The Crossway Ministries

The Crossway Ministries Please check out our website www.crosswayministries.ca which contains the Pastor's profile, our mission and other useful resources.

09/07/2026

Romans 6 Episode 115 in Tamil - The Crossway Ministries (Canada)

09/07/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 8

அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார் (லூக். 14:14).

“நீதிமான்களின் உயிர்த்தெழுதல்”

வெகுசீக்கிரத்தில் அடுத்த யாத்திரை ஒன்று வரப்போகிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இதனை “நீதிமான்களின் உயிர்த்தெழுதல்” (லூக். 14:14) என்றும், பவுல் அப்போஸ்தலர் இதனை “மேன்மையான உயிர்த்தெழுதல்” (எபி. 11:35) என்றும், யோவான் இதனை “முதலாம் உயிர்த்தெழுதல்” (வெளி. 20:5) என்றும், பரிசுத்த ஆவியானவர் இதனை “ஆனந்த பாக்கியம்” (தீத்து 2:13) என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த ஆனந்த பாக்கியம் எந்த நிமிஷத்திலும் ஏற்படலாம்; இதற்கு எவ்விதமான தீர்க்கதரிசனமும் நிறைவேறவேண்டியதில்லை; அப்பொழுது இந்தப் பூமியில் மரித்துப்போன பரிசுத்தவான்கள் ஒவ்வொருவனையும் தேவனாகிய கர்த்தர் மண்ணிலிருந்து எழுப்புவார்; இதுபற்றி யோவான் 5:28-29ல் “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் தானியேல் 12:2ல் “பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்” எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த வேதவாக்கியத்தின் ஆவிக்குரிய பொருளைக் கிறிஸ்தவர்கள் அறிந்திருப்பது நல்லது; அதெப்படியென்றால், யோவான் 5:28ஐக் கேட்டுக்கொண்டிருந்த மதத்தலைவர்கள் வாயடைத்துப் போனார்கள்; ஆம், இன்றும் இதனைக் கேட்டவுடன் அநேகமான மதத்தலைவர்கள் வாயடைத்துப் போவார்கள். “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்” என்பதன் ஆவிக்குரிய பொருள், நித்தியஜீவனுக்கு உயிர்த்தெழுவதையும் நித்தியநிந்தைக்கும், இகழ்ச்சிக்கும் உயிர்த்தெழுதலைப்பற்றியும் ஆண்டவர் குறிப்பிடுகிறார்; ஆம், கிறிஸ்துவே ஜீவனுக்கும் மரணத்திற்கும் ஆண்டவர் என்பதனை இந்த வேதவாக்கியம் வலியுறுத்துகிறது.

ஜீவனுக்கு உயிர்த்தெழுபவர்களின் ஒவ்வொரு சிறு துணுக்குகளும் எங்கிருக்கிறது என்பதனையும் தேவன் அறிவார்; அவை எல்லாவற்றையும் இணைத்து, மகிமையான சரீரத்தைத் தேவன் உருவாக்குவார்; அந்தச் சரீரத்திற்குள் தற்பொழுது கிறிஸ்துவோடு இருக்கிற ஆவியும் ஆத்துமாவும் இணைந்துகொள்ளும். பவுல் அப்போஸ்தலர் இதுபற்றிப் பிரஸ்தாபிக்கையில்: “அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்” (Iகொரி. 15:38) எனச் சொல்லியிருக்கிறார்.

முதலாவது உயிர்த்தெழுதலில் தேவனுடைய ஒவ்வொரு பரிசுத்தவான்களும் பங்குபற்றுவார்கள்; இயேசுகிறிஸ்து தன்னுடைய உயிர்த்தெழுதல்மூலம் இதனை உத்தரவாதம் செய்திருக்கிறார். இப்படியிருக்க, பூமியில் கிறிஸ்துவுக்குள் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு பரிசுத்தவான்களும் இந்த மகிமையான உயிர்த்தெழுதலில் பங்குபற்றுவார்கள்; இதுபற்றிப் பவுல் அப்போஸ்தலர் Iதெசலோனிக்கேயர் 4:15-17ல் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
இழுத்துக்கொள்ளுதலும் (Rapture) , உயிர்த்தெழுதலும் (Resurrection) ஒரே சம்பவத்தைப்பற்றியே சொல்கிறது. பரிசுத்தவான்கள் இழுத்துக்கொள்ளப்படும்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் பூமிக்கு வரமாட்டார்; அது இரண்டாம் வருகையின்போதே சம்பவிக்கும். முதல் வருகையின்போது காணாமற்போன இஸ்ரவேலியர்களுக்காக வந்தார் (மத் 15:24); இழுத்துக்கொள்ளும்போது சகல பரிசுத்தவான்களுக்காக வருவார் (Iதெச. 4:16-17); இரண்டாம் வருகையின்போது சகல பரிசுத்தவான்களோடும் வருவார் (வெளி. 19:14; அப். 1:11).

