26/02/2014
நீ வருவாய் என்று உனக்காக காத்திருக்கும் நற்கருணை நாதரை தேடி செல்.
செபத்தின் வழியாக ஆன்மா தனக்கு தேவையான பலத்தை பெற்று கொள்கிறது. செபத்தினுடாகவே மனிதன் மூச்சு விடுகிறான். செபிக்கும் மனிதனுக்கு ஒரு குறையும் இருக்காது, ஏனெனில் அவன் செபத்தின் வழியாக இறைவனிடமிருந்து தான் வாழ தேவையான சக்தியை பெற்று கொள்கிறான். மனிதனை இறைவனோடு ஒன்றாக இணைப்பது செபமாகும். எவ்வாறு உடல் உணவினால் வலுப்பெறுகிறதோ, அதே போன்று எமது ஆன்மா செபதினால் வலுப்பெறுகிறது. செபிக்கும் மனிதன் இறைவனின் உள்ளத்தில் இடம் பிடிக்கிறான். கிறிஸ்துவின் வாழ்கையை பார்தோமென்றால், அவர் கூட தனது தந்தையுடன் பேச ஒதுக்கு புறமான இடங்களை தேடி சென்று தனிமையாக இருந்து வானகத் தந்தையுடன் பேசுகிறார். கிறிஸ்து ஏன் செபிக்க வேண்டும்? அவர் இறைவனின் மகனல்லவா? தனக்கு தேவையான உயிர்முச்சை & சக்தியை அவர் தனது தந்தையிடமிருந்து பெறுகின்றார். மனிதர்கள் நாங்கள் சொல்லும் செபமானது ஒரு போதும் இறைவனில் ஒரு மாற்றத்தையும் உருவாக்காது, மாறாக செபிக்கும் எங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தேவைக்கும் மட்டும் செபிப்பவன், அல்லது தனக்கு தேவையானதை மட்டும் கேட்பவன் செபம் என்றால் என்ன என்ற உண்மையை தெரியாமல் வாழ்கின்றான். செபம் என்பது ஒரு இதயம் இன்னொரு இதயத்தோடு ஒன்றினைவதாகும். செபம் என்பது இறைவனை போற்ற, வாழ்த்த, ஆராதிக்க, அன்பு செய்ய, நன்றி சொல்ல, மன்னிப்பு கேட்க நாம் இறைவன் முன் செலவிடும் நேரமாகும். இன்று செபம் என்ற பெயரில் மனிதன் தனது தேவைகளையே இறைவன் முன் வைக்கிறான். தனக்கு தேவையானதை இறைவன் தனக்கு தர வேண்டுமென்று கேட்கின்றான். அதுவும் இன்றே வேண்டும் என்று அடம் பிடிக்கிறான். ஆனால் அநேகமான நேரங்களில் இறைவன் இவன் முன் மௌனம் காக்கின்றார், அதனால் இன்றைய மனிதன், தனக்கு தேவையானவற்றை பெற்று கொள்ள இறைவனை விட்டு குறுக்கு வழிகளை நாடுகின்றான்.
