23/03/2026
தவக்கால சிந்தனைகள் 24 :
இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட பத்தாம் ஸ்தலம்...
இயேசு நாதர் சுவாமியின் ஆடைகளைக் களைகிறார்கள்..
நம் நேச இயேசு ஆண்டவர் ஏன் ஆடைகள் உரியப்பட்டு அவமானப்படுத்தபட வேண்டும்?
நாம் மறைவில், நான்கு சுவர்களுக்கு மத்தியில். நாம் இரகசியமாக செய்த பாவங்களுக்கு அவர் வெளிப்படையாக ஆடைகள் உரியப்பட்டு அவமானப் படுத்தப்படுகிறார். நாம் யாருக்கும் தெரியாது அல்லது தெரியக்கூடாது என்று இரகசியமாக செய்த பாவங்களுக்கு பரிகாரமாக நம் ஆண்டவர் அவமானப்படுத்தப்படுகிறார். நம் பாவங்களுக்காக, பாவமே செய்யாத கடவுள் பரிகாரம் செய்கிறார். நாம் யாருக்கும் தெரியாது என்று செய்த அனைத்துப் பாவங்களையும் நம் கடவுள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார். அப்போது அவர் மனது எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும். “என்னுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதா ஏன் இப்படி பாவம் செய்து என்னை அவமானமும், அவசங்கையும் படுத்துகிறாய்” என்று வேதனை நெருப்பில் வெந்திருப்பார் அல்லவா?
அவர் ஆடை உரியப்படவில்லை; ஆடை உரிக்கப்பட்டார். அவர் உடம்ப்பில் கசையால் அடிக்கப்பட்டபோது ஏற்பட்ட காயங்கள், அவருக்கு அதன் பின்பு அவருடைய ஆடைகள் அணிவிக்கப்பட்டாலும் மேலும் காயங்களிலிருந்து வந்த இரத்ததால் ஆடைகள் அவருடைய திருக்காயங்களோடு ஒட்டிக்கொண்டு காய்ந்து போயிருந்ததால் இப்போது ஆடைகள் முரட்டுத்தனமாக உரிக்கப்படும்போது மீண்டும் அவருடைய காயங்கள் திறக்கப்பட்டு இரத்தம் வெளிவருகிறது. வலியால் துடிக்கிறார். அவர் ஆடைகள் உரிக்கப்படும்போது வலியை விட அவமானமே அதிக மன வேதனையைத் தருகிறது. கூணி குருகி நிற்கிறார். அப்போது அவமானத்தால் துடித்த இன்னினொரு இருதயம் நம் நேசத்தாயின் இருதயம்.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல நாம் பாவம் செய்தால் பாதிக்கப்படுவது, குத்தப்படுவது இரண்டு இருதயங்கள். இங்கே இரண்டு இருதயங்கள் கூணி குருகி அவமானப்படுகிறது. தாயின் இருதயம் பதருமே, உடனே தன்னுடைய தலை உள் முக்காட்டுத்துணியை உடனடியாக எடுத்து தன்னுடைய புதல்வனின் மானத்தைக் காப்பாற்றுகிறார். மகனுடைய கோலத்தைப்பார்த்து பதை பதைக்கிறார். இப்போது மாதா பேசுகிறார்,
“ என் மகனே, என் மகளே, கற்பு என்பது எப்பேற்பட்ட பொக்கிஷம் தெரியுமா? கற்பு என்ற ஒன்று இருக்கிறதே நிறைய பேருக்கு மறந்து போய்விட்டது. கற்பிற்கு எதிரான சிந்தனைகளும், செயல்களும் எல்லா இடங்களில் மலிந்து காணப்படுகிறது. தவறான பார்வை, சிந்தனை, செயல்களில் கற்பு இல்லை. செயல்களில் ஒழுக்கம் இல்லை, ஆடைகளில் கண்ணியம் இல்லை. பேச்சில் தூய்மை இல்லை. இப்போது ஒழுக்கக் கேடுதான் நாகரீகமாகிப்போனது. நீங்கள் கற்பிற்கு எதிராக செய்யும் ஒவ்வொரு பாவமும் எங்கள் இருதயங்களை ஈட்டியாக வந்து குத்துகிறின்றன. எங்கள் இருதயங்கள் முட்களால் நெருக்கப்படுகிறது. இந்த கல்வாரி வேதனையைப் போல அணலில் இடப்பட்ட புழுவாக எங்கள் இருதயங்கள் துடிக்கின்றன”
உடனடியாக உங்கள் பரிசுத்த கற்பிற்கெதிரான பாவங்களை விட்டொழியுங்கள்; பரிசுத்த ஆடை உங்கள் உள்ளங்களிலும், கண்ணியமான ஆடை உங்கள் உடல்களிலும் அணியப்படட்டும், உங்கள் பாவங்களை விட்டுவிட்டு எங்கள் வேதனைகளிலிருந்து எங்களுக்கு விடுதலைத் தாருங்கள்.
எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !