03/06/2025
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை தேவாரப் பண்ணிசை வளர்ச்சி கழகம், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபை இணைந்து வழங்கிய
முப்பெரும் சைவப் பெருவிழா -2025"
~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை தேவாரப் பண்ணிசை வளர்ச்சி கழகம், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபை இணைந்து நடத்திய முப்பெரும் சைவப் பெருவிழா நிகழ்வானது கடந்த 31,01- 05-2025 சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பாடல்பெற்றத் தலமாகிய திருக்கேதீஸ்வரப் பதியிலே பண்சுமந்த பாடல்களோடு மெய்சிலிர்க்கும் வகையிலே நடைபெற்றது.
இவ்விழாவின் முதல் நிகழ்வானது சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் பாலாவித்தீர்த்தக் கரையில் இருந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் 63 நாயன்மார்களின் வேடப் புனைவுடன் பண் சுமந்த பாடல்கள் பாடி ஊர்வலமாக "படவேறிடை மடவாளொடு உறை கேதீச்சரநாதர்" சன்னதியில் வருகை தந்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.ஆலய வசந்த மண்டபத்தில் வேடப்புனைவுடன் வருகை தந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் தியாகராஜா சரஸ்வதி கலாசார மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வருகின்ற உயர் பண்ணிசைக் கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.ய.அனிருத்தனன் அவர்கள் தலைமையில் இந் நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திரு. சிவக்கொழுந்து ஸ்ரீ சற்குணராசா( துணைவேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களும்,சிறப்பு அதிதியாக திரு.க. கனகேஸ்வரன் (மாவட்டச் செயலாளர், மன்னார்) அவர்களும், விசேட அதிதிகளாக திருமுறை கலாநிதி
தி. பாலச்சந்திர ஓதுவா மூர்த்திகள் (தேவார உதவிப் பேராசிரியர்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,தமிழ்நாடு)
மற்றும் தேவார இசைக் கலைமணி, முனைவர் திருமதி. சிவகௌரி கிரீஷ்குமார் (சிதம்பரம், தமிழ்நாடு) அவர்களும் வருகை தந்திருந்தனர்.
மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.அதனைத்தொடர்ந்து வரவேற்புரையினை மன்னார் மாவட்ட இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.அ.தனுஜன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து வாழ்த்துரையினை திருமதி .அபிராமி கைலாச பிள்ளை( தலைவர், அகில இலங்கை இந்துமாமன்றம்)அவர்கள் வழங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அரங்க இசை இரண்டாம் மூன்றாம் ஆண்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பயிலுனர்களால் நிகழ்த்தப்பட்டது.
பின்னர் 1ம்,2ம், 3ம்ஆண்டு பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் விருந்தினர்களின் விசேட உரைகளும் நடைபெற்றது. இந் நிகழ்வினை தேவார பண்ணிசை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் திரு.செல்லம் அம்பலவானர் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. பவானி முகுந்தன் தொகுத்து வழங்கினார்.மேலும் இவ் நிகழ்வினை சிறப்பிக்கும் வண்ணம் இப் பண்ணிசை கற்கை நெறியினை நெறிப்படுத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சிந்தூரன் மற்றும் முன்னாள் மன்னார் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.ஆ.ஜீவிதா அவர்களுடன் இன்னும் பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வருகை தந்து இவ் விழாவினை சிறப்பித்தனர். அன்றையதினம் கழகத்திற்கான அடையாள அட்டை அதன் அனுசரணையாளர் திருமதி காந்திமதி அம்மாவினால் இசைஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டு முதல் அட்டை தலைவருக்கு அணிவிக்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலய வசந்த மண்டபத்தில் இக்கற்கை நெறியின் இசை ஆசிரியர்களின் தலைமையில் கற்கை நெறியினை பயின்ற பயலுனர்கள் மற்றும் சிங்கப்பூர் திருநெறிய தமிழிசைக் குழு, இந்தியா, மலேசியா, கனடா, இத்தாலி நாட்டில் இருந்து வருகை தந்த அடியவர்கள் இணைந்து வழங்கிய சேர்ந்திசை விண்ணப்பம் வெகு விமர்சையாக இடம்பெற்று "முப்பெரும் சைவப் பெரு விழா" நிகழ்வானது சிறப்பான முறையில் நிறைவு பெற்றது.
மேன்மைகொள் சைவநீதி
விளங்குக உலகமெல்லாம்.