18/08/2026
அடைக்கல பட்டிணம்(Refugee city):
அடைக்கல பட்டிணம், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்குப் வாக்குத்தத்த தேசம் பங்கிடப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக இருந்தன. லேவியர்கள் என்ற ஒரே கோத்திரத்திற்கு மட்டும் நிலத்தைப் பயிரிட்டு அபிவிருத்தி செய்வதற்காக மற்ற கோத்திரங்களைப் போல நிலம் கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் கர்த்தருடைய ஆசாரியர்களாகவும், ஆசரிப்புக் கூடாரத்தையும் அதன் அனைத்து சடங்குகளையும் பொருட்களையும் மேற்பார்வை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் அதை அமைப்பதும் லேவியர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது (எண்ணாகமம் 2:5-13). கானான் தேசத்தை வெற்றி கொண்டபோது மற்ற கோத்திரங்களைப் போல லேவியர்களுக்குத் தனிப்பட்ட நிலப்பகுதி கொடுக்கப்படாததால், அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நகரங்களில் தேசம் முழுவதும் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களுடைய சுதந்தரத்தின் ஒரு பகுதியாக தேசம் முழுவதும் பரவியிருந்த நாற்பத்தெட்டு நகரங்கள் இருந்தன (எண்ணாகமம் 35:6-7). அந்த நாற்பத்தெட்டு நகரங்களில் ஆறு நகரங்கள் அடைக்கல நகரங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த நகரங்கள் கேதேஸ், சீகேம், எபிரோன், பேசேர், ராமோத் மற்றும் கோலான் ஆகும் (யோசுவா 20:7-8).
ஒருவன் கொலை செய்தால் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாணம் கூறியது (யாத்திராகமம் 21:14). ஆனால் ஒருவர் வேண்டுமென்றே அல்லாமல், தற்செயலாக ஒருவரின் மரணத்திற்குக் காரணமானால், அந்தக் கொலை செய்தவன் தப்பிச் சென்று அடைக்கலம் பெறுவதற்காக தேவன் இந்த நகரங்களை ஏற்படுத்தினார் (யாத்திராகமம் 21:13). அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை, இறந்தவரின் மரணத்திற்குப் பழிவாங்க வேண்டிய குடும்ப உறுப்பினரான “இரத்தப் பழிவாங்குபவனிடமிருந்து” அவன் பாதுகாப்பாக இருக்க முடியும் (எண்ணாகமம் 35:19). அந்தத் தாக்குதல் வேண்டுமென்றே நடந்ததா அல்லது தற்செயலாக நடந்ததா என்பதை சபை விசாரித்து தீர்மானிக்கும். அது தற்செயலானது என்று தீர்மானிக்கப்பட்டால், அவன் அடைக்கல நகரத்திற்குத் திரும்பி, வழக்கு விசாரணை நடந்த காலத்தில் பணியில் இருந்த பிரதான ஆசாரியன் இறக்கும் வரை அங்கே பாதுகாப்பாக வாழ வேண்டும். பிரதான ஆசாரியன் இறந்தபின் அவன் தன் சொந்த நிலத்திற்குத் திரும்பலாம். ஆனால் பிரதான ஆசாரியன் இறப்பதற்கு முன்பே அவன் அடைக்கல நகரத்தைவிட்டு வெளியேறினால், இரத்தப் பழிவாங்குபவனுக்கு அவனைக் கொல்லும் உரிமை இருந்தது (எண்ணாகமம் 35:24-28).
லேவியர்களுடைய நகரங்களில் இந்தச் சிறப்பான அடைக்கல இடங்கள் அமைக்கப்பட்டதற்குக் காரணம், லேவியர்கள் மிகவும் பொருத்தமானவர்களாகவும் பாரபட்சமற்ற நீதிபதிகளாகவும் இருப்பார்கள் என்ற எண்ணமாக இருக்கலாம். அவர்களுடைய இருப்பும் ஆலோசனைகளும் இரத்தப் பழிவாங்குபவரின் கோபத்தையும் கொந்தளிப்பையும் அமைதிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த உதவியிருக்கலாம். ஆசாரியர்களாக அர்ப்பணிக்கப்பட்டதால், லேவியர்கள் இஸ்ரவேலர்களுக்கும் தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தர்களாக இருந்தனர். அதுபோலவே, தாக்குதல் செய்தவனுக்கும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் இடையில் அவர்கள் அமைதியாக மத்தியஸ்தம் செய்து, மேலும் இரத்தம் சிந்தப்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்களாக இருந்தனர்.
அடைக்கல நகரங்களை கிறிஸ்துவுக்கு முன்மாதிரிகளாகக் காணலாம். நம்முடைய ஆத்துமாக்களை அழிப்பவனிடமிருந்து பாவிகள் கிறிஸ்துவில் அடைக்கலம் பெறுகிறார்கள். ஒருவர் பாதுகாப்பிற்காக அடைக்கல நகரத்திற்குத் தப்பிச் சென்றதுபோல, நாமும் அடைக்கலத்திற்காக கிறிஸ்துவிடம் ஓடிச் செல்கிறோம் (எபிரெயர் 6:18). நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும், தேவனுடைய கோபத்திலிருந்தும், நரகத்தில் முடிவில்லாத தண்டனையிலிருந்தும் தப்பிக்க நாம் கிறிஸ்துவிடம் ஓடுகிறோம். இவற்றிலிருந்து நமக்கு உண்மையான அடைக்கலத்தை வழங்குபவர் கிறிஸ்து மட்டுமே. ஆகையால் நாம் அவரிடமே ஓடிச் செல்ல வேண்டும். பாதுகாப்பைத் தேடி ஓடிவந்த அனைவருக்கும் அந்த நகரங்கள் திறந்திருந்ததுபோல, பாவத்திலிருந்தும் அதன் தண்டனையிலிருந்தும் அடைக்கலம் தேடி கிறிஸ்துவிடம் வருகிற அனைவருக்கும் கிறிஸ்துவே பாதுகாப்பை வழங்குகிறார்.