02/11/2024
#முண்டக உபநிஷதத் தத்துவங்கள் 1:
நிழலும் நிஜமும்:
ஒரு கணம் கூட இடையீடின்றி வாழ்க்கை நமக்கு அனுபவங்களைக் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அவற்றுள் சில இன்ப அனுபவங்கள், சில துன்ப அனுபவங்கள். இன்பம் வரும்போது மகிழ்கிறோம், துன்பம் வரும்போது துவள்கிறோம். இவ்வாறு நமது வாழ்க்கை மகிழ்ச்சிக்கும் துயரத்துக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஓயாத இந்த ஓட்டத்திற்கு முடிவே கிடையாதா, விடிவே கிடையாதா என்று மனம் சில வேளைகளில் அங்கலாய்க்கிறது. உண்டு, விடிவு உண்டு என்கிறது முண்டக உபநிஷதம். ‘நீ நிழலைப் பற்றிக் கொண்டு அதனுடன் யுத்தம் செய்கிறாய். அதை விட்டு விட்டு நிஜத்தைப் பற்று’ என்று கூறுகிறது இந்த உபநிஷதம்.
அதர்வண வேதத்திலுள்ள 28 உபநிஷதங்களுள் ஒன்று இது. ‘முண்ட’ என்ற மூலச்சொல்லில் இருந்து வந்தது ‘முண்டகம்’. ‘முண்ட’ என்றால் ‘நீக்குதல்’.
‘நிழலைப் பற்றிக் கொண்டிருக்கிறாய்’ என்று நமது அறியாமையைச் சுட்டிக் காட்டி, நிஜம் எது என்பதை எடுத்துக் கூறி, நமது அறியாமையை நீக்க இந்த உபநிஷதம் முயற்சி செய்கிறது. எனவே முண்டக உபநிஷதம் என்று வழங்கப்படுகிறது.
‘முண்ட’ என்றால் ‘மழித்தல்’, தலையை மழித்தவர்களான துறவியருக்கு உரிய உபநிஷதம் இது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
இந்த உபநிஷதத்தில் மூன்று முண்டகங்கள் (பகுதிகள்) உள்ளன. ஒவ்வொரு முண்டகத்திலும் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. இந்த ஆறு உட்பிரிவுகளிலுமாக மொத்தம் 64 மந்திரங்கள் உள்ளன.
உபநிஷதக் கரு
நிழலை உண்மை என்று நம்பி, அதன் பின்னால் ஓடுகிறோம் நாம். தவறான திசையில் நாம் செய்கின்ற இந்தப் பயணம்தான் நமது ஏமாற்றங்கள், துன்ப துயரங்கள் அனைத்திற்கும் காரணம். எனவே, ‘நிழலை விட்டு நிஜத்தைப் பற்று’ என்று வற்புறுத்துகிறது இந்த உபநிஷதம்.
உடம்பு, மனம், ஆன்மா என்று பல பகுதிகளால் ஆனவன் மனிதன். இதில் உடம்பும் மனமும் மாறக் கூடியவை, நிழல். ஆன்மா மாறாதது, நிஜம். நிழலுடன் நம்மை ஒன்றுபடுத்துவதை விட்டு விட்டு நிஜத்துடன் ஒன்றுபடுத்திக் காண வேண்டும்; அதனை அனுபூதியில் உணர வேண்டும் என்பது இந்த உபநிஷதத்தின் தனிக்கருத்தாக உள்ளது. அதற்கான சில சாதனை முறைகளையும் இங்கே நாம் காண்கிறோம்.
வித்யைகள்
இறைவனை அடைவதே ஒவ்வொரு மனிதனின் லட்சியமாகக் கொள்ளும் உபநிஷதங்கள் அதற்கென பற்பல வழிமுறைகளை வலியுறுத்துகின்றன. இப்படி ஒவ்வோர் உபநிஷதமும் தனக்கென்று ஒரு குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகிறது. இந்தப் பாதை வித்யை எனப்படுகிறது. வித்யைகள் எண்ணற்றவை. 14 முக்கிய உபநிஷதங்களிலுமாக சுமார் 35 வித்யைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்து விட்டதாலும் வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறைகளோ சரியான பொருளோ நமக்குத் தெரியவில்லை.
முண்டக உபநிஷதத்தில் நாம் காண்பது அக்ஷர—பரா வித்யை. இது அக்ஷராக்ஷர வித்யை என்றும் வழங்கப்படுகிறது.
1.1.4-6 & 1.1.9 மந்திரங்கள் இதனைக் கூறுகின்றன.
அடுத்த பதிவில் சாந்தி மந்திரத்தைக் காண்போம்.