06/08/2023
அ/மி வலஞ்சுழி நாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி,
கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் - 612302
*மூலவர்: கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழி நாதர், கபர்த்தீசர், கற்பகநாதர் *அம்பாள் : பெரியநாயகி, பிருகந்நாயகி.
*தலவிருட்சம்: வில்வம்
*தீர்த்தம்:காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்.
*பாடல்பெற்ற தலம். பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர்.
*தல வரலாறு:
காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால் இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், “மன்னனோ, மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்” என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து அசரீரி செய்தியைச் சொன்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்தப் பள்ளத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள். ஹேரண்ட முனிவருக்கு இக்கோவிலில் சிலை இருக்கிறது.
*கோவில் அமைப்பு: மிகப்பெரிய கற்பகநாதேஸ்வரர் கோவில் கிழக்கு நோக்கி உள்ள இராஜகோபுரத்துடன் விளங்குகிறது.
*இக்கோயிலின் நுழைவாயிலைக் கடந்து வரும்போது முதலில் உள்ளது வெள்ளை விநாயகர் சன்னிதியாகும். அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.
*வெள்ளை விநாயகரை சுவேத விநாயகர் எனக் குறிப்பர்.
இக்கோயில் வளாகத்தில் உள்ள வெள்ளை விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார். விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.
இந்த சுவேத விநாயகர் ஆலயம் சோழர் காலத்திலேயே எடுக்கப்பெற்றுள்ளது.
*இங்கு தரிசித்துவிட்டு அடுத்த நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவனுக்கும், இறைவிக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
*திருவலஞ்சுழி நாதர் கருவறையின் முன் மண்டபம்
அழகான வேலைப்பாடுகளைக்கொண்ட தூண்களோடு அமைந்துள்ளது. கருவறையில் லிங்கத் திருமேனியாக கபர்தீஸ்வரர் உள்ளார். எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன. *அருகே இடப்புறம் சோமாஸ்கந்தர், நடராஜர் சிவகாமி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் செப்புத்திருமேனிகள் உள்ளன. *ஞானசம்பந்தர், நாவுக்கரசர் தேவாரங்கள் கல்வெட்டுக்களில் பொறிக்கப் பட்டுள்ளன.
*திருச்சுற்று:
கருவறையின் வெளியே கோஷ்டத்தில் பிட்சாடனர், நடராஜர், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நான்முகன், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சனீஸ்வரர் காணப்படுகின்றனர். கருவறைக்குச் செல்லும் மண்டபத்தில் லட்சுமி சரஸ்வதி உள்ளனர். முன்மண்டபம் தொடங்கி கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் பாலமுருகன், 32 வகையான லிங்க பானங்கள், நான்கு விநாயகர்கள், சந்தான ஆசாரியார், மகாவிஷ்ணு, துர்க்கை, சப்தகன்னிகள், விநாயகர், வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகக்கடவுள், கஜலட்சுமி,
22 வகையான லிங்கங்கள், தபஸ் அம்மன் உள்ளனர். *தொடர்ந்து பள்ளியறை உள்ளது.
*கபர்தீஸ்வரர் சன்னதியின் வலப்புறத்தில் வெளிப்பிரகாரத்தில் பெரியநாயகி சன்னதி உள்ளது.
*அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் "திருமணத் தலங்கள்" என அழைக்கப் படுகின்றன.
இங்கு வேண்டிக்கொள்ள திருமணத் தடைகள் நீங்கும். முகம் பொலிவு பெறும் என்பது நம்பிக்கை.
*இச்சன்னிதியின் முன் மண்டபத்தில் வலப்புறம் அஷ்டபுஜ மாகாளி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அஷ்டபுஜகாளி மூர்த்தம் சிறப்பு வாய்ந்த மூர்த்தமாகும்.
*வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
*சனீஸ்வரனுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.
*உள் பிராகாரத்திலுள்ள முருகப்பெருமான் ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் நிற்கின்றனர். *இத்தலத்திற்குஅருணகிரிநாதரின் திருப்புகழ் ஒன்று உண்டு.
*கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து 6 கிமீ தொலைவில், சுவாமிமலைக்கு அருகே இத்தலம் இருக்கிறது.
🙏 சிவாயநம