20/04/2020
1844..........
நாடே 144 தடை உத்தரவில் இருக்கும் இந்த சூழலில் 1844 ஐ பற்றி எழுத வேண்டும் என்பது கடந்த 20 நாள்களாக என் மனதில் உதித்த அவா...
உலகில் பல்வேறு வழிபாட்டு முறைகள் பல்வேறு இறை நம்பிக்கைகள் உள்ளது... அதில் பெரும்பாலான மார்க்கங்கள் இந்த கலி யுகத்தின் இறுதியில் இவ்வுலகில் இறைவனின் வருகை இருக்கும் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது...
இந்து மதத்தில் கல்கி அவதாரம் என்றும் கிறிஸ்தவத்தில் தேவ குமாரன் இரண்டாம் முறை பூமியில் அவதரிப்பார் என்றும் நம்பப்படுகிறது....
அவதாரமாகிய கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் தோன்றவேண்டும். இது புராணங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படும் வாக்குறுதி. ஸ்ரீ கிருஷ்னர் தமது பேருபதேசமாகிய பகவத் கீதையிலும் இதே வாக்குறுதியை வழங்குகிறார்.
கல்கி அவதாரம் குறித்த வாதங்கள் நெடுங்காலமாகவே நடந்துவந்துள்ளன. ஆனால், இத்தோன்றல் குறிப்பாக எப்போது, எப்படி, மற்றும் எங்கு நடக்கும் என்பது குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் பத்தோன்பதாம் நூற்றாண்டில் கல்கி அவதாரத்தின் தோற்றம் குறித்து பரவலான எதிர்ப்பார்ப்பு இருந்துள்ளது என்பதை பழைய நாளேடுகளைப் புரட்டிப்பார்த்தால் தெரியும்.
சில ஞானிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கல்கி அவதாரம் எங்கோ நடந்துவிட்டது எனவும் கூறியுள்ளனர். இவ்விதம் கூறியவர்களுள் வட இந்தியாவின் ராஜநாராயன் ஷட்ஸாஸ்திரி என்பவரும் அடங்குவார்.
அதே சமயத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்கி அவதாரம் தோன்றப்போகிறது எனும் தீர்க்கதரிசனத்தையும் பல ஞானிகள் வழங்கிச் சென்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் பக்த சூரதாஸர்.
இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்களில் ‘மீள்தோற்றம்’ குறித்த தீர்க்கதரிசனங்கள் பல உள்ளன. இஸ்லாமிய உலகின் சுன்ன பிரிவினரிடையே இயேசு நாதர் மீண்டும் இவ்வுலகில் தோன்றுவார் என்பது எதிர்ப்பார்ப்பு.
அதே போன்று ஷீயா வர்க்கத்தினரிடையே அவர்களின் 12வது இமாமாகிய இமாம் மெஹ்டி 60ம் வருடம், அதாவது ஹிஜ்ரி 1260ல் (கி.பி.1844), பூமியில் மீண்டும் அவதரிப்பார் எனும் தீர்க்கதரிசனம் உள்ளது.
அதே போன்று பல கிருஸ்தவ பிரிவினர்களிடையே விவிலிய குறிப்புகளின்படி கி.பி.1844ல் இயேசு நாதர் மறுபடியும் இப்பூமியில் தோன்றி விசுவாசிகளை ஒன்றுதிரட்டுவார் மற்றும் சுவர்கத்தில் உள்ளது போன்று பூமியிலும் கடவுளின் இராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பார் எனும் நம்பிக்கை உள்ளது
கிருஸ்தவ பிரிவுகளில் ஒரு பிரிவினரான “Seventh Day Adventists” ஒரு படி மேலே சென்று இயேசு நாதரின் மறுவருகை 21 மார்ச் 1843லிருந்து 21 மார்ச் 1844க்குள் நடைபெறவேண்டுமென அறுதியிட்டுக் கூறினர்.
