15/04/2025
பஞ்ச ராமர் ஷேத்திரங்கள் :
வென்றிசேர் இலங்கையானை வென்ற மால்வீரன் ஓத நின்ற ராமாயணத்தின்
நிகழ்ந்திடு கதைகள் தம்மில் ஒன்றினைப்படித்தோர் தாமும் உரைத்திடக்கேட்டோர் தாமும்
நன்று இது என்றோர் தாமும் நரகமது எய்திடாரே
இது, தான் இயற்றிய ராமாயணத்தில் கம்பன், காப்புப் படலமாக அறிவித்திருக்கும்
தகவல் பாடல். ராமாயண நிகழ்ச்சிகளைப் படித்தோர், உரைத்தோர், கேட்டோர் யாவரும் நரகம் எய்த மாட்டார்.
அதாவது, இவ்வுலகிலேயே எந்தத் துன்பமுமின்றி நெடிது நாள் வாழ்ந்து சிறப்பெய்துவர், மறுமையிலும் நரகம் செல்லமாட்டார்.
பஞ்சராமர் க்ஷேத்திரங்கள் என்று போற்றப்படும் ஐந்து ராமர்
கோயில்களுக்கு ராம
தரிசனம் செய்வதற்கு ஒரு
வலம் வருவோம்
உலகெங்கும் பிரசித்தி பெற்ற இராமர் ஆலயங்கள் பல இருக்கின்றன. பெரும்பாலான பெருமாள் கோவில்களில் இராமருக்கென்று தனி சந்நிதிகள் இருக்கும். அதிலும் தமிழ்நாட்டில் இராமபிரானுக்கென்று அருமையான பல கோவில்கள் உண்டு.
இதில் கும்பகோணம் இராமஸ்வாமி ஆலயம், தனுஷ்கோடி இராமர் ஆலயம், மதுராந்தகம் ஏரிகாத்த இராமர், புன்னைநல்லூர் இராமர், நாகப்பட்டினம் வனபுருஷோத்தம இராமர், திருஐந்தடி இராமர், திருச்சேறை இராமர், திருதண்டை இராமர், திருவாலங்காடு இராமர், இஞ்சிமேடு இராமர், வெள்ளியங்குடி இராமர், தஞ்சை விஜயகோதண்ட இராமர், செஞ்சி பனப்பாக்கம் தசரத இராமர், திருப்புல்லாணி தர்பசயன இராமர் என்று எத்தனையோ அற்புதமான ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் உண்டு.
இதில் ‘பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்’ என்று போற்றப்படும் இந்த ஐந்து கோவில்கள் மிக மஹிமை வாய்ந்தவை. அவை புகழ் பெற்ற தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் என்ற இந்த இடங்களின் இராமர் கோவில்கள் மிகச் சக்தி
வாய்ந்த ஆலயங்களாகும்.
இவை யாவுமே தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.
அருள்மிகு தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ளது. வேலூர் தேவர் எனும் இராம பக்தர் கனவில் இராமர் கோவில் கட்ட தெய்விக உத்தரவு வர, அதனை நிறைவேற்ற கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். அஸ்திவாரம் சில அடிகள் தோண்டியவுடன் செங்கற்கள் தெரிந்தன. மேலும் ஆழமாகத் தோண்டியதும் பூமியில் சுயம்புவாய் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீராமபிரானின் 5 அடி உயர பஞ்சலோக சிலைகளுடன்
ஒரு கோவிலே புதைந்து கிடப்பதைக் கண்டார்.
பின்பு 1862இல் சிறியதாக ஒரு கோவிலை எழுப்பினார். 1905க்குப் பின்னர் கோவில் விரிவாக்கப் பட்டது. மூலவரே பஞ்சலோக விக்ரகமாய் எழுந்தருளி இருக்கும் தலம் இது. ராமரின் ஐந்தடி உயர பஞ்சலோக சிலாரூபம் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். அவர் திருமேனியில், திரிபங்கம் என்று சொல்லப்படும் மூன்று வளைவுகள், திண்தோள், இடுப்பு மற்றும் முழந்தாள் பகுதிகளில் காணப்படுகின்றன.
கைகளில் விரல்களும் மனிதர்களைப் போலவே விரல்களில் நகங்களும் அமைந்திருக்கின்றன. திருமார்பில் போரினால் ஏற்பட்ட வடுக்கள், தேமல்கள் மனிதர்களுக்கு உள்ளது போலவே காட்சியளிக்கின்றன.
கைகள் மற்றும் கணுக்காலில் பச்சை நிற நரம்புகளும் விரலில் உள்ள ரேகைகளும் தெளிவாகத் தெரிவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவருடைய திருமேனியின் முழங்கால்கள், மனிதர்களின் முழந்தாள்களைப் போலவே உருண்டு திரண்டு, கால்களில் பச்சை நரம்போடுவது தெரிகின்றன. கால்களில் தாயார் கௌசல்யை கட்டிய ரக்ஷை மற்றும் மச்சங்கள், தேமல்கள் வடுக்கள் காட்சியளிக்கின்றன.
இதென்ன இப்படியொரு அமைப்பு என மூச்சே நின்று விடும் போலுள்ளது. பேசினால் பேசுவாரோ என்று கூடத் தோன்றுகிறது. மற்ற திருத்தலங்களில்
ஸ்ரீராமனின் வலது கையில் சாதாரணமாக அர்த்த சந்திரபாணம் என்ற பிறைநிலா வடிவிலான பாணம் தான் இருக்கும். ஆனால் இங்கு இங்கு ராமசரம் எனப்படும் அம்புடன் காட்சி தருகிறார். ராமசரம் எனும் பாணம் ஏவப்பட்ட பிறகு அழித்து விட்டு மீண்டும் ராமரிடமே திரும்பும் விசித்திரமான தன்மை உடையது.
ஸ்ரீராமன், இந்த ராம சரத்தை காகாசுரன், வாலி மற்றும் இராவண வதத்திற்காக பிரயோகித்தார். கம்பீரமான இந்தத் திருமேனிக்கு ‘ஸ்ரீ வீர கோதண்டராமர்’ என்று பெயர்.
சீதை அன்பும், கனிவும், இனிமையும் பொலிய
பேரழகு பிராட்டியாக சேவை சாதிக்கிறாள். இளையாழ்வார் லட்சுமணர் கம்பீரத்தோடு சேர்ந்த பணிவோடு அண்ணலுக்கு அருமைச் சகோதரனாக நின்றிருக்கிறார்.
எல்லாவற்றையும். தாண்டி ராமதாசனான அனுமன் தன்னை சிறியோனாக நினைத்து மிக பவ்யமாக வாய் பொத்தி, விநயமாக தலை தாழ்த்தி நிற்கும் பாங்கு வேறெங்கும் காண முடியாது. கருவறையே ஒரு ராஜதர்பார் போன்று விளங்குகிறது.
அர்த்த சந்திர பாணத்துடன் காட்சியளிக்கும் ராம சரம் என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும்,
தம்பி இலக்குவனுடனும்
நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் "தில்லை சித்ரகூடம்" என இத்தலம் வழங்கப்படுகிறது. இவ்வாலயம் உள்ள இடமே தண்டகாரண்யம்.
ஸ்ரீராமர் ராவணனை வென்ற பின் சேதுக்கரை வழியே வந்த போது, இவ்வூரில் தங்கிச் சென்றதாக தலபுராணம் கூறுகிறது.
இவ்வாலயத்தில் வீர கோதண்ட ராமர் சன்னிதி மட்டுமே உள்ளது.
இங்கு மூலவர் கிடையாது. நான்கடி உயரமுள்ள பஞ்சலோக உற்சவ மூர்த்தியே பிரதான மூர்த்தி. வலக்கையில் அம்பும், இடக்கையில் வில்லுமாகக் கம்பீரமாகக் காட்சி கொடுக்கும், வீரகோதண்டராமசுவாமி. ராவணனை வென்று சீதையை மீட்டபின் அயோத்தி செல்லும் வழியில் பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கிச் சென்றதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது .
இராமனை ஜானகியோடு சேர்த்து வைத்த அனுமன் நம்முடைய பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைக்கிறார்.
திருமணம் கைகூடாதவர்களும், புத்திரபாக்யம் அற்றவர்களும் இந்த மாருதியை பிரார்த்தனை செய்ய மனம் போல் மாங்கல்யம் அமையும்..
இரட்டைக் கொம்புடைய தேங்காய் இங்கு சிறப்புடையது, கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் சன்னிதிக்கு எதிரே காட்சியளிக்கிறார். வடக்கில் சிவன் கோயில் உள்ளது.
கிழக்கு நோக்கி காட்சி தரும் ராமனின் முன் மண்டபத்தில் நாம் நின்றால் இருவரையும் ஒரு சேர தரிசிக்கலாம். சிவன் கோவிலில் நடராஜர் சன்னதியும் உண்டு. ஆதலின் இந்த தலம் ஆதிதில்லை என்றும் அழைக்கப்படுகிறது
இந்த ஆலயத்தின் பின்புறம் கோவில்குளம் இராம தீர்த்தமும், தெற்கில் சீதா தீர்த்தமும், வடக்கில் அனுமார் தீர்த்தமும் உள்ளன.
இந்தத் தீர்த்தங்களில் தை,
ஆடி அமாவாசைகளில் பெருந்திரளாக பக்தர்கள்
புனித நீராடுகின்றனர்.
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். பகை விலக, புத்திர தோஷம் நீங்க தில்லைவிளாகம் வீரகோதண்ட ராமரைத் தரிசிக்கலாம்.
இந்தக் கோவிலில் இராம நவமி, ஹனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை, நவராத்திரி வைகுண்ட ஏகாதசி, தை, ஆடி அமாவாசை திருவிழாக்கள் நடைபெறும்.
ஜெய் ஶ்ரீ ராம்!!!