04/12/2025
வெள்ள அனர்த்தம் பற்றிய பள்ளி வாசல் நிருவாக சபையின் அறிக்கை
வெள்ள அனர்த்தம் பற்றிய பின்வரும் சில தகவல்களை நாச்சியாதீவு ஜுமுஆப் பள்ளி நிருவாகம் ஊர் ஜமாஅத்தவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது.
வல்லவன் அல்லாஹ்வின் நாட்டப்படி நாட்டின் பல பாகங்களிலும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஒரு பகுதியாக நமது ஊர் நாச்சியாதீவும் பாதிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால், தற்போது நாடின் பல பகுதிகளில் இருந்தும் கிடைக்கும் தரவுகளுடன் ஒப்பிடும் போது எமது ஊரில் ஏற்பட்ட பாதிப்பின் அளவு குறைவாகும். அல்ஹம்துலில்லாஹ். இருப்பினும் பௌதீக மற்றும் இதர பாதிப்புகள் இடம்பெற்றுள்ளன என்பதை மறுக்கமுடியாது.
கடந்த 2025.11.27 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் நிருவாக சபைக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய உடனடியாக பெரிய பள்ளிவாயல் ஒலிபெருக்கி மூலம் ஊர்மக்களுக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டு விழிப்பாக இருக்கும் படி அவர்கள் வேண்டப்பட்டனர். சமூக ஊடகங்களிலும் இது பற்றிய தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இரண்டாம் கட்டமாக அதிகாலையிலே பிரதானமாக 'கொடவான்' மூலமாக வந்த அளவு கடந்த தண்ணீர் மூலம் குசவை மற்றும் பாண்டியன்குளம் உட்பட ஊரின் கீழ்ப்பகுதி நீரினால் பாதிப்படைந்தது. இந்த வெள்ளத்தினால் நிருவாக சபை அங்கத்தவர்களிற் சிலரது வீடுகளும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டாலும் அவற்றையும் கடந்து அவர்கள் ஊருக்கான பொறுப்புகளைத் தம்மால் முடிந்த அளவு நிறைவேற்றினார்கள்.
அதிகரித்த நீரின் போக்கும், நீர்ப்பாசன திணைக்களத்தினரது செயற்பாடுகளும், முன்னர் ஏற்பட்ட வெள்ள சூழ்நிலைகளின் போது அவர்கள் செயற்பட்ட விதமும் இம்முறை செயற்பட்ட விதமும் பல பிரச்சினைகளை உருவாக்கின. இருப்பினும் ஊருக்கு அதிகமாக பாதிப்புகள் ஏற்படாதவாறு நிருவாக சபை மற்றும் பொறியியலாளர் சகோ. ஹம்சீன், சகோ.ஹஸ்மி ஆகியோர் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
கொடவானை இன்னும் அதிகமாக வெட்டுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் முடிவெடுத்திருந்தாலும் சிலரது தலையீட்டின் காரணமாக அந்த நிலை தவிர்க்கப்பட்டது. இதில் சகோ பொறியளாளர் ஹம்சினின் ஒத்துழைப்பு மெச்சத்தக்கதாகும் .
பெரிய அலையில் கமால் நானா வீட்டுக்கு அருகில் உள்ள பாதையை வெட்ட முடிவு செய்யப்பட்ட போது, கடும் மழை மற்றும் போக்குவரத்து தடைகள் இருந்த போதும் அவ்விடத்துக்கு நிர்வாக சபை உறுப்பினர்கள் சென்று அந்த முயற்சியை வெற்றிகரமாக்கினர். இதன் மூலம் நாச்சியாதீவு பெரிய பள்ளி,நாச்சியாதீவு கீழ் பசார்,ஸப்ரான் பாமசிக்கு அருகில் உள்ள கடைகள், குசவை, பாண்டியன்குளம் மற்றும் கொடவான் பகுதிகளில் உள்ள உடைமைகள் இன்னும் அதிகமாக பாதிப்படைவது தவிர்க்கப்பட்டது. இதன் போது ஷுகுர் மாமாவும் தனது ஒத்துழைப்பு வழங்கினார் என்பதை குறிப்பிட வேண்டும்.
