19/07/2021
நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது ஜனங்கள் நமது வார்த்தைகளை கேட்பதைவிட , நமது நற்கிரியைகளை காண்கிறார்கள் . ஜனங்கள் நமது நற்கிரியைகளைக் கண்டு நம்மைப்போற்றிப் புகழவேண்டும் , நம்மை மகிமைப்படுத்தவேண்டும் என்னும் தீய எண்ணம் நம்மிடத்தில் காணப்படக்கூடாது . ஜனங்கள் நமது நற்கிரியைகளைக் காணும்போது அவர்கள் பரலோகத்திலிருக்கிற நமது பிதாவையே மகிமைப்படுத்தவேண்டும்.
நமது சிந்தனை , செயல்கள் அனைத்திலும் தேவநாமம் மகிமையடைய வேண்டும் என்பதே நமது பிரதான நோக்கமாக இருக்கவேண்டும் . தேவனை மகிமைப்படுத்துவதற்காக நம்மால் முடிந்த எல்லா நற்கிரியைகளையும் நடப்பிக்கவேண்டும் . நமது நற்கிரியைகளைக் காணும்போது அவர்கள் பரலோகத்திலிருக்கிற நமது பிதாவை மகிமைப்படுத்துவார்கள் . நாம் நம்மைத் தாழ்த்தவேண்டும் . கர்த்தரை உயர்த்தவேண்டும் . பரிசுத்தவான்களின் பரிசுத்தமான பிதாவை மகிமைப்படுத்தும் . பரிசுத்தவான்கள் பாவிகளோடு பேசும்போது சுவிசேஷத்தின் வெளிச்சம் பரிசுத்தவான்கள் மூலமாக பாவிகளுடைய ஜீவியத்திற்கு கடந்துவரும் . இருளில் இருக்கும் பாவிகள் இயேசுகிறிஸ்துவின் வெளிச்சத்தைக் காண்பார்கள் . நமது பிரசங்கச்செய்தி நமது ஜீவியத்தின் கிரியைகளோடு ஒத்துப்போகவேண்டும் . நம்முடைய பிரசங்கச் செய்திக்கு ஏற்றவாறு நமது ஜீவியமும் அமைந்திருக்கவேண்டும் . ஊருக்கு உபதேசம் பண்ணிவிட்டு நமக்குள் தாறுமாறான ஜீவியம் இருக்கக்கூடாது . நம்மிடத்திலுள்ள சுவிசேஷத்தின் வெளிச்சம் முன்பாக எப்போதும் பிரகாசமாக ஜொலிக்கவேண்டும் .