12/11/2025
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
#இலங்கை_ஐயப்ப_சுவாமிமாருக்கான 🙏
சபரிமலை புனிதயாத்திரையின் தாத்பரியம் மற்றும் அதனை #இலங்கை_அரசாங்கம் புனித யாத்திரையாக அங்கீகரிக்க வேண்டி தொகுக்கப்பட்ட பரிந்துரை அறிக்கை.⬇️⬇️
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
♦️சபரிமலைக்கு புனிதயாத்திரையை மேற்கொள்ளும் சுவாமிமார்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், ஒழுக்கங்கள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றை விளக்கும் அறிக்கை...⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கோடி கணக்கான பக்தர்களின் ஆன்மீக வாழ்வில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு புனித ஸ்தலமாக திகழ்கிறது.
சபரிமலை புனித யாத்திரை என்பது சமூக, சாதி, மொழி, நாடு ஆகிய எல்லாப் பாகுபாடுகளையும் தாண்டும் ஒரு ஆன்மீக ஒன்றிணைப்பாகும். இலங்கையின் இந்துக்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் இந்துக்கள் ஆழ்ந்த பக்தியுடன் மேற்கொள்ளும் ஒரு புனித யாத்திரை ஆகும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரையை குறிப்பாக இலங்கையின் தமிழ் இந்து சமுதாயம் ஆன்மீகம் மற்றும் பக்தி உணர்வோடு மேற்கொண்டு வருகின்றனர். எனவே சபரிமலை யாத்திரையை இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக புனித யாத்திரை என அங்கீகரிப்பதானது மிகவும் பொருத்தமானதும், தேவையானதுமான ஒரு நடவடிக்கையாக அமையும்.
சபரிமலை புனித யாத்திரையின் தாத்பரியம் ''தந்மயம் ஹி மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ" (மனம் தான் பந்தத்திற்கும், விடுதலைக்கும் காரணம்) இந்தியாவின் தொன்மையான ஆன்மிக மரபுகளில் ஒன்று தான் சபரிமலை ஐயப்பனின் யாத்திரை. இது ஒரு பாதயாத்திரையும், தீர்த்தயாத்திரையும் உள்ளடக்கிய ஒரு புனித யாத்திரையாக கருதப்படுகிறது. அதன் ஆழத்தில் உள்ளதொரு மனிதனின் ஆன்மிகப் பயணம் சனாதன தர்மத்தின் புனிதக் கொள்கைகளுடன் நெருக்கமாகவே தொடர்புபட்டுள்ளது.
இந்த யாத்திரை என்பது ஒரு ஆன்மிக சாதனையின் நடைமுறை வடிவமாகவும், மனிதனின் வாழ்வியல் மாற்றத்தை நோக்கி செல்லும் தத்துவ பாதையாகவும் விளங்குகிறது. சபரிமலை யாத்திரை என்பது ஒரு சாதாரண கோயில் வழிபாடல்ல. இது ஒவ்வொரு பக்தனின் உள்ளத்தை தூய்மைப்படுத்தி அவனை பக்தியிலும், தனிமனித ஒழுக்கத்திலும் உயர்த்தி மும்மலங்களை கடந்து முக்தி என்ற பிறவா நிலைக்கு வழிகாட்டும் ஆன்மீகப் யாத்திரையாக உள்ளது.
இந்த யாத்திரையின் மூலம் ஒரு மனிதன் தன்னைத் தூய்மைப்படுத்தி ஒரு உயர்ந்த இலக்கை நோக்கிச் செல்லும் ஒழுக்கமான ஆன்மீக பாதையில் பயணிக்கிறான். அதனால்தான் இது ஒரு மனிதனின் உடல், மனம், செயல் மற்றும் வாழ்வியலை மாற்றும் யாத்திரை என்று பார்க்கப்படுகிறது.
