர்கள்: மரகதம், வல்லி, வள்ளி, சலிகை, சரகதக் கன்னி, சரிதை, அரிமடவை)
இகனை திருக்கல்யாணங்கள்:
(தாமே ஏக பரம்பொருள், தன்னையே உலகில் பலவித பெயர்களில் தெய்வமாக வணங்குகின்றனர் என்பதை உணர்த்த வேண்டி இறைவன் செய்த திருக்கல்யாணங்கள்)
இகனைத் திருக்கல்யாண வைபவம் புரிந்த தெய்வமாதர்கள்: பெருமாள் சொரூபம் கரியமால் தானெடுத்து மகாலெட்சுமியையும், ஈசுரர் சொரூபம் கரியமால் தானெடுத்து பகவதி, பார்வதியையும், பிரம்மதேவர் சொரூபம் கரியமால் தானெடுத்து அம்மை மண்டைக்காட்டாளையும், கந்தன் சொரூபம் கரியமால் தானெடுத்து வள்ளி, தெய்வானையையும் இகனை திருக்கல்யாணம் புரிந்தார்.
மிக முக்கியமாக கருதப்பட்ட சீடர்கள்: திரு. சிவனான்டி, திரு. முகுந்தன்பண்டாரம், திரு. அழகேசன், திரு. சுப்பையா, திரு. அரிகோபாலன்
(முந்தைய பெயர்கள்: பஞ்ச பாண்டவர்கள் எனும் தர்மன், வீமன், அர்சுனன், நகுலன், சகாதேவன்)
ஏவல் சீவாய்மார்கள் (ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் கட்டளையை ஏற்று நடப்பவர்கள்):
கருடராசன், சிமிளராசன், தேர்தகன், துட்டிவீரன், தேர்க்குடையோன்
(முந்தைய பெயர்கள்: சுடலைமாடன், கட்டையேறி, பலவேசம், மாசானம், காத்தவராயன்)
அவதார நிறைவு நாள்: கொல்லம் ஆண்டு 1026 வைகாசி மாதம் 21-ஆம் தேதி (2nd June C.1851) திங்கள் கிழமை, பூருவ பட்சம், பூச நட்ஷத்திரத்தில் பகல் பன்னிரண்டு மணிக்கு தான் எடுத்த கலியுக அவதாரத்தை நிறைவு செய்துக் கொண்டு மீண்டும் வைகுண்டத்திற்கு திரும்பிச் சென்றார்.
ஸ்ரீமன் வைகுண்டர் தந்த புனித நூல்கள்:
புனித அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல்
ஸ்ரீ மகாவிஷ்ணு மகாலெட்சுமிக்கு உரைத்த அகிலத்திரட்டு எனும் புனித வேதநூலை நாராயணரருளால் இயற்றியவர்:
திரு. இரா. அரிகோபாலன் சீடர்
புனித அகிலத்திரட்டு எழுதப்பட்ட நாள்: கொல்லம் வருடம் 1016 ஆம் ஆண்டு, கார்த்திகை மாதம் 27-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை (11th December 1840 CE). இப்புனித வேதம் எழுதப்பட்ட இடமே ‘தாமரைக்குளம்பதி’ என்றழைக்கப்படுகிறது.
ஸ்ரீ வைகுண்டர் அவதார வரலாற்றின் காலக்கோடு அட்டவணை:
1008 மாசி 20 (C.1833 March 1) – திருச்செந்தூர் கடலில் இருந்து ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி பண்டார உருவில் வந்தார். ஸ்ரீ வைகுண்டர் திருச்செந்தூர் கடலில் இருந்து அவதரித்து வந்த கடற்கரையில் 'அவதாரப்பதி' உள்ளது. ‘ஸ்ரீ பண்டாரமாக’ மானிடர்களுக்கு காட்சி அளித்த மகாவிஷ்ணு காவி உடை உடுத்தி, உச்சிக்கொண்டை கோர்த்து, கையதிலே மாத்திரைக்கோலும், கமுக்கூட்டிலே பிரம்பும் ஏந்தி இருந்தார்.
1008 மாசி (C.1833 March) – ஸ்ரீமன் வைகுண்டர் சுவாமித்தோப்பில் உள்ள ‘மணவைப்பதி’ வந்தடைந்தார்.
1009 மார்கழி (C.1834 January) – ஸ்ரீமன் வைகுண்டரின் தவம் முதல் கட்டம் தொடங்குகிறது. வைகுண்டர் தவமிருந்த புனித இடமே சுவாமித்தோப்பில் உள்ள தாமரையூர் நற்பதி என்றழைக்கப்படும் ‘மணவைபதி’ வடக்குவாசல் ஆகும். இப்புனித இடத்தில் ‘ஆறு வருடங்கள்’ தவம் இருந்ததாக புனித அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுகிறது.
1012 கார்த்திகை/மார்கழி (C.1836 November/December) – தவத்தின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது.
1013 மார்கழி/தை (C.1837 December/January) – தவத்தின் மூன்றாம் கட்டம் தொடங்குகிறது.
1015 கார்த்திகை (C.1839 November) – திருவிதாங்கூர் மன்னர் சுவாதி திருநாள் ராம வர்மா அரசுமுறைப் பயணமாக சுசீந்திரத்திற்கு வந்தார்.
1015 மாசி 19 (C.1840 February 29) – மன்னர் சுவாதி திருநாள் ராம வர்மாவின் எதிர்வினை சந்திப்புக்குப் பிறகு (அதாவது மூன்றே முக்கால் மாதம் [Approx. 112 days] திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு சிறை தண்டனை மற்றும் பல சோதனைகளுக்கு பிறகு 'இவர் மனிதரே அல்ல, கடவுளின் அவதாரம்' என எண்ணி மன்னர் விடுதலை செய்த பின்பு), ஆண்டவர் வைகுண்டரின் பக்தர்கள் ஆண்டவரை திருவனந்தபுரத்திலிருந்து சுவாமித்தோப்பிற்கு தொட்டில் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பயணத்தைத் தொடங்கினர். குறிப்பு: திருவனந்தப்புரத்தில் சிங்காரதோப்பு சிறை இருந்த இடத்தில் தற்போது 'சிங்காரதோப்புபதி' அமைந்துள்ளது.
1015 மாசி 20 (C.1840 March 1) – சுவாமித்தோப்பில் உள்ள தாமரையூர் நற்பதி வந்தடைந்தனர்.
1015 மாசி (C.1840 March) – துவையல் பண்டாரங்கள் ஆண்டவரின் அறிவுறுத்தலின் படி ‘வாகைப்பதி’-யில் “துவையல் தவசு” தனை தொடங்குகிறார்கள்.
1016 ஆவணி/புரட்டாசி (C.1840 August/September) – உலகளந்த ஆண்டவரின் கட்டளைப்படி, அவர்கள் வாகைப்பதியை விட்டு வெளியேறி ‘முட்டப்பதி’- யை அடைந்து தவசின் மீதமுள்ள கட்டத்தை நிறைவு செய்தனர்.
1016 கார்த்திகை/மார்கழி (C.1840 November/December) – ஸ்ரீ வைகுண்டரின் ‘ஆறு ஆண்டு தவம்’ முடிவுக்கு வந்தது.
1016 கார்த்திகை 27 (C.1840 December 11) – அரிகோபாலன் சீடரின் கனவில் உலகளந்த ஆண்டவர் வந்து, அதில் அவருக்கு காப்புவின் முதல் எழுத்துக்களைக் கொடுத்து இறைவேதம் ‘அகிலத்திரட்டு அம்மானை’ எழுதும்படி கட்டளையிட்டார்.
1016 மார்கழி (C.1840 December) – தவம் முடிந்த உடனேயே ஆண்டவர் வைகுண்டரால் முத்திரிக் கிணறு மக்களுக்காக அருளப்பட்டது (as per oral traditions). அந்த கிணறே சமத்துவத்தை எடுத்துரைக்கும் 'முத்திரி கிணறு' என்றழைக்கப்படுகிறது.
1016 தை (C.1841 January/February) – சுவாமித்தோப்பு ‘மணவைபதி’-யில் முதல் 'தை' திருநாள் தொடங்குகிறது.