இது போக, யூத மதத்தினரிடையிலும் ‘மீட்பாளர்’ அதாவது ‘messiah’ மறுபடியும் தோன்றுவார் எனும் நம்பிக்கையும், புத்த சமயத்தில் புத்தர் மீண்டும் ‘மைத்திரேயி அமிதபா’ எனும் பெயரில் தோன்றுவார் எனும் நம்பிக்கையும் பார்ஸி மதத்தினரிடையேயும் தங்கள் அவதாரமான ஸாராதுஸ்ட்ரா, ‘ஷா பாஹ்ரம்’ எனும் பெயரில் பூமியில் தோன்றுவார் எனும் தீர்க்கதரிசனமும் உள்ளது.
சமயங்கள் எப்போதுமே தன்னிச்சையாக தோன்றுவதில்லை. அவை ஒவ்வொன்றும் ஒரு மாபெரும் செயல்முறையின் (process) தனிக் கூறுகளாகும்.
அவை காலம், இடம், சமூக சூழ்நிலை ஆகியவற்றைப் பொருத்தே வெளிப்படுகின்றன. அதாவது, அவை கடவுள் மானிடத்திற்காக வகுத்திருக்கும் திட்டத்தின் படிப்படியான வெளிப்பாடுகள் எனக் கூறலாம். புராணங்களின் கூற்றின்படி விஷ்ணு காலத்திற்குக் காலம் பல அவதாரங்களை எடுத்து வந்துள்ளார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
அவற்றுள் கல்கி அவதாரம் தவிர்த்து முக்கியமானவை ஒன்பது என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன: மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, கிருஷ்ன, புத்தர் ஆகிய அவதாரங்கள் என வரிசைப்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் எட்டாவது அவதாரம் கிருஷ்னரின் சகோதரரான பலராமர் எனவும் ஒன்பதாவதாக கிருஷ்னர் எனவும் வரிசைப்படுத்துகின்றனர்.
இந்த வரிசையை காணும்போது இதில் ஒரு பரிணாம வளர்ச்சி, ஒரு படிப்படியான வளர்ச்சி இருப்பதை நம்மால் காணமுடிகிறது.
நீரில் மட்டுமே வாழும் மீன், பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை, நிலத்தில் மட்டும் வாழும் வராகம், பாதி மனிதனும் பாதி மிருகமுமான நரசிம்மர், மனிதர் ஆனால் முழுமையான உருவத்தில் இல்லாத வாமனர், மிகவும் ஆக்ரோஷமான பரசுராமர், முழுமையான நற்குணங்கள் நிறைந்த இராமர் என ஒரு விதமான படிப்படியான வளர்ச்சியை, ஒரு செயல்முறையை நம்மால் காண முடிகிறது...
பூமியில் எப்போதெல்லாம் தர்மம் தாழ்வுற்று அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் கடவுள் ஓர் ஆன்மாவை பூமிக்கு அனுப்புகின்றார் என கீதையில் கிருஷ்னர் வாக்களித்துள்ளார்.
ஆனால், அதற்காக பூமியில் உண்மையிலேயே தர்மம் அழிந்துவிட்டதென பொருள்படாது. இதன் கருத்தாக்கம் என்னவென்றால், மனிதன் ஒரு நிலையிலிருந்து வேறோர் நிலைக்கு, ஆன்மீக ரீதியிலும், சமூக ரீதியிலும், மேம்பாடு அடைந்தும், அவன் அதற்கப்பால் செல்வதற்கு நடப்பிலுள்ள சமய போதனைகளுக்கு வலுவில்லாததால் மேற்கொண்டு ஒரு புதிய வழிகாட்டி தேவைப்படுகிறது என்பதே இதன் பொருளாகும்...
ஒவ்வொரு சமய நம்பிக்கையிலும் அதன் ஸ்தாபகர் மறுபடியும் பூமியில் அவதரிப்பார் எனும் தீர்க்கதரிசனம் இருக்கின்றது மற்றும் அவர்கள் கல்கி, மைத்ரேயி அமிதபா, ஷா பாஹ்ரம், யூதர்களின் மெஸ்ஸாய்யா, கடவுளின் ஒளியில் இயேசு நாதர், இமாம் மெஹ்டி எனும் நாமங்களில் இவர்கள் அனைவரும் மீண்டும் அவதரிக்கப்போவதாக அவரவர்களின் சமய திருவாக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கண்டோம்.
