Puthuyir

Puthuyir “புத்துயிர்” 1949ம் ஆண்டு ஜனவரி மாதம், ?

20/05/2026

காலைத் தியானம் – மே 21, 2026

வியாழன் கிருபையின் சிம்மாசனம்!

21-05-2026

1 இராஜாக்கள் 7:1-12

நீதியின் செங்கோல்! சாலொமோனின் பிரம்மாண்டமான அரண்மனை வளாகத்தில் எத்தனையோ மாளிகைகள் இருந்தாலும், எல்லார் கண்களும் பயபக்தியோடு நோக்கும் ஒரு தனித்துவமான இடம் இருந்தது. அதுவே அவன் நியாயம் விசாரிக்கவும் தீர்ப்பளிக்கவும் கட்டிய “நியாயாசன மண்டபம்” (வசனம் 7). பழைய உடன்படிக்கையில், ஒரு சாதாரண மனிதன் இந்த நியாயாசனத்தின் முன்னே வரும்போது, தன் குற்றங்களுக்கான தண்டனை கிடைத்துவிடுமோ என்ற மரண பயத்திலேயே நடுங்கி நிற்பான். நீதியின் வாள் அங்கே தயவின்றி சுழலும். ஆனால், புதிய உடன்படிக்கையில் நாம் நிற்கிற நியாயாசன மண்டபம் முற்றிலும் மாறுபட்டது. சிலுவையில் இயேசு செய்த தியாகத்தினால், இப்போது இரக்கமும் தயவும் வழிந்தோடும் ‘கிருபையின் சிம்மாசனமாக’ (எபிரெயர் 4:16) மாறிவிட்டது! தேவனுடைய சிம்மாசனம் உன்னைத் தண்டிக்கும் என்று நினைத்துப் பயந்து விடாதே. அங்கு தண்டனையல்ல, கல்வாரியின் இரக்கமே அரசாளுகிறது!

ஜெபம்: பிதாவே, உமது கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையால் இறங்கிடுமே; தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே. ஆமென்.

19/05/2026

காலைத் தியானம் – மே 20, 2026

புதன் மறைக்கப்பட்ட கற்பாறைகள்!

20-05-2026

1 இராஜாக்கள் 6:15-38

பொன்னால் மூடிய பாறைகள்! எருசலேம் தேவாலயத்தின் பிரம்மாண்டம் அதன் அளவுகளில் இல்லை; அதன் அந்தரங்கத்தில்தான் ஒளிந்திருக்கிறது! வெளியிலிருந்து பார்த்தால் அது கரடுமுரடான கற்பாறைகளால் எழுப்பப்பட்ட மாளிகை. ஆனால், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து பார்; அங்கே ஒரு கல்லைக் கூட உன் கண்கள் காணமுடியாது! (வசனம் 18) என்று சரித்திரம் வியக்கிறது. கடினமான பாறைகள் அனைத்தும் சுத்தப் பொன்னாலும், வாசனையுள்ள கேதுரு மரத்தாலும் முற்றிலுமாய் மூடப்பட்டுவிட்டன. மரணத்தைச் சுட்டிக்காட்டும் நியாயப்பிரமாணத்தின் ‘கல்’, புதிய உடன்படிக்கையின் கிருபையாகிய ‘தங்கத்தால்’ முற்றுமாய் விழுங்கப்பட்டுவிட்டது. உன் மாம்சத்தின் பலவீனங்களையும், கல்லைப் போன்ற கடினமான உன் கடந்த காலத்தையும் சுட்டிக்காட்டிச் சத்துரு உன்மேல் பழிசுமத்தலாம். ஆனால், தேவன் உன்னைப் பார்க்கும்போது அந்தப் பாறைகளைக் காண்பதில்லை; உன்னை முற்றுமாய் மூடியிருக்கும் இயேசுவின் சுத்தப் பொன்னான நீதியையே காண்கிறார்! உன் மாம்சத்தின் குறைகளைப் பார்த்து சுயபரிதாபத்தில் மூழ்குவதை நிறுத்திவிட்டு, தேவன் உன்னைக் காணும் கண்ணோட்டத்தின் வெளிப்பாட்டினை நீ பெற்றுக் கொள்வாயாக.

