04/08/2026
ஊர்காவற்றுறையிலிருந்து சுமார் 7கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது சுருவில் கிராமம். இங்கமைந்துள்ள மரியன்னை ஆலயம் அன்னைமரி ஆலயமெனவே அழைக்கப்படுகின்றது.
சுருவில் அன்னை மரி ஆலயத்திலுள்ள மரியன்னையின் பெரிய திருச்சொரூபம் தன்னகத்தே ஓர் அரிய சிறப்பையும் அமலமரித்தியாகிகளுடனான தொடர்பையும் உள்ளடக்கியுள்ளது.
அமலமரித்தியாகிகள் சபையின் நிறுவுநரான புனித இயூயின் டி மசனட் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் ஐக்ஸ் (Aix)பிரதேசத்திலமைந்துள்ள அமலமரித்தியாகிகள் சபைக்கு சொந்தமான சிற்றாலயமொன்றில் வைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற சிற்பி ஒருவரால் அமைக்கப்பட்ட அன்னையின் இத்திருச்சொருபத்தை இலங்கைக்கான முதல் அமலமரித்தியாகிகள் சபையின் குழுமத்திற்கு தலைமைதாங்கிய
பேரருட்தந்தை செமேரியா (அமதி) அவர்களிடம் ஒப்படைத்திருந்தார். அவர் இச்சொரூபத்தை யாழ்ப்பாணத்திலுள்ள அமலமரித்தியாகிகள் சபையினரின் சிற்றாலயத்தில் நிறுவி வணக்கம் செலுத்தி வந்தார்.
ஆண்டுகள் உருண்டோடவே ஒருமுறை சுருவில் அன்னைமரி ஆலயத்தை தரிசித்த பேரருட்தந்தை மெலிசன் (அமதி) அவர்கள் ஆலயத்தின் மையப்பகுதியில் திருச்சொரூபமொன்றை நிறுவத்தக்க மாடக்குழிப்பகுதி (Niche) வெற்றிடமாக இருப்பதை உணர்ந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருச்சொரூபத்தை இவ்வாலயத்திற்கு வழங்கி வைத்தார்.
காலகதியில் இச்சொரூபத்தின் பெருமைகளை அறிந்த அருட்பணி J.கொலின்ஸ் (அமதி) அவர்கள் பேரருட்தந்தை ஹென்றி யூலன் ஆண்டகையவர்களின் பணியாளுகைக்காலத்தில் அதனை மீளவும் பெற்றுக்கொண்டு இச்சொரூபத்திற்கு பதிலாக புதிதாக ஓர் சொரூபத்தை வழங்குவதாக உறுதியளித்த போதும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தமது எதிர்ப்பை வெளியிட்டதன் பேரில் அன்னை அவ்வாலயத்திலேயே குடிகொண்டு குறைதீர்த்து வருகிறாள்.
பல்வேறு பழமைமிக்க திருச்சொரூபங்கள் இவ்வாலயத்தில் களவாடப்பட்டபோதும் இன்றும் அன்னை கொலுவமர்ந்து ஆசியளிக்கின்றாள். Copy