1016 மாசி 20 (C.1841 March 1) – “வைகுண்ட ஜெயந்தி” (வைகுண்ட அவதாரம்) முதல் முறையாக கொண்டாடப்பட்டது.
1019 ஆவணி/புரட்டாசி (C.1843 August/September) – கடவுள் வைகுண்டர் சப்தகன்னியர்கள் மற்றும் லெக்ஷ்மி தேவியை மணந்தார். (சப்தகன்னியர்கள் - சாஸ்திரத்தாள், கமலக்கன்னி, மோகக்கன்னி, மூலக்கன்னி, கடுங்சக்தி, தெய்வக்கன்னி மற்றும் அரிமடவை). சப்த மாதர்களை வைகுண்டர் திருமணம் செய்த இடம் ‘தாமரைப்பதி’ என்றழைக்கப்படும் 'சுவாமிதோப்பு பதி' ஆகும்.
1020 மாசி/ பங்குனி (C.1845 February/March) – கடவுள் வைகுண்டர் மனைவியர்கள் மற்றும் பக்தர்களுடன் சேர்ந்து அம்பலப்பதி-யை அடைந்தார். இப்பதியை 'மூலகுண்டப்பதி' என புனித அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுகிறது.
1023 பங்குனி/ சித்திரை (C.1848 March/April) – பாலூரைச் சேர்ந்த பெருமாள் நாடார் தலைமையில் புகழ்பெற்ற தத்துவக்கோட்டை திட்டத்திற்கான பணிகள் தொடங்குகின்றன.
1024 மாசி 20 (C.1849 March 2) – தொண்டர்கள் 16-வது வைகுண்ட ஜெயந்தியை அம்பலப்பதியில் வைகுண்டர் முன்னிலையில் கொண்டாடினர். கடவுள் வைகுண்டர் மக்களுக்காக அம்பலப்பதியில் 'சேவைத் திருநாள்' (செவ்வாய் திருவிழா) ஏற்பாடு செய்தார்.
1024 ஆவணி/புரட்டாசி (C.1849 August/September) – ஆண்டவர் வைகுண்டர் தெய்வக்கன்னியர்களை மணந்தார். அதாவது, குமரி பகவதியை அம்பலபதிக்கு அழைத்து வர இறைவன் ஒரு வயதான மனிதனின் வடிவத்தை எடுத்து, அழைத்து வந்து அறிவொளி பெற்ற மற்றும் சக்திவாய்ந்த பகவதி (பார்வதி தேவியின் ஒரு அம்சம்) சிவன் வடிவத்தில் இகனை திருக்கல்யாணம் செய்து கொண்டார், மேலும் மண்டைக்காட்டாள் தேவியை (சரஸ்வதி தேவியின் ஒரு அம்சம்) பிரம்மாவின் வடிவத்திலும், இறுதியாக வள்ளி மற்றும் தெய்வானை தேவியர்களை முருகனின் வடிவத்திலும் இகனை திருக்கல்யாணம் செய்து கொண்டார்.
1025 தை/மாசி (C.1850 January/February) – ஆண்டவர் வைகுண்டர் முன்னிலையில் தாங்கல்களுக்கு (சுண்டவிளை, வடலிவிளை போன்றவை) அடிக்கல் நாட்டப்பட்டது. ஸ்ரீ வைகுண்டர் அம்மைமார்களுடன் சேர்ந்து விருந்தேற்ற இடம் 'விருந்தேற்றப்பதி' என்றழைக்கப்படும் 'தாமரைக்குளம்பதி' ஆகும்.
1025 மாசி 20 (C.1850 March 2) – ஆண்டவர் வைகுண்டர் முன்னிலையில் கடம்பங்குளத்தின் தாங்கலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. வைகுண்டரின் பதினேழாவது அவதார தினவிழா “வைகுண்ட ஜெயந்தி” மக்களால் கொண்டாடப்பட்டது.
