18/07/2026
கண்ணீர் கடந்து...
வாழ்க்கையில் அழாத மனிதர்கள் யாரும் இல்லை.
சிலர் தோல்விக்காக அழுகிறார்கள்... சிலர் பிரிவுக்காக அழுகிறார்கள்... சிலர் பாசத்திற்காக அழுகிறார்கள்... ஆனால், பலர் குடும்பத்தின் பாரத்தைத் தாங்க முடியாமல் அழுகிறார்கள்.
ஒரு காலத்தில் கம்பீரமாக வாழ்ந்த குடும்பம், தொழில் முடக்கத்தால் தினக்கூலிக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படும்போது கண்ணீர் வருகிறது.
கழுத்தில் நகைகளோடு மின்னிய அம்மாவோ, மனைவியோ, ஒரு மஞ்சள் கயிற்றை மட்டும் தாலியாக அணிந்து நிற்கும் நிலையைப் பார்க்கும்போது கண்ணீர் வருகிறது.
சகோதரிகளின் திருமணத்திற்காக சொந்த வீட்டையே விற்க வேண்டிய சூழ்நிலை வரும்போதும் கண்ணீர் வருகிறது.
மருத்துவச் செலவுகளுக்காகவோ, தவிர்க்க முடியாத குடும்பத் தேவைகளுக்காகவோ, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தெரிந்தவரிடமும் தெரியாதவரிடமும் கையேந்தி கடன் வாங்க வேண்டிய அவலம் வரும்போதும் கண்ணீர் வருகிறது.
கடனை அடைப்பதற்காகவே வாழும் வாழ்க்கை... எந்தத் தொழிலிலும் நிலைத்து நிற்க முடியாத நிலை... ஒவ்வொரு கனவும் சிதறிச் செல்வது... இவை அனைத்தும் மனதை உடைத்துவிடுகின்றன.
உதவி கேட்க யாரும் இல்லாத நேரங்களும் உண்டு. அதே நேரத்தில், எதிர்பார்க்காத ஒருவர் நீட்டும் உதவிக்கரம் கூட கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும்.
இப்படிப்பட்ட தருணங்களை வாழ்க்கையில் பலரும் சந்தித்திருப்பார்கள்.
வாழ்க்கை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகச் சோதிக்கிறது.
அந்த நாட்களில் சிரிப்பு மறந்துபோகிறது.
தூக்கம் தொலைந்துபோகிறது. யாரிடமும் முகம் கொடுத்து பேசத் தோன்றாது. வறுமையும் வெறுமையும் சேர்ந்து மனதை விரக்தியால் நிரப்பிவிடுகின்றன.
இந்த துயரமான நேரங்களில், கடவுளிடம் பலரும் கேட்பது
ஒன்றே ஒன்றுதான்...
"இனி கண்ணீர் விட வைக்காதே... யாரிடமும் கையேந்தாமல், சுயமரியாதையுடன் வாழ
ஒரு வழியைக் காட்டு..."
ஆனால், வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
ஒவ்வொரு கண்ணீருக்கும்
ஒரு முடிவு உண்டு.
ஒவ்வொரு இரவுக்கும்
ஒரு விடியல் உண்டு.
அதுபோல, ஒவ்வொரு துன்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு.
அந்த நம்பிக்கையே,
எவ்வளவு சோர்ந்து போனாலும், மனிதர்களை மீண்டும்
எழச் செய்கிறது...
நாளை நோக்கி நடக்க வைக்கிறது...