இப்படியிருக்க, உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களுடைய மகிமை வேறுபட்டிருக்கும்; ஆம், சில பரிசுத்தவான்கள் மற்றவர்களைவிட அதிகமாகத் தேவனுக்காக வாழ்ந்தவர்கள்; அநேகர் கிறிஸ்துவுக்காகத் தன் ஜீவனையே கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பெற்றுக்கொண்ட இந்த மகிமை எப்பொழுதும் அவர்களுடனேகூட இருக்கும்; இதுபற்றிப் பவுல் அப்போஸ்தலர் Iகொரிந்தியர் 15:41-43ல் தெளிவாகக் கூறியிருக்கிறார். இங்கு அவர் வெளிப்படையாகச் சிலருடைய மகிமை மற்றவர்களுடைய மகிமையைவிட அதிகமாயிருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்; இதற்குக் காரணம் அவர்கள் தேவனுக்கு உண்மையாயிருந்தார்கள். இதனையே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து “அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” (மத். 25:23) எனக் கூறியிருக்கிறார்.

09/06/2026

Romans 6 Episode 114 in Tamil - The Crossway Ministries (Canada)

09/06/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 7

அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக். 13:23-24).

“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்”

கர்த்தராகிய ஆண்டவர் பல்வேறுவிதமான உவமைகளையும் உதாரணங்களையும் எடுத்து, இப்பொழுதுதான் கூறியிருந்தார். இந்த உவமைகள் உதாரணங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிலரே இரட்சிக்கப்படுவார்களென்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
உண்மையில் லூக்கா 13:23ல் ஒருவன் “ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ” என்று அவன் கேட்ட மிகமுக்கியமான கேள்வியைப் புறக்கணித்த ஆண்டவர், அந்தக் கேள்வியைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஊக்கமான ஒரு வேண்டுகோளைத் தன்னைச் சுற்றியிருக்கும் யாவருக்கும் அறிவித்திருந்தார்.

அதென்னவென்றால், “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்”; அந்த வாசல்வழியாகவே தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழையமுடியும் என்றார்; ஆனால், அந்த வழியைத் தேவன் இடுக்கமாக்கவில்லை; மனுஷனே இடுக்கமாக்கினான்; தேவனுடைய வழியை மனுஷன் பின்பற்றாதபடியினால் அந்த வழி இடுக்கமானது; இதுபற்றி ஆண்டவர் லூக்கா 13:25-28ல் “வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங் ளுக்குச் சொல்லுகிறேன் . நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்” என்று கூறியிருந்தார். கதவு பூட்டப்பட்ட பின்பு ஜனங்கள் தாமதமாய் மனந்திரும்புகிறார்கள், தாமதமாய் விசுவாசிக்கிறார்கள், தங்களுடைய பாவத்துக்குத் தாமதமாய் மனம் வருந்துகிறார்கள், தாமதமாய்த் தேவனிடம் மன்னிப்புக்கோருகிறார்கள், தாமதமாய் ஜெபம்பண்ணுகிறார்கள்; என்ன பிரயோஜனம்? இதே மாதிரி மலைப்பிரசங்கத்தின்போது மத்தேயு 7:22-23லும் சொல்லப்பட்டிருக்கிறது.

தேவனுடைய சிருஷ்டியைப் பொறுத்தளவில், பூமியே அவிசுவாசத்தினால் நிறைந்துபோயிருக்கிறது; அவிசுவாசம் நரகத்தில் இல்லை. லூக்கா 13:24-28ல் சொல்லப்பட்டிருக்கும் வேதவாக்கியங்கள், மரணத்துக்குப் பின்பு இரட்சிப்பு உண்டு, மனந்திரும்புதல் உண்டு என்ற சிந்தனையைத் தவிடுபொடியாக்குகிறது. அநேகர் மதத்தோடு சம்பந்தப்பட்ட கேள்விகளைக்கேட்டு, தாங்கள் மதப்பற்றுள்ளவர்கள் என்று தங்களைப் பெருமைப்படுத்திக்கொள்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவோடு ஏதோ ஒரு தொடர்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் (லூக். 13:26); ஆயினும், அவர்களுக்கும் பரலோகம் பூட்டப்படுகிறது. பரலோகத்தின் கதவு பூட்டப்பட்டால், நரகத்தின் கதவு விரிவாகத் திறக்கப்படுகிறது. அங்கு பற்கடிப்பும் நம்பிக்கையற்ற அழுகையும், தவறுக்காக மனம்வருந்துதலும், மனக்கசப்பும் வேதனையும் உண்டாயிருக்கும்; ஆயினும் எல்லா இடத்திலும் கிறிஸ்துவின் சிலுவையின் உபதேசம் தற்போதைய சிந்தனைக்கு முரணாயிருக்கிறது.

