06/15/2026
The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்
ஜுன் 16
ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும் (யோபு 14:7-9).
இளமரம்போலக் கிளைவிடும்”
யோபு, ஒருவனுடைய மரணத்தையும் ஜீவனையும் குறித்துப் பேசுகிறான்; ஆனாலும், இப்பொழுது அவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட வசனங்கள் மிகப்பெரிய ஒரு சத்தியத்தை நமக்குத் தெளிவாக்குகிறது. அவன் அந்த நேரம் தான் பேசினதின் தாற்பரியத்தை அறிந்தானா என்று சொல்வதற்கில்லை; ஒரு மனுஷன் மரிக்கும்பொழுது அவனுடைய ஜீவனும் முடிவுபெறுகிறது என்பது அவனுடைய ஜீவனைப் பொறுத்தளவில் உண்மைதான்; ஆனாலும், யோபு தற்போதைய ஜீவனைப்பற்றியே குறிப்பிட்டிருக்கிறான்; யோபு தான் மறுபடியும் புதுப்பிக்கப்படுவதில் நம்பிக்கையை இழந்துபோனான். அவனுடைய தற்போதைய நிலைமையை உற்றுநோக்குகையில், அது எப்படிச் சாத்தியமாகும் என்பதனைக் கற்பனைபண்ணிப் பார்க்கவும் அவனால் முடியவில்லை; தான் மரிக்கப்போவதை உணர்ந்துகொண்டான். இப்படித் துன்பப்படவேண்டுமாயின் மரிப்பது உத்தமமே என்பது அவனுடைய கணிப்பாகும்.
ஆனாலும், கர்த்தராகிய ஆண்டவர் அவன்மூலம் எதனை உரைக்கிறார் என்பது யோபுவுக்கு விளங்கவில்லை; அதெப்படியென்றால், ஒரு மரத்தை வெட்டும்பொழுது பார்ப்பதற்கு அது அற்றுப்போனதாகவே தென்பட்டாலும் அது “திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்” எனக் கூறப்பட்டிருக்கிறது. வெட்டிப்போடப்பட்ட மரம் திரும்பத் தழைப்பதுபோல, யோபுவும் புதுப்பிக்கப்படுவான் என்பது தெளிவாகிறது; ஆயினும், அந்த நேரத்தில் அதற்குரிய அறிகுறியை அவன் காணவில்லை. இந்தப் பந்தி, அவன் எந்தமாதிரியான விசுவாசியாயிருந்தாலும் அவனுக்கு ஒரு பாரிய உண்மையை வெளிப்படுத்துகிறது.
துரதிஷ்டவசமாக, நம்முடைய வாழ்க்கையில் சிலவேளைகளில் நமக்கெதிராக ஏற்படும் விரோதமான சூழ்நிலைகளினால், பார்வைக்கு எல்லாம் இழந்துபோனதுபோலத் தென்படும்; ஆனால், பரிசுத்த ஆவியானவர்மூலம் இந்தக் கோத்திரத்தலைவன் சொல்வது என்னவெனில், வெட்டிப்போடப்பட்ட மரம் மறுபடியும் தழைக்கும் என்பதேயாகும். வார்த்தையென்ற தண்ணீர் அடிமரத்துக்கு ஊற்றப்பட்டவுடன் அந்த வாசனையினால் “அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்”; கர்த்தராகிய ஆண்டவராலேயே அதனைச் செய்யமுடியும்; நம்மால் முடியாது. மனுஷன் விசுவாசியாக இருந்தாலும், மறுபிறப்பைப்பெற்று இருந்தாலும் அவன் தானாக அந்த மாற்றத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தமுடியாது; அந்த உண்மையைப் புரிந்துகொள்வது மனுஷனுக்கு அவ்வளவு இலகுவானதல்ல; ஆயினும், அதுவே உண்மையாயிருக்கிறது. மாற்றம் பரிசுத்த ஆவியானவராலேயே கொண்டுவரப்படுகிறது. அதனைச் செய்வதற்கு அவர் தயாராயிருக்கிறார்; நாம் அதனைப் பெறுவதற்குத் தயாரா என்பதனைச் சிந்திப்போமாக.