இங்கு ஒரு கேள்வி மனதில் உதிக்கக்கூடும். இவர்கள் அணைவரும் உலகில் அவரவரின் விசுவாசிகளின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப தனித்தனியாகத் தோன்றப்போகிறார்களா அல்லது கடவுள் ஒருவரே எனும் அடிப்படையில் இவர்கள் அணைவரும் ஒரே ரூபத்தில் உலகில் தோன்றப்போகிறார்களா?...
ஒரு காலத்தில் பூகோள ரீதியிலும், இன ரீதியிலும், மொழி ரீதியிலும், பலவாறாகப் பிரிந்துகிடந்த மனுக்குலம் இன்று அறிவியல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, போன்றவற்றால் வேறு வழியின்றி மிகவும் அணுக்கப்பட்டுக்கிடக்கின்றது. மக்கள் கூட்டங்கள் பெரும்பாலும் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களால் பெரும் பெரும் எண்ணிக்கையில் தங்கள் நாடுகளை விட்டு பொருளும் பாதுகாப்பும் தேடி வெவ்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர்.
ஆகவே வெவ்வேறு சமய விசுவாசிகளின் அவதாரங்கள் தனித்தனியே வந்து இவர்களுக்கு காட்சி தரப்போகிறார்களா என்பதைக் கற்பனை செய்வது கூட இயலாது.
உலகில் பிரிவினைக்கான காரணங்கள் வெகுவாக இருக்கின்றன அதில் சமய ரீதியில் மேலும் பிரிவினைகள் தேவையில்லை. ஆகவே, இந்த அவதாரங்கள் யாவரும் குறிப்பிடுவது ஒருவரையே என்பது தெளிவு....
இப்போது இந்த அவதாரம் தோன்றப்போவது எப்போது என்பதை முதலில் காண முற்படுவோம். அவதாரம் தோன்றும் காலத்தை ஓரளவிற்கு நம்மால் கணித்திட முடியும். இதற்கான ஆதாரங்களை எல்லா சமயங்களின் புனித நூல்களிலும் காணலாம். உதாரணமாக ஹிஜ்ரி 1260 மற்றும் கி.பி.1844 வருடங்களை குறிப்பிடலாம். இரண்டும் ஒரே வருடத்தைதான் குறிப்பிடுகின்றன...
நந்த அரசர்களின் காலத்தில் கலியுகம் தனது உச்சியினை, அல்லது தனது மத்திய நிலையை அடைந்து தொடர்ந்து மேலும் வலிமை பெறும் என பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது. நந்தர்கள் கி.மு. சுமார் 600களிலிருந்து 300கள் வரை இன்றயை வட இந்தியாவில் ஆட்சி புரிந்தனர். இது கலியுகத்தில் சுமார் 2400 வருடங்கள் சென்ற பின் நடந்ததாகும்.
கிருஷ்னரின் இறப்பிலிருந்து புத்தரின் தோற்றம் வரை ஏறத்தாழ 2400 ஆண்டுகள் ஆகின்றன. அதே போன்று புத்தரின் தோற்றத்திலிருந்து 2400 ஆண்டுகள் 19ம் நூற்றாண்டில் முடிகின்றன. எவ்வகையில் பார்த்தாலும் இந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் குறிப்பிடுவது ஒருவரையே என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல...
கிருஷ்னாவதாரமும் கல்கி அவதாரமும் கலியுகத்தோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. கிருஷ்னர் மறைந்த அடுத்த தருணமே கலி பிறந்தது மற்றும் அதன் முடிவில் கல்கி அவதாரம் உண்டாக வேண்டும் என்பது புரானங்களின் கூற்று. ஸ்ரீ கிருஷ்னர் கி.மு.3102ல் விண்ணேற்றம் அடைந்தார் என்பது பொதுவாக ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். அவர் விண்ணேற்றம் அடைந்த அடுத்த கணமே கலி பிறந்தது என புராணங்கள் குறிப்பிடுகின்றன. அவர் மீண்டும் கல்கியாக அவதரித்து சத்திய யுகத்தை ஸ்தாபிப்பார் என்பதும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது...