இவற்றுக்கு மத்தியில் பள்ளி வளாகத்திற்குள் வரலாறு காணாத நீர் வரத்தொடங்கியது. எனவே, பள்ளிவாயலை பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் நிர்வாக சபைக்கு இருந்தது. அன்றைய தினம் ஜூம்ஆ குத்பா சுருக்கப்பட்டு தொழுகை நடாத்தப்பட்டதுடன் துஆ பிரார்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அத்துடன் பள்ளியின் காபட் நனையாமல் இருக்க ஊர் மக்களது உதவியுடன் அது பாதுகாப்பாக உயர்த்தி வைக்கப்பட்டது. இதன் போது சகோ. யாசிர் இது பற்றி பல தடவை நிர்வாக சபையுடன் தொடர்பு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனரேட்டர் அறைக்குள் முற்றாக நீர் வரத் தொடங்கியதால் பல சிரமங்களுக்கு மத்தியில் ஜெனரேட்டர் வெளியே கொண்டு வரப்பட்டது. இதற்கு பல இளைஞர்கள் உதவினர் (ஆசாத், அன்சார்தீன், சாகிர், ரஷாட் ) இன்னும் சிலரும் அவர்களோடு இணைந்து ஒத்துழைப்புத் தந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
பொது மக்களுக்கு தங்குமிடம் தேவையாயின் பள்ளிகளில் தங்க வசதிகள் செய்து தரப்படுவதுடன் பள்ளிகளில் வந்து தங்குமாறு ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்து. இந்த வகையில் இரண்டு இரவுகள் உணவு வழங்கப்பட்டது. இதன் போது கேஸ் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது. விறகு நனைந்து சில உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து தடைகளுக்கு மத்தியில் இந்தப் பணி மேற்கொளப்பட்டது. இதன் போது அல்ஹிகம் மத்ரசா நிருவாகம் மற்றும் சகோ நியாஸ், தமீம், முனாபர், ஹாரிஸ் நாநா, ஆப்தீன், சஹாப்தீன், சப்ரி, ரியாஸ் அஹமட் ஆசிரியர் உட்பட இன்னும் பலர் உதவிகளை செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், இரு கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் நிர்வாக சபையினர் பல தடவை கலந்துரையாடல்களை மேற்கொண்டு முடியுமான விடயங்களை அவர்கள் ஊடாக செய்வதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் அவர்களுடன் முரண்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டதை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.
நீர் மட்டம் குறைந்த பின்னரும் பலர் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர். அவர்களது இருப்பிடங்களை சுத்தம் செய்து கொடுக்க வேண்டிய கடப்பாடு சகலருக்கும் உள்ளது. அதற்காக நிர்வாக சபை முடியுமான பங்களிப்பை செய்துள்ளது.
அதேபோன்று, பிரதேச சபை உப தவிசாளர் சகோ. நியாஸ் அவர்கள் மூலம் பிரதேச சபையின் உதவியுடன் வீதிகளை செப்பனிடவும் மற்றும் பிற சேவைகளை வழங்கவும் நிருவாக சபை ஏற்பாடு செய்தது. அல்லாஹ் போதுமானவன்.
மேலும் கடந்த 2025.12.01 ஆம் திகதி பெரிய பள்ளி வெள்ளத்தினால் பாதிப்படைந்த நிலையில் அது சுத்தப்படுத்தப்பட்டு முழுமையாக தொழுகைக்காக தயார்படுத்தப்பட்டதுடன் வெளி வளாகம் கிரவல் இடப்பட்டு சரிபடுத்தப்பட்டுள்ளது, முன்பக்க வீதியின் சேதம் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து சீர்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் பின்பக்க மதிலின் ஒரு பகுததி உடைந்து கழிவு நீர் வடிகால் தடைப்பட்டிருந்தது. அது சரிபடுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று பெரிய பள்ளி மத்ரஸா கட்டிடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மத்ரஸாவை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடயங்களில் பொது மக்கள் பலர் தமது பூரண ஒத்துழைப்பைத் தந்தனர்.
