02/02/2026
நாச்சியாதீவு கிராமத்தின் எழுச்சி நோக்கிய ஓர் அறிவுபூர்வமான கள விஜயம்!
நாச்சியாதீவு கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்றியமைக்கும் உயரிய நோக்கில், கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து கடந்த சனி(31) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (01) விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
நாச்சியாதீவு பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்கள், அல்-ஹிகம் மத்ரஸா நிருவாகிகள், உலமாக்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் என சுமார் 26 பேர் கொண்ட குழுவினர் இதில் பங்கேற்றனர்.
பயணத்தின் முக்கிய தருணங்கள்:
📍மத்திய மாகாண விஜயம் (சனிக்கிழமை):
மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஸம் ஸம் (Zam Zam) மற்றும் UDT ஆகிய நிறுவனங்களுக்குச் சென்ற குழுவினர், அந்த நிறுவனங்களின் முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர். அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு நாச்சியாதீவு மக்களை எவ்வாறு நல்வழிப்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டனர்.
📍காத்தான்குடி விஜயம் (ஞாயிற்றுக்கிழமை):
காத்தான்குடியின் அனைத்து அமைப்புகளுக்கும் வழிகாட்டியாகத் திகழும் பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு (Federation) விஜயம் செய்து, அதன் நிருவாகிகளுடன் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். தொடர்ந்து, இஸ்லாமிய வழிகாட்டலுக்கான நிலையம் (CIG) மற்றும் பிஸ்மி கலாசாலை ஆகிய இடங்களுக்குச் சென்று, இளைஞர்களுக்கு இஸ்லாமிய பண்பாடுகள், பொது அறிவு மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள் வழங்கப்படும் விதம் குறித்துத் தெளிவு பெற்றனர்.
📍மருதமுனை மற்றும் ஏறாவூர் விஜயம்:
மருதமுனையில் கலாநிதி முபாரக் மதனி அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் அல்-ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரிக்குச் சென்ற குழுவினர், அங்கு பெண்களைச் சமூகச் செயற்பாட்டாளர்களாக உருவாக்கும் பாடநெறி மற்றும் நிருவாகக் கட்டமைப்புகளைப் பார்வையிட்டனர்.
இறுதியாக, காத்தான்குடி அல்-அக்ஸா மற்றும் ஷுஹதாக்கள் பள்ளிவாயல்களைப் பார்வையிட்டதுடன், ஏறாவூரில் அமைந்துள்ள புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (Cancer Care Home) மகத்தான சேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
நாச்சியாதீவு கிராமத்தின் எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கும், சமூகத்திற்காகத் தியாகத்துடன் பணியாற்றும் மனஉறுதியைப் பெற்றுக்கொள்வதற்கும் இப்பயணம் ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது. இன்ஷா அல்லாஹ், இந்தப் பயணத்தின் மூலம் திரட்டப்பட்ட அனுபவங்கள் நாச்சியாதீவு கிராமத்தின் எழுச்சிக்கு வித்திடும்.