புரானங்கள் கிருஷ்னர் கல்கி விஷ்ணுயாஷாவாக கலியுகத்தின் முடிவில் மறுபடியும் அவதரிப்பார் என கூறுகின்றன. ஆனால், குறிப்பாக இது எப்போது நடக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை.
19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கலியுகத்தின் முடிவு நெருங்கிவிட்டது என்பது பரவலாக விவாதிக்கப்பட்டது. சிலர் கல்கி அவதாரம் எங்கோ நடந்துவிட்டது எனவும் கூறினர்.
இவர்களுள் ஒருவர் பண்டிதர் ராஜநாராயன் ஷட்சாஸ்திரி என்பவர். இவர் தமது ‘சேதாவனி’ எனும் பத்திரிக்கையின் 1924ம் பிரதியில் பக்தியோகத்தின் சாதனையால் கல்கி அவதாரம் எங்கோ தோன்றிவிட்டது என தமக்குத் தெரியவந்துள்ளது என எழுதியுள்ளார்.
கலியுகத்திற்கு 4.32,000 வருடங்கள் கொடுத்திருப்பது தவறு, அதற்கு உண்மையில் 4800 திவ்ய வருடங்களே என இவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவருடைய நூல் 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் 8 முறை பிரசுரிக்கப்பட்டும் உள்ளது...
வடநாட்டைச் சார்ந்த சந்த் சூரதாஸர் குறிப்பிட்ட காலம்: சூரதாஸர் பிறப்பிலேயே கண்பார்வையற்றவராக இருந்தார். 6 வயதிலேயே தமது பெற்றோரை பிரிந்து வாழ்ந்தார். சிறந்த கிருஷ்ன பக்தரான இவர் தமது ‘ஸூர்ஸாகர்’ எனும் தொகுப்பிற்கு சுமார் 1,00,000 பாடல்கள் இயற்றியதாக கூறப்படுகிறது ஆனால், அவற்றில் சுமார் 8000 பாடல்களே எஞ்சியுள்ளன. இவர் விக்ரம சம்வத் 1900க்கு மேல் உலகில் ஒரு பெரும் மாற்றம் உண்டாகும் என கூறியுள்ளார். வி.ச. 1900க்குச் சமமான ஆங்கில வருடம் கி.பி. 1844 ஆகும்....
வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கர் (கி.பி.1823 – 1873)
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடுந் தனித்தலைவ ரொருவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே
என தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார். ஆம், கடவுள் தாமே உலகில் தம்மை வெளிப்படுத்திக்கொள்வார், அதற்கான நேரமும் இதுதான் என்பது வள்ளலாரின் வாக்கு. மேலும் கலியுகத்திற்குச் சுமார் 5000 வருடங்களே உள்ளன எனவும் இவர் கூறியுள்ளார்.அதாவது வள்ளலார் வாழ்ந்து கொண்டிருந்த அதே 1823 க்கும் 1873 க்கும் இடைப்பட்ட அந்த காலம் தான் கடவுளின் வருகைக்கான காலம் என தீர்க்க தரிசனமாக உரைத்துள்ளார்...
வில்லியம் மில்லர்
இந்த வரிசையில் அடுத்து முக்கியமானவராக உள்ளவர் கிருஸ்தவ சமயத்தில் வில்லியம் மில்லர் (கி.பி.1782 – 1849). இவர் இயேசு நாதர் வெகு விரைவில் அவதரிக்க போகிறார் என ஐக்கிய அமெரிக்காவில் போதித்தார். இவரது கணிப்புப்படி இயேசு நாதரின் மறுவருகை 1844ல் கண்டிப்பாக நடக்கும் என இவர் உறுதியாக நம்பினார்....
உலக வரலாற்றில் சமுதாய மற்றும் கலாச்சார ரீதியான வளர்ச்சியை காணும்போது அதன் பின்னனியில் ஒரு சமயவெளிப்பாட்டின் தோற்றம் இருப்பதை காணலாம்.