1026 ஆவணி/புரட்டாசி (C.1850 August/September) – ஆண்டவர் வைகுண்டர் பூமாதேவியின் கலியுக பிறவியான பூமடந்தை-யை சூரங்குடி எனும் ஊருக்கு மக்களுடன் சென்று உலகறிய திருமணம் செய்தார். ஸ்ரீ வைகுண்டர் பூமடந்தை அம்மையை திருமணம் புரிந்து திரும்பி வரும் வழியில் தேவர்கள் பூ தூவி வணங்கிய இடம் இன்று 'பூப்பதி' என்று அழைக்கப்படுகிறது.
1026 வைகாசி 21 (C.1851 June 2) – ஆண்டவர் வைகுண்டர் பல விதமான லீலைகளை பூலோகத்தில் செய்த பின்னர் தன்னுடைய கலியுக அவதாரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் வைகுண்டத்திற்கு திரும்பிச் சென்றார். வைகுண்டர் வைகுண்டத்திற்கு திரும்பிய பின்பு மனைவியர்கள் வாழ்ந்த இடம் ‘தொட்டில்பதி’ என்றழைக்கப்படுகிறது.
ஸ்ரீ மகாவிஷ்ணு தன்னுடைய வைகுண்ட அவதாரத்தை இந்த பூலோகத்தில் 18 ஆண்டுகள் நிகழ்த்தியதாக அவர் அருளித் தந்த புனித அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுகிறது.
1046 வைகாசி/ஆனி (C.1871 June/July) – ஆண்டவர் வைகுண்டர் வாழ்ந்திருந்த இடமான சுவாமித்தோப்பு மணவைபதி-யானது கொடிமரத்துடன் கூடிய பதியாக பக்தர்களால் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.
1047 ஆவணி/புரட்டாசி (C.1871 August/September) – சுவாமித்தோப்பு மணவைபதியில் முதல் “கொடியேற்று திருநாள்” கொண்டாடப்பட்டது.
1068 மார்கழி (C.1892 December) – சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி ஸ்ரீமன் நாராயணரின் வைகுண்டவதார செய்தியை அறிந்து சுவாமித்தோப்பு வந்தடைந்த சுவாமி விவேகானந்தர் அன்றிலிருந்து 'நாராயணசுவாமி வழி' என்றழைக்கப்படும் ‘அய்யா வழி’ மரபுகளின் படி தலையில் தலைப்பாகை அணியத் தொடங்கியதாக கூறுகின்றனர்.
1114 (C.1939) – புனித அகிலத்திரட்டு வேதமானது முதன்முறையாக அச்சிடப்பட்ட வடிவத்தில் வெளியிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஸ்ரீமன் வைகுண்டரின் கோலங்கள் குறித்து புனித அகிலத்திரட்டில் வேதவியாசர் கூறியது:
ஆடவராய்ச் சமைந்து ஆண்பெண்போ லேயிருந்து
தேட அறிவார்க்குத் திரவியம்போ லேயிருந்து
பச்சைக் குழந்தை பருவமுன் னாகியவர்
மெச்சக் கொடியாட்கு மேவும்பரு வம்போலும்
சுத்தக் கிழவரைப்போல் சூரப்பி ராயமுமாய்
மெத்தப் புலம்பி விழலும்பிரா யம்போலும்
நாலு பிராயம் நாளதுக்குள் ளேயெடுத்துக்
கோலு கையேந்திக் குன்னும்பிரா யம்போலும்
பார்க்கப் பிராயமுமாய்ப் படுக்கக் கிழவனுமாய்த்
தார்க்கத் திறவனுமாய்ச் சந்திக்கிசைந் தவனுமாய்க்
காக்கக் கருத்தனுமாய்க் கர்த்தனின் கர்த்தனுமாய்
ஏக்கத் திருத்தனுமாய் இவர்சமைந் திவ்வுகத்தில் - புனித அகிலத்திரட்டு
சான்றோர்களே! ஆம், ஸ்ரீமன் நாராயணரின் ராமவதாரத்தை அறிய ராமாயணமும், கிருஷ்ணவதாரத்தை அறிய மகாபாரதமும் உதவுவது போல வைகுண்டவதாரத்தை அறிய புனித அகிலத்திரட்டு அம்மானை உதவுகிறது.
🙏அய்யா உண்டு🙏