ஜெபம்: அன்பின் பிதாவே, சத்துருவின் குற்றச்சாட்டுகளுக்குச் செவிகொடாமல், என்னை அலங்கரிக்கும் கல்வாரியின் கிருபையில் நான் என்றென்றும் நிமிர்ந்து நிற்க எனக்குப் பெலன் தாரும். ஆமென்.

19/05/2026

காலைத் தியானம் – மே 19, 2026

செவ்வாய் சத்தமில்லாத பிரம்மாண்டம்!

19-05-2026

1 இராஜாக்கள் 6:1–14

எருசலேமின் மோரியா மலையில் பல ஆண்டுகளாகக் கனவு காணப்பட்ட தேவனுடைய ஆலயம், இதோ சாலொமோனின் கரங்களால் உருப்பெறுகிறது. இந்த மாபெரும் கட்டுமானத்தில் ஒரு ஆச்சரியமான ரகசியம் ஒளிந்திருக்கிறது: சுத்தியல், கோடாரி முதலான எந்த இரும்பு ஆயுதத்தின் சத்தமும் கேட்கப்படவே இல்லை (வசனம் 7). பொதுவாக, உலகத்தின் ஒரு மாளிகை எழும்பும்போது உளிச் சத்தமும் சம்மட்டியின் இரைச்சலும் திசைகளை அதிரவைக்கும். ஆனால், சர்வவல்லவரின் சிம்மாசனமோ, மனிதப் பிரயத்தனத்தின் எந்த ஆரவாரமுமின்றி, அமைதியின் மடியில் கம்பீரமாகச் செதுக்கப்படுகிறது! இதுவே ஆவிக்குரிய இரகசியம்: தேவன் உன்னைத் தமது மகிமையின் ஆலயமாகக் கட்டும்போது, அது உன் மாம்சத்தின் இரைச்சலிலோ சுய வியர்வையிலோ நடப்பதில்லை. கல்வாரியின் கிருபையில் நீ இளைப்பாறும்போது, ஆவியானவர் சத்தமின்றி உன்னைச் செதுக்குகிறார்!

ஜெபம்: கர்த்தாவே, உமது சித்தத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கிறேன். உமக்குப் பிரியமான பாத்திரமாக என்னை வனைந்தருளும் . ஆமென்.

Post navigation

19/05/2026

காலைத் தியானம் – மே 18, 2026

திங்கள் எருசலேமில் அந்நியன் வாசம்!

18-05-2026

1 இராஜாக்கள் 5:10–18

யெகோவாவின் பிரம்மாண்டமான தேவாலயம் எழும்பப்போகிறது. ஆனால், அதற்கான கேதுரு மரங்கள் எங்கிருந்து வருகின்றன? தீரு தேசத்துப் புறஜாதி மன்னனான ஈராமின் கைகளைத் தேவன் பயன்படுத்துகிறார்! நியாயப்பிரமாணம் அந்நியர்களைத் தீட்டு என்று சொல்லிப் பிரகாரத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தியது; ஆனால் தேவனோ, தம்முடைய சந்நிதியை நிர்மாணிக்க அதே அந்நியர்களின் வியர்வையையே தெரிந்துகொண்டார்! சட்டத்தின் சுவர்களைத் தாண்டி, கிருபை தன் எல்லையை ஆரம்பத்திலேயே விரித்துவிட்டது. இது கல்வாரிச் சிலுவையின் பிரம்மாண்டமான நிழல்! யூதனென்றும் கிரேக்கனென்றும் இனிப் பேதமில்லை; சமூகத்தால் விலக்கப்பட்டவர்களையும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கொண்டுதான் தேவன் தம்முடைய நித்திய மாளிகையைக் கட்டுகிறார். தகுதியற்றவன் என்று உன்னை ஒருபோதும் ஒதுக்கிக் கொள்ளாதே; சிலுவையின் கிருபை சகல தடைகளையும் உடைத்து, உன்னையும் தேவ மகிமையின் ஆலயத்தில் பிரதான தூணாக நிறுத்தும்!