உதாரணமாக சிந்து வெளி நாகரிகத்தை எடுத்துக்கொள்வோம். அது ஏறக்குறைய கி.மு. 3500ல் ஆரம்பித்து சுமார் 2000 வருடங்கள் நிலைத்திருந்த பரவலான ஒரு நாகரிகமாகும். கிருஷ்னரின் வெளிப்பாடு நடந்தது கி.மு. 3228 – 3102ற்குள். இவ்வெளிப்பாட்டையும் சிந்துவெளி நாகரிகத்தையும் தொடர்புபடுத்துவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. சிந்துவெளி நாகரிகத்திற்குத் தூண்டுகோலாகவும் மூலாதாரமாகவும் இருந்தது கிருஷ்னர் மூலமான கடவுளின் திருவெளிப்பாடே ஆகும்.
அடுத்து இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியை காணலாம். நாகரிகமற்ற அரபு மக்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒரு மாபெரும் இஸ்லாமிய நாகரிகத்தை, அறிவியல், கணிதசாஸ்திரம் மற்றும் பிற விஷயங்களில் ஒரு மாபெரும் வளர்ச்சியை உருவாக்கியது இஸ்லாமிய திருவெளிப்பாடே ஆகும்.
இதே போன்று இயேசு நாதர், புத்தர் ஆகியோரின் வருகையால் உலகில் ஏற்பட்ட மேம்பாடுகளை நாம் கணக்கிட முடியும்.
கி.பி. 1844ம் வருடம் பல மூலாதாரங்களின் வாயிலாக ஒரு முக்கியமான வருடம் என்பதை நாம் காணமுடியும்....
19-ஆம் நூற்றாண்டில் கிருஸ்துவ சமயத்தினரிடையே மட்டுமல்லாது, இஸ்லாமியரிடையிலும் கூட 1844-ஆம் ஆண்டில் இயேசுநாதர் அவதரிக்கவிருக்கின்றார் எனும் நம்பிக்கை பரவலாக நிலவியிருந்தது. முக்கியமாக, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த (1782-1849) வில்லியம் மில்லர் என்பவர் கி.பி.1844-இல் இயேசுநாதரின் மறுவருகை கண்டிப்பாக நடைபெறும் என உறுதியாக நம்பினார். அவரைப் பின்பற்றியோர் பன்மடங்கானவர். அதே போன்று மத்திய கிழக்கிலும் ஹிஜ்ரி 1260 (கி.பி.1844) இயேசு நாதர் மறுபடியும் தோன்றுவார் என சுன்னப் பிரிவினரிடையிலும், 12-வது இமாமாகிய இமாம் மஹதி உலகில் தோன்றப்போகின்றார் எனும் நம்பிக்கை ஷியா வர்க்கத்தினரிடையிலும் நிலவியது. ஆனால், அவரவர் புனித வேதங்களில் இந்த 1844-ஆம் ஆண்டு ஸ்பஷ்டமாக கூறப்படவில்லை. மறைமுகமான வார்த்தைகளிலேயே கூறப்பட்டுள்ளது....
உதாரணத்திற்கு, பழைய ஏற்பாடு தானியேலின் நூலில், புனிதஸ்தலம் எப்பொழுது பரிசுத்தமாகும் என்பது குறித்து, அது 2300 நாள்களுக்குப் பிறகு நடைபெறும் எனும் தீர்க்கதரிசனம் உள்ளது. இங்கு ‘நாள்’ எனக் குறிப்பிடப்படுவது, விவிலிய திருநூலின்படி ஒரு நாள் என்பது ஒரு வருடமாகும்.
ஆகவே புனிதஸ்தலம் 2300 வருடங்களுக்குப் பிறகு புனிதப்படுத்தப்படும் என்பது அர்த்தமாகும். ஆனால், இந்த 2300 வருடங்கள் எப்பொழுது ஆரம்பித்தன என்பதைப் பார்க்கையி்ல், அது கி.மு.457-இல் ஆரம்பித்தது. அதாவது புனிதஸ்தலத்தை மறுசீரமைக்கும்படி அர்டிஷேர் விடுத்த மூன்றாவது ஆணையிலிருந்து ஆரம்பித்தது.