செபம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். எனது தேவையை இறைவனின் முன் வைக்கும் போது, அது இறைவனுக்கு ஏற்றதாக அமைகிறதா என்பதை நாங்கள் எங்களையே கேட்டு வேண்டும். எமது விருப்பங்கள், இறைவனின் விருப்பங்களுக்கு ஏற்றதாகவுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
மேலும், செபிப்பதற்கு அமைதியான இடத்தை நாட வேண்டும். ஏனெனில் அங்கு தான் இறைவனின் குரலை கேட்க கூடியதாக இருக்கும். செபம் என்பது இரு மனிதர்களின் உரையாடலாகும். அங்கு நான் மட்டுமல்ல, மற்றவரையும் பேச விட வேண்டும். அவர் பேசுவதையும் நான் கேட்க வேண்டும். ஆகவே, செபத்துக்கு உகந்த இடம் நற்கருணை பேழை என்பதை மறந்து விடக்கூடாது. இரவு, பகல் என்று பாராமல் நாங்கள் தன்னை சந்திக்க வருவோம் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் கிறிஸ்துவை தேடி சென்று அவரோடு ஒரு சில நேரங்களை செலவிடும் போது, அவர் எம்மை அன்பு செய்ய அவருக்கு அனுமதி கொடுக்கிறோம். வைத்தியரை தேடி, காவல் நிலையத்தை தேடி, வேலையை தேடி, நீரை தேடி, உணவைத் தேடி, கடனாளியை தேடி சம்பந்த பட்ட இடங்களுக்கு நாங்கள் செல்வது போன்று, கிறிஸ்துவை தேடி அவர் வாழும் இல்லமாகிய ஆலயத்துக்கு சென்று அவர் முன் அமர்வதே சாலச்சிறந்தது. புனிதர்களின் வாழ்க்கைகளை எடுத்து பார்தோமென்றால், அவர்கள் நற்கருணை முன் செலவிட்ட நேரங்களே, தங்கள் வாழ்வில் சந்தோசமான நேரங்கள் என்று சொல்கிறார்கள். மாதர் தெரேசா கூட, தங்கள் காலையிலிருந்து, மாலை வரை செய்யும் பணி அனைத்தும் செபம் என்றும், ஆனால் இந்த பணிகளை செய்ய தேவையான சக்தியை காலை ஒரு மணி நேரம், மற்றும் மாலை ஒரு மணி நேரம் தாங்கள் நற்கருணை நாதர் முன் செலவிடும் நேரம் தான் பெற்று கொள்கிறார்கள் என்று சொல்கிறார். இன்றை பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஒவ்வொரு நாளும் இரவு 7- 8. வரை தன்னை நற்கருணை நாதர் முன்னிருந்து எவராலும் அசைக்க முடியாது என்று சொல்கிறார். செபம் என்றவுடம் குருக்களையும், கன்னியர்களையும் மாத்திரமே பார்கிறோமே தவிர போது நிலையினர் அதிலிருந்து தள்ளி நிற்கின்றோம். மாதர் தெரேசா, செபிக்கும் குடும்பமே ஒருமித்து வாழும் என்றும், செபிக்காத குடும்பம் கூரையில்லாத வீட்டுக்கு சமன் என்று சொல்கிறார். செபம் என்பது வாசிப்பதல்ல, மாறாக பேசுவது மற்றும் பேசுவதை கேட்பதாகும். ஆகவே நற்கருணை நாதர் முன் சென்று செபப்புத்தகங்களை எந்நேரமும் வாசித்து கொண்டிருக்காமல், மாறாக கிறிஸ்துவோடு பேசுவோமாக, மேலும் அவர் எமக்கு சொல்வதை கேட்போமாக. ஆனால் சங்கீதங்களை நாங்கள் இடைவிடாது நற்கருணை நாதர் முன் பாடிகொண்டே இருக்கலாம். செபிக்கும் மனிதன் தன்னில் ஏற்படும் மாற்றத்தை உணர மாட்டான், மாறாக பிறர் அவனில் மாற்றத்தை காண்பார்கள். ஒவ்வொரு நாளும் நற்கருணை நாதரை தேடி சென்று, அவரின் உதவியோடு எம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். தனிமையை உணரும் நீ, எப்போது நற்கருணை பேழையில் தனிமையாக வாழும் கிறிஸ்துவை தேடி செல்கிறாயோ, அன்றே உனது தனிமைக்கு ஒரு முற்றுபுள்ளி ஏற்படும் என்பதை மறந்து விடாதே. நற்கருணை சந்திப்பை வழக்கமாக்கி கொள், ஏனெனில் அங்கே நீ இறைவனின் ஆசிரை பெறுகின்றாய். இயேசு, உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் என்று சொல்கிறார்(மத்தேயு 6, 21). ஆகவே செபத்துக்கு போகும் போது நிறைய ஜோசனைகள், கற்பனைகளை அங்கு காவி செல்லாதே, ஏனெனில் நீ நற்கருணை நாதர் முன் அமர்ந்து இருந்தாலும், உன் உள்ளம் உன் சிந்தனைகளில் உழன்று கொண்டிருக்கும். நற்கருணை நாதர் முன் சென்றவுடன், நீ உன் மனதிலுள்ளவற்றை கிறிஸ்து முன் இறக்கி வைத்து விட்டு, நீ உலக நாயகன், அரசன், உனது இறைவன் முன் முன் அமர்ந்திருக்கிறாய் என்பதை மறந்து விடாமல் அவரின் ஆசிருக்காக பொறுமையாக காத்திரு.