ஜெபம்: தேவனே, என்னையும் உமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் உமது ஆலயத்தில் இணைத்துக்கொண்டதற்காக நன்றி. என்னை அரவணைத்த இதே நிபந்தனையற்ற கிருபையில் நான் என்றென்றும் நிலைத்திருக்கவும், அதை என் சகோதரர்களுக்கும் பகிரவும் எனக்குப் பெலன் தாரும். ஆமென்.

19/05/2026

காலைத் தியானம் – மே 17, 2026

ஞாயிறு தகப்பனின் சுதந்தரம்!

17-05-2026

1 இராஜாக்கள் 5:1–9

மலைநாட்டின் மகா பொக்கிஷம்! இஸ்ரவேலின் மாபெரும் தேவாலயத்தைக் கட்ட, உலகத்தின் தலைசிறந்த லீபனோனின் கேதுரு மரங்கள் எருசலேமை நோக்கிக் குவியத் தொடங்குகின்றன. ஆனால், இந்தப் பிரம்மாண்டமான பொக்கிஷத்தை சாலொமோன் தன் வாள் வலிமையால் போர்செய்து கைப்பற்றவில்லை; அது அவனுக்கு இலவசமாக வந்து சேர்கிறது! காரணம் என்ன? தீருவின் மன்னன் ஈராம், சாலொமோனின் தகப்பனான தாவீதின் மேல் வைத்திருந்த மாறாத நேசம்! தகப்பனின் உறவால், எந்தப் பிரயத்தனமுமின்றி மகன் ஆகச்சிறந்த பொக்கிஷங்களைச் சுதந்தரிக்கிறான். போர்க்களத்தைக் காணாதவன், அரியணையில் அமர்ந்தபடியே பெருஞ்செல்வத்தை அறுவடை செய்கிறான். இதுவே புதிய உடன்படிக்கையின் கல்வாரி ரகசியம்! தேவன் தமது ஆகச்சிறந்த ஆசீர்வாதங்களை உன் சொந்தத் தகுதியைப் பார்த்தோ, உன் மாம்சப் போராட்டங்களுக்காகவோ உனக்குத் தருவதில்லை. பிதாவானவர் குமாரனாகிய இயேசுவின் மேல் வைத்திருக்கும் பரிபூரண அன்பின் நிமித்தமாகவே உனக்கு எல்லாவற்றையும் இலவசமாக அருளுகிறார். உன் சுய தகுதியைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, கிறிஸ்து இயேசுவின் மூலமாக உனக்குக் கிடைத்த சுதந்தரத்தில் பரிபூரணமாக இளைப்பாறக் கற்றுக்கொள்!

ஜெபம்: அன்பின் பிதாவே, என் சுய முயற்சிகளை உதறிவிட்டு, இயேசுவின் உறவால் எனக்குக் கிடைக்கும் அளவற்ற கிருபைகளைச் சுதந்தரித்துக்கொள்ள எனக்குக் கற்றுத் தாரும். ஆமென்.

19/05/2026

காலைத் தியானம் – மே 16, 2026

சனி மண்டியிடும் மகா ஞானம்!

16-05-2026

நீதிமொழிகள் 9:1–18

அடிபணியும் அரியணை! சாலொமோன் கண்ட ஞானத்தின் ஏழாவது மற்றும் தலையாய இரகசியம் இதுதான்: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (வசனம் 10). மனிதன் பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராயத் தொலைநோக்கிகளை உருவாக்குகிறான்; ஆயிரக்கணக்கான புத்தகங்களை விழுங்கிப் பட்டங்களைச் சூடிக்கொள்கிறான். ஆனால், அண்டசராசரங்களைப் படைத்த சர்வவல்லவரின் முன் ஒரு சிறுபிள்ளையாய் மண்டியிடாமல், மனிதனால் மெய்யான ஞானத்தின் அரிச்சுவடியைக் கூடத் தொடமுடியாது. கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது தண்டனைக்கு அஞ்சி நடுங்கும் அடிமைத்தனமல்ல; அது கல்வாரி அன்பின் பிரம்மாண்டத்தைக் கண்டு மெய்சிலிர்த்து நிற்கும் பரிசுத்த நிலையைக் குறிக்கிறது! தேவனுடைய அளவற்ற கிருபையின் முன்னே நீ மண்டியிடும் அந்த நொடியில்தான் பரலோகத்தின் திறவுகோல் உன் வசமாகிறது!

