09/06/2026
The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்
செப்டம்பர் 7
அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக். 13:23-24).
“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்”
கர்த்தராகிய ஆண்டவர் பல்வேறுவிதமான உவமைகளையும் உதாரணங்களையும் எடுத்து, இப்பொழுதுதான் கூறியிருந்தார். இந்த உவமைகள் உதாரணங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிலரே இரட்சிக்கப்படுவார்களென்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
உண்மையில் லூக்கா 13:23ல் ஒருவன் “ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ” என்று அவன் கேட்ட மிகமுக்கியமான கேள்வியைப் புறக்கணித்த ஆண்டவர், அந்தக் கேள்வியைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஊக்கமான ஒரு வேண்டுகோளைத் தன்னைச் சுற்றியிருக்கும் யாவருக்கும் அறிவித்திருந்தார்.
அதென்னவென்றால், “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்”; அந்த வாசல்வழியாகவே தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழையமுடியும் என்றார்; ஆனால், அந்த வழியைத் தேவன் இடுக்கமாக்கவில்லை; மனுஷனே இடுக்கமாக்கினான்; தேவனுடைய வழியை மனுஷன் பின்பற்றாதபடியினால் அந்த வழி இடுக்கமானது; இதுபற்றி ஆண்டவர் லூக்கா 13:25-28ல் “வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங் ளுக்குச் சொல்லுகிறேன் . நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்” என்று கூறியிருந்தார். கதவு பூட்டப்பட்ட பின்பு ஜனங்கள் தாமதமாய் மனந்திரும்புகிறார்கள், தாமதமாய் விசுவாசிக்கிறார்கள், தங்களுடைய பாவத்துக்குத் தாமதமாய் மனம் வருந்துகிறார்கள், தாமதமாய்த் தேவனிடம் மன்னிப்புக்கோருகிறார்கள், தாமதமாய் ஜெபம்பண்ணுகிறார்கள்; என்ன பிரயோஜனம்? இதே மாதிரி மலைப்பிரசங்கத்தின்போது மத்தேயு 7:22-23லும் சொல்லப்பட்டிருக்கிறது.
தேவனுடைய சிருஷ்டியைப் பொறுத்தளவில், பூமியே அவிசுவாசத்தினால் நிறைந்துபோயிருக்கிறது; அவிசுவாசம் நரகத்தில் இல்லை. லூக்கா 13:24-28ல் சொல்லப்பட்டிருக்கும் வேதவாக்கியங்கள், மரணத்துக்குப் பின்பு இரட்சிப்பு உண்டு, மனந்திரும்புதல் உண்டு என்ற சிந்தனையைத் தவிடுபொடியாக்குகிறது. அநேகர் மதத்தோடு சம்பந்தப்பட்ட கேள்விகளைக்கேட்டு, தாங்கள் மதப்பற்றுள்ளவர்கள் என்று தங்களைப் பெருமைப்படுத்திக்கொள்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவோடு ஏதோ ஒரு தொடர்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் (லூக். 13:26); ஆயினும், அவர்களுக்கும் பரலோகம் பூட்டப்படுகிறது. பரலோகத்தின் கதவு பூட்டப்பட்டால், நரகத்தின் கதவு விரிவாகத் திறக்கப்படுகிறது. அங்கு பற்கடிப்பும் நம்பிக்கையற்ற அழுகையும், தவறுக்காக மனம்வருந்துதலும், மனக்கசப்பும் வேதனையும் உண்டாயிருக்கும்; ஆயினும் எல்லா இடத்திலும் கிறிஸ்துவின் சிலுவையின் உபதேசம் தற்போதைய சிந்தனைக்கு முரணாயிருக்கிறது.
ஒரே ஒரு வழியின்மூலம்தான் இரட்சிப்பைப் பெறமுடியும்; இயேசுகிறிஸ்துவிலும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதிலும் விசுவாசத்தை வெளிப்படுத்துவதன்மூலமே அது சாத்தியமாகும் (யோவா. 3:16, 14:6).
லூக்கா 13ம் அதிகாரத்தைப் பார்க்கும்பொழுது, முதலாவதாகக் கலிலேயருடைய இரத்தம் பலிகளோடே சேர்க்கப்பட்டதையும், இரண்டாவதாகச் சீலோவாமிலே கோபுரம் விழுந்து 18 பேரைக் கொன்றதையும், மூன்றாவதாகத் தோட்டத்தில் நாட்டப்பட்ட அத்திமரத்தைப்பற்றிய உவமையையும், நான்காவதாகத் தேவனுடைய ராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது என்ற உவமையையும், ஐந்தாவதாகத் தேவனுடைய ராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது என்ற உவமையையும் நாம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.