20/02/2021
பிச்சை போடு ராமா !
மன்னவன் வாசலுக்கு
நாடி வந்தேன்
கோசலை ராமனிடம்
யாசகம் கேட்டு நின்றேன்
அணிலுக்கும் தவளைக்கும்
கருணை தந்தாய்
அகலிகையை பெண்ணாக்கி
மகிழ்வு தந்தாய்
நான் மட்டும் உன் பிள்ளை இல்லையா?
நீ போடும் பிச்சை
எனக்கில்லையா?
காசியும் கங்கையும்
கண்டதில்லை
கடலாடி பாவங்கள் போக்கியதில்லை
யாத்திரை நானும்
சென்றதில்லை
எது குளராமன் உன்னையன்றி
யாரையும் நான் அறிந்ததில்லை
ராமா ராமா என்று நான்
கூவுகிறேன்
ராவும் பகலும்
உன்னையே வணங்குகிறேன்
ஆனாலும் பிச்சை எனக்கு நீ தரவில்லை
என் ஜென்ம பசி இன்னும் தீரவில்லை
தசரதன் மகன் நீ
வாரிகொடுக்கும் வள்ளல் நீ
உன் மாளிகை கருணையால்
நிரம்பி வழிகிறது
எனக்கு ஒரு துளி கருணை இல்லையா
தசையும் குருதியும் உன் நாமம்
எழுப்பும் நரம்பும் உன் நாமம்
நான் பார்ப்பதும் கேட்பது உன் நாமம்
உனக்கு ஏன் என் மீது பெரும்கோபம்
குகனுக்கு அருளியது பொய்யா ?
சபரியை அணைத்தது பொய்யா ?
சுக்ரீவனை காத்ததும் பொய்யா ?
எனக்கும் மட்டும் அருளாமல் இருப்பது
ஏனையா ?
வானத்தில் உன் எழில் மேனி கண்டேன்
மரிக்கடலில் உன் கருணா விலாசத்தை கண்டேன்
வண்ண மலர்களில் உன் புன்னகையை கண்டேன்
சின்ன பறவைகளில் உன் குரலை கேட்டேன்
எல்லாமும் எங்கேயும் உன்னையன்றி வேறு எது கண்டேன்
உன் அருள் என்னும் அமுதத்தை யாசகமாய் கேட்டேன்
உனக்கு என் மீது இன்னும் கருணை பிறக்கவில்லையா ?
என் கால்களை வெட்டி போடு
கைகளை தூண்டித்து விடு
என் இரத்தத்தை எடுத்து பூமியிலே தெளி
ஆனாலும் உன் கருணை இன்னும் அமுத கலசத்தை ஒரு துளி எனக்கு பிச்சையாய் கொடு.
குருஜி