ஜெபம்: தேவனே, உலக அறிவைக் கண்டு கர்வம் கொள்ளாமல், உமது கல்வாரி அன்பின் பிரம்மாண்டத்தைக் கண்டு, உமது கிருபையின் பாதத்தில் மண்டியிட்டு நித்திய ஞானத்தை நான் சுதந்தரிக்கச் செய்தருளும். ஆமென்.

19/05/2026

காலைத் தியானம் – மே 15, 2026

வெள்ளி இருதயத்தின் காவலாளி!

15-05-2026

நீதிமொழிகள் 4:1–27

உள்ளத்தின் அரண்! சாலொமோனின் ஞான உரை, ஒரு கோட்டையைக் காக்கும் தளபதியின் கட்டளையைப் போலத் தொனிக்கிறது. ஆனால் அது அவன் கண்டெடுத்த ஞானத்தின் ஆறாவது இரகசியம்: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்” (வசனம் 23). மனிதன் தன் பொக்கிஷங்களைக் காக்கப் பல அடுக்குக் காவல்களைப் போடுகிறான்; தன் அந்தஸ்தைக் காக்கப் போராடுகிறான். ஆனால், தன் ஆத்துமாவின் ஊற்றான இருதயத்தை மட்டும் சத்துருவுக்குத் திறந்து வைத்துவிடுகிறான்! கோலியாத்தை வீழ்த்திய கரங்கள், ஒரு பெண்ணின் பார்வையில் வீழ்ந்ததே; அது கரங்களின் பலவீனமா? அல்ல, அது காவலில்லாத இருதயத்தின் வீழ்ச்சி! உன் கண்கள் காணும் காட்சிகள், உன் செவிகள் கேட்கும் சொற்கள், இவையெல்லாமே உன் இருதயக் கோட்டைக்குள் நுழையும் ரகசிய வழிகள். நீ காணும் ஒரு சிறு காட்சி, அங்கே பெரு நெருப்பைப் பற்றவைக்கலாம். உன் கண்களையும், செவிகளையும், நாவையும் நீயே ஆளவில்லை என்றால், அவை உன்னை அழிவின் பள்ளத்தாக்கில் தள்ளிவிடும்! உனது இருதயம் தேவன் வாசம் செய்யும் பரிசுத்த பீடமாக இருக்கிறதா?

ஜெபம்: பரிசுத்த தேவனே, என் இருதயக் கோட்டைக்குள் சாத்தானின் அம்புகள் நுழையாதபடி, என் கண்களுக்கும் செவிகளுக்கும் நீரே காவலாளியாய் இரும். என் உள்ளம் உமது வார்த்தையால் மட்டுமே நிரம்பியிருக்க என்னைப் பரிசுத்தப்படுத்தும். ஆமென்.

19/05/2026

காலைத் தியானம் – மே 14, 2026

வியாழன் தகப்பனின் சிட்சை!

14-05-2026

நீதிமொழிகள் 3:11-12

சற்று நிகழ்காலத்திற்கு வருவோம்! இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், பிள்ளைகளை அடிக்காமல் வளர்க்க வேண்டும் என்ற சமுதாயத்தின் குரல் ஓங்கி ஒலிப்பதை நாம் பார்க்கிறோம். இது மனிதநேயம் மிக்க சரியான போதனைதான். ஆனால், இந்த ஆலோசனையைக் கடைப்பிடிக்கும் பல பெற்றோர், அடுத்த எல்லைக்குச் சென்று, பிள்ளைகளின் தவறுகளைக் கண்டிக்கவே தயங்குகிறார்கள். ‘கண்டிக்கப்படாத வளர்ப்பு, முடிவில் கண்ணீரில் முடியும்’ என்பதைப் பல நேரங்களில் இந்த நவீன சமூகம் மறந்துவிடுகிறது.