மேலும் சகோ.ரஸ்கான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியாக 2025.12.01 திகதி பகல் உணவு வழங்கியிருந்தார்கள். அவர்களுக்கு நிர்வாக சபை தனது நன்றியை தெரிவிப்பதுடன், இன்னும் பலர் உதவிகளை உங்களது உறவுகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு வழங்கியிருப்பீர்கள் அதற்கு நிருவாக சபை நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
நிர்வாக சபையின் இரு தலைவர்கள் உட்பட பல உறுப்பினர்களும் அவர்களது இல்லிடங்களும் உறவினர்களும் அவர்களது இல்லிடங்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்படிருக்கும் சூழ்நிலையிலும் பொது மக்களின் நலனை முற்படுத்தி, முடியுமான உதவிகளை இறைவனுக்காக செய்திருக்கிறார்கள்.உங்களது துஆக்களும் ஒத்துழைப்புக்களையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
*பொறுப்புணர்வுடன் நடப்பது அவசியம்*
இது போன்ற நிகழ்வுகளின் போது நிருவாகமும் ஊர் ஜமாஅத்தாரும் மிக நிதானமாக செயற்பட வேண்டியுள்ளது. சில தனிப்பட நபர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பாக (Whats app மற்றும் Face Book ) ஊடாக எமது ஊரின் வெள்ள நிலைகளின் வீடியோ மற்றும் புகைபடங்களை காண்பித்து தனிப்பட்ட ஒரு வங்கிக் கணக்கிற்கு குறிப்பிட்ட தொகைப் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதற்கு சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர். பொறுப்புள்ள நிருவாக சபை என்ற அடிப்படையில் அதனை நிறுத்தியுள்ளது. பொது மக்களாகிய நீங்கள் மிக நிதானமாக செயற்படுமாறும் அவ்வாறான தனிப்பட்ட நபர்கள், அங்கீகரிக்கப்படாத குழுக்கள் பற்றி அவதானத்துடன் செயற்படுமாறும் பணிவுடன் வேண்டுகிறோம்.
மேலும் சமூக வலைத் தலங்கள் வாயிலாக தகவல்களைப் பகிரும் போது அமானிதமாகவும் சமூகப் பொறுப்புடனும் அனைவரும் நடந்துகொள்ளும் படியும் நிர்வாக சபை அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.
அதேபோன்று நேற்று 2025.12.02 இரவு நிர்வாக சபை விசேடமான கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் அனர்த்த முகாமைத்துவத்துக்கான தனியான செயலணி(Task Force) ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. உங்களில் எவருக்காவது ஏதாவது பிரச்சினைகள், தேவைகள் இருப்பின் நிர்வாக சபையின் உறுப்பினர்களுக்கு நீங்கள் அது பற்றி தெரிவிக்க முடியும்.
செயலணியின் விரிவான செயற்பாடுகள் பற்றி இன்ஷா அல்லாஹ் பொது மக்களுக்கு எதிர்காலத்தில் தெரியப்படுத்தப்படும்.
நிவாரண பொருட்கள் வழங்குவதை நிர்வாகம் ஊக்குவிக்கிறது. அதன் மூலம் அல்லாஹ்வின் கூலி நிச்சயமாகக் கிடைக்கும். எனின் நிருவாக சபை அல்லது கிராம உத்தியோகத்தர் அல்லது ஊரில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் ஊடாகவே அவற்றை வழங்க முன்வர வேண்டும். மேலும் இன்ஷா அல்லாஹ் பாதிக்கப்பட்டவர்களுக்க நிவாரண உதவிளைப் பெற்று வழங்க நிருவாக சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உங்களுக்குத் தெரிந்த யாராவது நிருவாக சபை ஊடாக வழங்க முன்வருவார்களாயின் அதற்கான ஒத்துழைப்பை நிருவாக சபை வழங்கும்.
நாடும் மாவட்டமும் குறிப்பாக நமது ஊரும் ஓர் அனர்த்தத்தை சந்தித்துள்ள இந்த இக்கட்டான சூழலில் அல்லாஹ்வுடனான தொடர்பை மென்மேலும் வலுப்படுத்தி ஒற்றுமையாக செயல்படுவோமாக.
அல்லாஹ் நன்கறிந்தவன். எல்லோருக்குமாக எல்லோரும் அல்லாஹ்வை பிரார்த்தித்துக் கொள்வோம்.
இவ்வண்ணம்
*நிர்வாக சபை*
நாச்சியாதீவு ஜும்ஆ பள்ளிவாசல்
03.12.2025