சபரிமலை புனிதயாத்திரையில் இலங்கை இந்து தமிழர்கள் ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். இந்த யாத்திரை அவர்கள் குடும்ப பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. இந்த புனிதயாத்திரை அவர்களின் மத உணர்வுகளை உறுதிப்படுத்தும் ஒரு தூய வழியாக இருக்கின்றது. இந்தியா - இலங்கை இடையேயான இந்த ஆன்மீக உறவுக்கு பல ஆண்டுகளாக அடித்தளமாக இருந்து வந்துள்ளது. இந்த சபரிமலை புனிதயாத்திரை தான்.
இந்த யாத்திரையின் மையத்துவம், "தத்துவமசி" என்ற உபநிடத வாக்கியத்தில் அடங்கியுள்ளது - அதாவது, ”நீயே அந்த பரம்பொருள்". இதன் மூலம் பக்தன் தன்மையைக் கடந்து இறைவனுடன் ஐக்கியம் அடையும் யாத்திரையாக அமைந்துள்ளது. சபரிமலை யாத்திரை செல்வதற்கு முன் 41 நாட்கள் அதாவது ஒரு மண்டல விரதம் மிக முக்கியம். ஒரு மண்டல விரதம் என்பது, ஒரு வாழ்வியல் மாற்றம் இது மனிதனை தனது உடலோடு மட்டுமல்லாமல் மனதோடும் உருமாற்றுவதற்கான ஆன்மீக பயிற்சியாகும். பக்தர்கள் கருப்பு உடை அணிந்து துளசி மாலை மற்றும் ருத்ராக்ஷ அணிந்து தவ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.
கோபம்,பொய், ஆசை ஆகியவற்றை தவிர்த்து பிரம்மச்சரியம், சுத்தமான சைவ உணவு, தினசரி ஸ்நானம் மற்றும் பூஜை, போன்ற நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சபரிமலை யாத்திரை என்பது வெறும் உடல் பயணம் மட்டுமல்ல அது ஒரு ஆன்மீகப் பயணமாகும். தியாகம், அடக்கம், ஒழுக்கம், சமத்துவம், பக்தி,மனித நேயம் ஆகியவற்றின் மூலம் மனிதன் தன்னை அறிந்து இறைவனை உணரும் ஒரு புனித வழி இது.சபரிமலை யாத்திரையின் மிக முக்கியமான அம்சம் அதன் சமத்துவ தத்துவமாகும். சாதி, மதம், மொழி, சமூக நிலை என எந்த வகை பாகுபாடும் இந்த யாத்திரையில் பார்க்கப்படுவதில்லை.
இலங்கையில் மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக இருந்து வந்துள்ளன. சபரிமலை யாத்திரை அதன் இயல்பாகவே இந்த ஒற்றுமையை ஊக்குவிக்கின்றது. இதனை ஒரு அரசியலற்ற ஆன்மீக உந்துதல் எனப் பார்க்க முடியும். மத அமைதிக்கும், நம்பிக்கைக்கும் இது ஒரு அரிய முன்னுதாரணமாக விளங்குகின்றது. இந்நிலையில், சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை (Religious Pilgrimage) என அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. சபரிமலை யாத்திரை, ஒரு சாதாரண கோயில் தரிசனத்தைக் காட்டிலும் அதிகமான ஒழுக்கம், ஆழ்ந்த பக்தி ஆன்மீக உயர்வை அடையக் கூடிய வழிமுறையாக அமைகிறது.
இது இலங்கை தமிழ் சமூகத்தின் ஆன்மீக மற்றும் கலாசார வாழ்க்கையின் அடிப்படையிலேயே நிறைந்துள்ளது. ஆகையால் இந்த ஆன்மீக சாதனையை இலங்கை அரசாங்கம் புனித யாத்திரை என அங்கீகரிக்க வேண்டியது நியாயமானதும் அத்தியாவசியமானதும் ஆகும்.
🙏🙏ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏
✍️ Negombo Thanush