இந்த முரண்பாட்டிற்கு நடுவேதான் சாலொமோன் கண்ட ஞானத்தின் ஐந்தாம் இரகசியம் காலத்தை வென்று கம்பீரமாக நிற்கிறது: “கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே!” (வசனம் 11). மனிதன் எப்போதுமே திருத்தப்படுவதை வெறுக்கிறான்; தன் வழியே சரியென்று வாதாடுகிறான். உலகத்தில் தண்டனை என்பது ஒருவனை அழிப்பதற்காகவும் அவமானப்படுத்துவதற்காகவும் வழங்கப்படுகிறது. ஆனால், தேவனுடைய சிட்சையோ முற்றிலும் மாறுபட்டது! அது ஒரு நியாயாதிபதியின் கோபமல்ல; ஒரு தகப்பனின் பாசத் துடிதுடிப்பு! புதிய உடன்படிக்கையில், தேவன் நம்மை வியாதிகளாலோ விபத்துகளாலோ தண்டிப்பதில்லை; மாறாக, தம்முடைய வார்த்தையினாலும் ஆவியானவராலும் நம்மைத் திருத்தி வழிநடத்துகிறார். தேவனுடைய வார்த்தை உன்னை சிட்சிக்கும் போது, அதைச் சினமாக எண்ணி விலகாமல், உன்னைச் செதுக்க நீளும் தகப்பனின் அரவணைப்பாக ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடப்பதே ஞானத்தின் வழி!

ஜெபம்: அன்பின் தகப்பனே, என் சுயவழிகளை நியாயப்படுத்தாமல், என்னைச் செதுக்கும் உமது ஆவிக்குரிய சிட்சைக்கு என்னை முழுமையாய்க் கீழ்ப்படுத்துகிறேன். ஆமென்.

19/05/2026

காலைத் தியானம் – மே 13, 2026

புதன் சுயபுத்தியின்மேல் சாயாதே!

13-05-2026

நீதிமொழிகள் 3:1–10

நாம் அன்றாடம் இதைச் செய்கிறோம்! என்ன செய்கிறோம் என்பதைத் அறியாமல் இதைச் செய்கிறோம்! பிரச்சனைகளின் புயல் வீசும்போது, நம் சுய பலத்தால் முடிந்தவரை நீந்திப் போராடுகிறோம். பதற்றம் உச்சமடைந்து, மூச்சுத் திணறி மூழ்கும் தருணத்தில் மட்டுமே ‘வேறு வழியின்றி’ தேவனை நோக்கிக் கதறுகிறோம். அந்தத் தருணத்திலும் இயேசுவின் கிருபை கரம் நீட்டிக் காத்திருக்க, நாம் ஏன் சுய வியர்வையில் மூழ்க வேண்டும்? ஆனால் அதற்கும் மேலாக நாம் ஞானத்தில் வளர வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். சாலொமோன் கண்ட ஞானத்தின் நான்காம் இரகசியம் இதுதான்: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு”. மனித மூளை ஆயிரம் தர்க்கங்களை அடுக்கலாம்; உலகத்தின் தந்திரங்கள் பல குறுக்கு வழிகளைக் காட்டலாம். ஆனால் அவையனைத்தும் தாகம் தீர்க்காத கானல் நீரே! உன் அறிவின் எல்லை எங்கே முடிகிறதோ, அங்கேதான் தேவனுடைய கிருபையின் வழிநடத்துதல் தொடங்குகிறது. உன் சுயபுத்தியைக் கழற்றி வைத்துவிட்டு, முழு இருதயத்தோடு கர்த்தரையே நம்பு!

ஜெபம்: கர்த்தாவே, சுயமென்னில் சாம்பலாய் மாற; சுத்தாவியே அனல் மூட்டும்; ஜெயம் பெற்று மாமிசம் சாக; தேவா அருள் செய்குவீர். ஆமென்.

19/05/2026

காலைத் தியானம் – மே 12, 2026

செவ்வாய் மெய்யான ஞானம்!

