19/08/2026
#குலசேகரன்பட்டினம், ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆறுதல் வீடு!
அற்புதங்கள் பல நிகழ்த்தும் அன்னை முத்தாரம்மன் திருக்கோவில்!
அகத்தியரின் சாபத்தால் வரமுனி என்ற முனிவர், எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட ‘மகிஷ’ உருவத்தில் அழையும்படி ஆனது. அசுர குலத்தில் பிறந்த மகிஷன், கடுமையான தவம் இருந்து சிவபெருமானிடமும், பிரம்மதேவரிடமும் பல வரங்களை வரமாகப் பெற்றான். அந்த வரங்களின் காரணமாக அவன் தேவர் களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
சிவபெருமான், பார்வதி தேவியை உதவி புரிய கோரினார். இதையடுத்து அன்னை தேவர்களுக்கும், முனிவர்களுக்கு அபயம் அளிக்க முன்வந்தாள். பின்னர் மகிஷா சுரனை வதம் செய்வதற்காக ஒன்பது நாட்கள் தவமிருந்து, பத்தாம் நாளில் காளி வடிவம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தாள்.
தசரா திருவிழா :
இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் ‘தசரா திருவிழா’ வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் 9 நாட்கள் அம்மன் தவம் செய்யும் நிகழ்வும், 10-ம் நாளான விஜயதசமி அன்று, மகிஷாசுரனை அன்னை வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றன. இந்த விழாவிற்காக பக்தர்கள் பலர் காப்பு கட்டி, பல்வேறு வேடங்கள் தரித்து அம்மனுக்கு விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது.
புரட்டாசி மாத அமாவாசை கழிந்த மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது ‘தசரா திருவிழா’. மைசூர், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெறும் தசரா விழாவைப் போன்று தமிழகத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயம் சிறப்புக்குரிய இடமாக உள்ளது. இந்த ஆலயத்தில் ஒரே பீடத்தில் வடக்கு திசை நோக்கி ஈசன் ஞானமூர்த்தீஸ்வரராகவும், அம்பாள் முத்தாரம்மனாகவும் சுயம்புவாக இருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.