27/08/2026
"பத்திரிக்கை அறிக்கை"
27 ஆகஸ்ட் 2026
புது தில்லி:
நேபாளத்தில் பெரும் உயிர்ச்சேதத்தையும் கடுமையான அழிவையும் ஏற்படுத்தியுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) துணைத் தலைவர் எஸ். அமீனுல் ஹசன் தனது ஆழ்ந்த துயரத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இந்த மாபெரும் துயரமான தருணத்தில் நேபாள மக்களோடு எங்கள் இதயங்கள் துணை நிற்கின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பவும் பிரார்த்திக்கிறோம்.
மனித உயிர்களைக் காப்பாற்றுவது, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, குடிநீர், தங்குமிடம், மருத்துவ உதவி மற்றும் பிற அனைத்து வகையான மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவற்றுக்கே தற்போதைய அவசர முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
நேபாளத்தின் நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில்,
அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்தியா தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
இதில் பிரத்யேக தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள், மருத்துவ உதவிகள், அவசரகாலப் பொருட்கள், போக்குவரத்து சார்ந்த ஏற்பாடுகள் மற்றும் பேரிடர் மேலாண்மையில் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவை அடங்கும். மேலும், செயற்கைக்கோள் கண்காணிப்பு, வானிலை மற்றும் வெள்ள முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் இந்தியாவின் திறன்கள் அடுத்தடுத்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயங்களைக் கணிக்கவும், உடனடி மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நேபாளத்திற்கு உதவக்கூடும்.
"இந்தத் துயர நிகழ்வானது, இந்தியாவின் பல பகுதிகள் உட்பட ஒட்டுமொத்த இமயமலைப் பிராந்தியமும் தீவிர வானிலை மாற்றங்கள், பனிப்பாறை உறுதியற்ற தன்மை, வெள்ளம் மற்றும் தொடர் பேரிடர்களால் எந்த அளவிற்குப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. உயர்ந்து வரும் வெப்பநிலை, பனிப்பாறைகள் உருகுவது மற்றும் கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள் புதிய அபாயங்களை உருவாக்குகின்றன.
பேரிடர் நிகழ்ந்த பிறகு மட்டுமே நடவடிக்கை எடுக்கும் போக்கிலிருந்து மாறி, தடுப்பு நடவடிக்கைகள், தயார்நிலை மற்றும் நீண்டகால பேரிடர் தாங்கும் திறன் ஆகியவற்றை நோக்கிய முன்னெடுப்புக்கு நாம் நகர வேண்டும்.
பனிப்பாறைகள், பனிப்பாறை ஏரிகள், நிலையற்ற சரிவுகள் மற்றும் உயரமான நீர்நிலைகளை விரிவான மற்றும் அறிவியல் பூர்வமான முறையில் கண்காணிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது.
கீழ்நிலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்குச் சரியான நேரத்தில் எச்சரிக்கை சென்றடையும் வகையில் செயற்கைக்கோள் படங்கள், தொலை உணர்வுத் தொழில்நுட்பம் (Remote Sensing), கள அளவிலான கண்காணிப்பு மற்றும் நம்பகமான முன்னெச்சரிக்கை அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் ரீதியாக எளிதில் பாதிப்படையக்கூடிய இமயமலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலைகள், நீர்மின் திட்டங்கள், சுற்றுலா உள்கட்டமைப்புகள் மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்கு அரசுகள் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் அபாய மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
"நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ அரசுகள், மனிதநேய அமைப்புகள் மற்றும் இப்பிராந்திய மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்தத் துயரத்தில் பறிபோன உயிர்கள், பேரிடர் அபாயங்களைக் குறைக்கவும், பாதிப்பிற்குள்ளாகும் இமயமலை சமூகங்களைப் பாதுகாக்கவும் அவசர மற்றும் நிலையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுகளையும் கொள்கை வகுப்பாளர்களையும் தூண்டும் என்று நம்புகிறோம்.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகப் பிரிவு,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், புது தில்லி.