12-05-2026

நீதிமொழிகள் 2:1–22

மனிதன் பொன்னையும் வெள்ளியையும் தேடி, பூமியின் ஆழத்தில் இருண்ட சுரங்கங்களில் தன் உயிரைப் பணயம் வைக்கிறான். என்னவொரு பரிதாபம் ! மண்ணில் புதைந்திருக்கும் உயிரற்ற உலோகத்துக்காக மூச்சுத் திணறத் தோண்டும் மனிதன், தன் ஆத்துமாவைக் காக்கும் நித்திய பொக்கிஷத்தை உதறித் தள்ளுகிறான். சாலொமோன் கண்ட ஞானத்தின் மூன்றாவது இரகசியம் இது தான்: “மெய்யான ஞானத்தைப் புதையலைப் போலத் தேட வேண்டும்”. உலகச் செல்வங்கள் உன் மாளிகையை அலங்கரிக்கலாம்; ஆனால், வஞ்சகரின் பசப்பு வார்த்தைகளிலிருந்தும், இச்சையின் மரண வலையிலிருந்தும் உன்னைத் தப்புவிக்க அவைகளால் ஒருக்காலும் முடியாது. தகிக்கும் பாவமும் வஞ்சகமும் உன்னை மாய்க்க வரும்போது, உன் கஜானாவில் தூங்கும் தங்கம் உன்னைக் காக்காது. அழியும் உலோகத்திற்காக இருளில் சாகசங்கள் செய்வதை விட, உன்னை மரணத்திலிருந்து மீட்கும் கிருபையாகிய கிறிஸ்துவுக்குள் ஆழமாய் வேரூன்றுவதே ஆகப்பெரிய ஞானம்!

ஜெபம்: கர்த்தாவே, அழியும் உலகச் செல்வங்களைத் தேடி என் ஜீவ நாட்களை வீணாக்காமல், என்னை மரண வலையிலிருந்து காக்கும் உமது ஞானத்தைப் புதையலைப்போலத் தேடுகிறேன். அழியா உம் ஞானத்தால் என்னை நிரப்பியருளும். ஆமென்.

10/05/2026

காலைத் தியானம் – மே 11, 2026

திங்கள் பட்டுக் கம்பளப் பாதாளம்!

11-05-2026

நீதிமொழிகள் 1:10-33

சாலொமோன் கண்ட ஞானத்தின் இரண்டாம் இரகசியம் இதுதான்: “பாவிகள் உனக்கு நயங்காட்டினால் சம்மதியாதே!” உலகத்தின் குறுக்குவழிகள் எப்போதும் கவர்ச்சியான பட்டுக்கம்பளம் விரித்தே உன்னை அழைக்கும். உழைக்காமல் கிடைக்கும் செல்வம், குறுக்குவழியில் வரும் வெற்றி எனப் பிசாசு அநேகப் போலி வாக்குத்தத்தங்களை அள்ளி வீசுவான். ஆனால், பிறருக்காக வலையை விரிப்பதாக நினைத்து, இந்த வஞ்சகர்கள் தங்கள் சொந்த ஆத்துமாவுக்கே கண்ணி வைக்கிறார்கள் (வசனம் 18). குறுக்குவழியில் கொள்ளையடிக்கும் அற்ப சந்தோஷம், முடிவில் உன் ஜீவனையே எடுத்துவிடும். தேவன் உனக்கென்று நியமித்திருக்கும் ஆசீர்வாதம், எந்தக் குறுக்குவழியையும் நாடாத நிதானத்தில் அடங்கியிருக்கிறது. மலிவான உலக ஆசைகளுக்காக உன் தரத்தைக் குறைத்துக்கொள்ளாதே! நீ இயேசுவின் இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்டவன்/ள்.

ஜெபம்: கர்த்தாவே, மலிவான ஆசைகளுக்காகப் பாவிகளோடு சமரசம் செய்யாமல், உமது கிருபையின் பாதையில் நிமிர்ந்து நடக்க எனக்குப் பெலன் தாரும். ஆமென்.

Address

Chennai
600040

Alerts

Be the first to know and let us send you an email when Puthuyir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Puthuyir:

Share