27/05/2026
ஜடா ஸ்கடர் அவர்களின் 66வது நினைவுநாள் 24.05.2026 அன்று
மகளிருக்கான முதல் மருத்துவமனை!
ஒரு மருத்துவச்சுடரின் மகத்தான சரிதம்:
அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மிஷனரி மருத்துவர்கள்.
அக்காலத்தில் இந்தியர்களின் அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்தவர்கள். அவர்களோடு 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள். வந்த இரு மாதங்களில் அவள் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார்.
தந்தையுடன் வேலூரில் விடுமுறையைக் கழித்துகொண்டிருந்தாள் அந்த சிறுமி. அச்சமயத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் அவளைப் புரட்டிப் போட்டன.
என்ன சம்பவங்கள் ?
ஒரு நள்ளிரவில் அவரகள் வீட்டுக் கதவைத் தட்டுகின்றான் ஒரு பிராமணன். அவன் கண்கள் டாக்டரம்மாவைத் தேடுகின்றன. ஐடாவின் தகப்பனார் "என்ன" என்கின்றார்? "என் மனைவிக்குப் பிரசவம். டாக்டரம்மாவை அனுப்ப முடியுமா?"
"இல்லை ..அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள. நான் வரட்டுமா ?" என்கின்றார் அவர்.
"இல்லை அய்யா, எங்கள் சமூகத்தில் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டும் . கட்டுப்பாடு அது. என்னால் மீற முடியாது "என கண்களைத் துடைத்துகொண்டே செல்கின்றார்.
மறுநாள் அந்த கர்ப்பிணியின் இறந்த உடலை ஐடாவின் வீட்டின் முன்னால் எடுத்துச் செல்கின்றார்கள். குற்ற உணர்வினால் அத் தந்தை அழ, தன்னையும் அறியாமல் ஐடாவும் அழுகின்றாள்.
இரு நாட்கள் கழித்து ஓர் இஸ்லாமியருக்கு அதே தேவை. ஆனால் அதே கட்டுப்பாடு. டாக்டரம்மா இல்லாததால் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியேறுகி்றார் அந்த இஸ்லாமியக் கணவர்.
மறுநாள் அதே ஊர்வலம்.
மனதால் வெடித்து அழுதாள் ஐடா, 'என்ன தேசமிது? பெண்களைப் படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம் . கொடுமை ! '.
இதற்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.
நிச்சயம் இங்கு மகளிரைப் படிக்க வைக்க முடியாது, நாமே டாக்டராகி இவர்களோடு தங்கிவிட்டால்?
அந்த வைராக்கியம் அன்றே வந்தது, அமெரிக்கா சென்று படித்து டாக்டரனாள், பெரும் வேலைவாய்ப்பு வந்தாலும் அவள் கண்களில் அந்த இரு ஊர்வலங்களும் வந்து அவள் வைராக்கியத்தை அதிகரித்துகொண்டே இருந்தன.
திரும்பி அதே வேலூருக்கு வந்தாள். இனி ஒரு கர்ப்பிணியினை சாக விடமாட்டேன் என்று சொல்லி ஒரு மருத்துவனையைத் தொடங்கினாள்.
இந்தியாவில் மகளிருக்கான முதல் மருத்துமனையாக அதுதான் உதித்தது.
பெண்கள் தயக்கமின்றி அவளிடம் சிகிச்சைக்கு வந்தனர். எந்த மதக் கட்டுப்பாடுகளும் அதற்குத் தடையாக இல்லை.
இந்நாட்டுப் பெண்களைப் படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்து வந்து இப்பெண்களைக் காப்பாற்றுவேன் என சூளுரைத்து அதை செய்தும் காட்டினாள் .
அவள் பெண்ணுரிமை பேசவில்லை, கொடி பிடிக்கவில்லை, புரட்சி செய்யவில்லை மாறாக தன்னால் அந்தக்கால யதார்த்த வாழ்விற்கு எதைச் செய்ய முடியுமோ அதை செய்தாள்
அதற்கு அவள் கொடுத்த விலை அவளின் சொகுசான வாழ்வு.
நிச்சயம் தனி ஆளாகத்தான் போராடினாள், பின்பே பல சேவை மருத்துவர்கள் அவரோடு இணைந்தனர்.
அவள் தனியே ஏற்றிய மெழுகுவர்த்திதான் இன்று மிகப் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது -
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக !
உலகின் மிகத் தரமான மருத்துவமனை என அதற்கு இன்றும் பெயர் !
ஏராளமான மருத்துவ மனைகள் இன்று வந்துவிட்ட போதிலும் , இப்போதும் மிகப் பெரியதும், சேவை மனப்பான்மையோடு மிகத் தரமான சிகிச்சை கொடுப்பதும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையே !
ஐடா யார்? அவருக்கும் இம் மக்களுக்கும் என்ன சம்பந்தம்?
நம் மக்களுக்காக அழுதிருக்கிறார், நம் மக்களின் சாவினைத் தடுக்க டாக்டராகி வந்து இங்கு தன் வாழ்வினை அர்ப்பணித்திருக்கிறார்.
அந்த வணங்கத் தக்க பெண்மணியின் உழைப்பில் உருவான அந்த மருத்துவமனைதான் இன்று 100 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடுகின்றது !
இந்த நல்ல தருணத்தில் ஐடா என்ற அந்த மகத்தான மருத்துவச் சுடருக்கு நாமும் நமது இதய பூர்வமான அஞ்சலிகளைச் செலுத்துவோம்
Source
திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்று சங்கம்