மனிதா உன் நிலை உனக்கு மாத்திரமே தெரியும்,
உன்னை நீ மாத்திரமே அறிவாய்,
உனது மனதிலுள்ள காயங்கள், உனது வாழ்கையில் ஏற்பட்ட புண்கள், நீ நம்பியவர்கள் உன்னை ஏமாற்றிய சந்தர்பங்கள், உன்னை அன்பு செய்வார்கள் என்று நீ நினைத்த வாழ்ந்தவர்கள் அன்றும், இன்றும் உன்னை புண்படுத்திய வேளைகள், உன்னை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்தி உதறி தள்ளி விட்டவர்கள், பணம், சொத்து இல்லாததால் உன்னை ஏற்றுகொள்ளாதவர்கள் அனைவரையும் நீ மாதிராமே அறிவாய்.
நீ களைத்து போய் விட்டாய். மனிதர்களை, அவர்களின் அன்பை தேடி சென்று உன் வாழ்கையிலே நீ புண்களை உருவாக்கி விட்டாய். கண்டவர்களையெல்லாம் உனது நண்பர்களாக்க முற்பட்டு நீ உடைந்து போய் விட்டாய். இன்று நீயே உன்னை குற்றவாளியாக்கி அழித்து கொண்டிருக்கிறாய். மனிதனையல்ல, மாறாக இறைவனை சார்ந்திரு. மனிதனையல்ல, மாறாக இறைவனை தேடி செல். மனதில் ஆறுதல் தேடி கண்ட இடமெல்லாம் ஓடாதே, புதுமைகள் செய்கின்றோம் என்று சொல்பவர்களையும் நம்பாதே, குணப்படுத்துகின்றோம் என்று சொல்லும் மனிதர்களையும் விசுவசியாதே, மாறாக உண்மையான இறைவன், நற்கருணை நற்கருணையில் உனக்காக, நீ வருவாய் என்று, உன்னை தொட்டு குணப்படுத்த உனக்காக காத்திருக்கும் கிறிஸ்துவை தேடி செல். ஒரு நாள் வரும், அன்று நீயும் புனித பாவிலு சொல்வது போன்று, நான் வாழ்கிறேன், ஆனாலும் நானல்ல, மாறாக வாழ்வளிக்கும் கிறிஸ்துவே என்னில் வாழ்கிறாய் என்று சொல்வாய்.
சில்வெஸ்டர் றாயன்
அன்பானவர்களே, தயவு செய்து ஆமென் என்று மட்டும் கீழே எழுதுவதோடு நின்று விடாமல்(Comments), உங்கள் மனதிலுள்ளவற்றையும் ஒரு சில நிமிடங்கள் செலவழித்து எழுதுங்கள், அப்போது உங்கள் வாழ்வில் இறைவன் ஏற்படுத்திய புதுமைகளை மற்றவர்களும் வாசிக்கும் போது, உங்கள் வார்த்தைகள் மற்றவர்களையும் இறைவனை தேடி செல்ல ஊன்று கோலாக அமையும். Share this in your facebook wall. நன்றி.