ஒரே ஒரு வழியின்மூலம்தான் இரட்சிப்பைப் பெறமுடியும்; இயேசுகிறிஸ்துவிலும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதிலும் விசுவாசத்தை வெளிப்படுத்துவதன்மூலமே அது சாத்தியமாகும் (யோவா. 3:16, 14:6).

லூக்கா 13ம் அதிகாரத்தைப் பார்க்கும்பொழுது, முதலாவதாகக் கலிலேயருடைய இரத்தம் பலிகளோடே சேர்க்கப்பட்டதையும், இரண்டாவதாகச் சீலோவாமிலே கோபுரம் விழுந்து 18 பேரைக் கொன்றதையும், மூன்றாவதாகத் தோட்டத்தில் நாட்டப்பட்ட அத்திமரத்தைப்பற்றிய உவமையையும், நான்காவதாகத் தேவனுடைய ராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது என்ற உவமையையும், ஐந்தாவதாகத் தேவனுடைய ராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது என்ற உவமையையும் நாம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

09/05/2026

Romans 6 Episode 113 in Tamil - The Crossway Ministries (Canada)

09/05/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 6

இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள். அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று (லூக். 9:34-35).

“இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்”

லூக்கா 9:33 ல் பேதுருவின் பேச்சுக்குப் பதில், இந்த மேகமாகும். இஸ்ரவேலிய புத்திரர்களை வனாந்தரத்தில் வழிகாட்டிய மேகமே (யாத். 40:34-38) அவர்கள்மேல் இப்பொழுது நிழலிட்ட மேகமாகும். பேதுருவினால் ஆலோசனையாகச் சொல்லப்பட்ட கூடாரத்தைவிட இந்த மேகம் வித்தியாசமாயிருந்தது. சீஷர்கள் பயப்பட்டனர்; ஆனால், இயேசு பயப்படவில்லை என்பதனை நாம் அறிந்திருக்கவேண்டும்.

கிறிஸ்துவின் மறுரூபம் அவருடைய மகிமையைப் பிரகாசித்தது; மகிமை அவர்மேல் அல்ல, அவருக்குள்ளிருந்து அவருடைய வஸ்திரத்தினூடாகப் பிரகாசித்தது. மோசேயும் எலியாவும் அவருக்கு முன்பாகத் தோன்றும்போது, மோசே நியாயப்பிரமாணத்தையும் எலியா கிருபையையும் பிரதிபலித்தார்கள். அவர்கள் இருவரும் இயேசுவுடன் சம்பாஷித்தார்கள் என்பது ஆச்சரியத்தைக் கொடுக்கும் செய்தியல்லவா? மோசே 1500 வருடங்களுக்கு முன்பு இறந்தான்; எலியாவோ மரணத்தைக் காணாமல் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான். இவர்கள் இருவரும் அவர் எருசலேமில் நிறைவேற்றப்போகிற மரணத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள் எனச் சொல்லப்படுகிறது (லூக். 9:31); ஆம், பரலோகத்தின் பேச்சு அவருடைய மரணத்தைப்பற்றியதாக இருந்தபடியினால், மனுஷகுலத்தின் பேச்சும் அவருடைய மரணத்தைப்பற்றியதாகவே இருக்கவேண்டும். மறுரூபத்தையும் அவர்களுடைய சம்பாஷணைகளையும் அவதானித்த பேதுரு “.....மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்” (மத். 17:4). அவன், தான் பேசுகிறது இன்னதென்று தெரியாமல் பேசினான்; உடனடியாக அவனுக்குக் கிடைத்த பதில், நம்மெல்லோருக்கும் எச்சரிக்கையாக அமைகிறது.

அதெப்படியெனில், நம்மில் தலைசிறந்த பரிசுத்தவான் எவனையும் அவரோடு சமன்படுத்தமுடியாது என்பது தெளிவாகிறது; ஆனால், பூமியில் அவரை மற்ற மனிதர்களுடன் தாராளமாகச் சமன்படுத்துகிறார்கள். இத்தகைய சமன்பாடு அவர்களுடைய இரட்சிப்பைக் கேள்விக்குறியாக்குகிறது. அப்படியானால் பரிசுத்த வான்களிடத்தில் செய்யும் ஜெபம், மரியாளுக்குச் செய்யும் ஜெபம் ஆகியவற்றில் ஏதாவது பிரயோசனமுண்டோ என்பதனைக் கத்தோலிக்க நண்பர்கள் தீவிரமாக ஆலோசனை செய்யவேண்டியது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது; பரமபிதாவின் சுருக்கமான கட்டளை “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்” (மத். 17:5) என்பதேயாகும்; வேறெதற்கும் செவிகொடுப்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்!

09/04/2026

Romans 6 Episode 112 in Tamil - The Crossway Ministries (Canada)

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when The Crossway Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share