கி.மு. 457-லிவிருந்து கி.பி. 1844 வரை சரியாக 2300 வருடங்கள் உள்ளன. இதையெல்லாம் மேலும் ஆழமாக விவரிப்பதற்கு இங்கு இடமோ நேரமோ போதாது. சுருங்கக் கூறின் கி.பி.1844 எல்லா சமயங்களுக்கும் ஒரு முக்கியமான, தீர்க்கதரிசனங்களுக்கு உட்பட்ட ஓர் ஆண்டாகும்....
சரி... இனி விஷயத்துக்கு வருவோம்...இப்படி உலகில் உள்ள அனைத்து வகை வழிபாட்டு முறைகளில் உள்ள ஆன்மீக பெரியவர்களும் இறைவன் வருகை நிகழ போவதாக கணித்து பண்டைய நூல்களை எல்லாம் ஆராய்ந்து அவதானித்த அதே 1844 இல் இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கலி யுகத்துக்கு முற்றிலும் முரண்பாடான அதிசயங்களும் அற்புதங்களும் நடத்தி கொண்டிருந்தார் ஒருவர்....
ஆம்...அவர் தான் அய்யா வைகுண்டர்...
அய்யா வைகுண்டர் 1833 இல் திருச்செந்தூர் கடலில் இருந்து வெளிப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பு வந்து ஆறு ஆண்டுகள் தவம் புரிந்து அன்றைய அந்த நாட்டின் மன்னனான சுவாதி திருநாள் மன்னனால் , இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதை போல பல்வேறு வகையான கொலை முயற்சிகளை எல்லாம் முறியடித்து பின் மன்னனின் கொடும் சிறையில் இருந்து மீண்டு வந்து ,
அதன் பின் சான்றோர்களை துவையல் தவசுக்கு அனுப்பி அவர்கள் மூலம் ஒரு புதிய வகை எளிய வழிபாட்டு முறையை உலகுக்கு தந்து,
தேவலோக மாதர்களான சத்த கன்னிமார்களை திருமணம் செய்து இன்னும் பிற தெய்வ சக்திகளை எல்லாம் இகனை திருமணம் மூலம் தன்னுள் ஐக்கிய படுத்திக்கொண்டு தன்னை எல்லா தெய்வ சக்திகளும் ஒன்றிணைந்த ஆதி பரா சக்தியாக இந்த உலகுக்கு வெளிக்காட்டிய ஆண்டு "1844"....
ஆம்,,கடவுள் தாமே தன்னை இந்த உலகுக்கு வெளிப்படுத்தி க்கொள்வார் என்று அருள்பிரகாச வள்ளலார் சொன்னதை போன்று
"ஏகம் படைத்தவன் நான்...எங்கும் நிறைந்தவன் நான்...ஆகப் பொருள் மூன்றும் அடக்கம் ஒன்றானாதினால் ஜீவ செந்துக்கெல்லாம் ஜீவனாக நானே இருக்கிறேன்"
என்று தன்னையே ஒரு முழு முதல் கடவுளாக வெளிப்படுத்தியவர் அய்யா வைகுண்டர் மட்டுமே....
கண்டெடுத்தோர் நல்லாவார்...காணாதோர் வீணாவார்...என்று அய்யா சொன்னதை போல உலகில் உள்ள எல்லா மார்க்கங்களும் வருவார் என்று நம்பிக்கொண்டிருந்த கடவுள் ஒருவரே... அவரே அய்யா வைகுண்டர்...
அவரது அடியை தொழுது அவர் காட்டிய வழியில் நடந்து சத்திய யுகம் என்னும் தர்ம யுக வாழ்வை பெறுவோம்...அய்யா உண்டு...
பல்வேறு ஆய்வு கட்டுரைகளை படித்து அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து சரியானதை கட்டுரையாக அய்யாவின் அருளால் தந்துள்ளேன்...
தொகுப்பும் எழுத்தும்...
அ.வைகுண்ட ராஜன்...