07/02/2026
பரிசுத்த ஆவியானவர் நமக்கு உற்ற துணையாளர்
யோவான் 14:15,16
15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
16. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
விளக்கவுரை:
தேற்றரவாளர் என்றால், நமக்காகப் பரிந்து பேசுபவர் என்று பொருள். அதாவது, நமக்காக வாதாடுகின்ற ஒரு வழக்கறிஞர் எனவும் பொருள் கொள்ளலாம். எப்பொழுதும் குற்றம் சாட்டுகின்ற சாத்தானுக்கு எதிராக வாதிடுகின்றவர். இதைத்தான் இயேசுகிறிஸ்து உலகத்தில் இருந்தபொழுது செய்து வந்தார். நமக்காக ஒரு வழக்கறிஞர் போலச் செயல்பட்டார். அவர் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற பின், நமக்காக மற்றொரு நிலையான தேற்றரவாளரை அல்லது வழக்கறிஞரை அனுப்பினார்.
அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான். (வெளிப்படுத்தின விசேஷம் 12:10)
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். (1 யோவான் 2:1)
யோவான் 17:12
நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
விளக்கவுரை:
கடவுளுடைய ஒரு உன்னதமான கொடை, “ஒரு மனிதன் தன் பாவத்தை விட்டு விட்டு, உண்மையாக மனம் திரும்புவானேயாகில், பரிசுத்த ஆவியானவர் அவனுக்காக பிதாவினிடத்திலே வாதாடி (பரிந்து பேசி), அவனுடைய பாவங்களை முற்றிலுமாக அற்றுப்போகச் செய்கின்றார்.”
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். (அப்போஸ்தலர் 2:38)
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். (லூக்கா 11:13)
கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. ( 2 கொரிந்தியர் 3:17)
யோவான் 14:17
17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும், அறியாமலும், இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
விளக்கவுரை:
சத்தியத்தை கடைபிடிப்பவர்கள் மட்டுமே அவரை அறியமுடியும். அவர்கள் அனைவரும் நவமான பாசையில் பேசுவார்கள். நவபாசை கடவுளுடைய முக்கியமான ஒரு அடையாளம் அல்லது முத்திரை. நவபாசை பேசாத ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் எல்லாம் பொய்யர்கள். அவர்களெல்லாம் வெள்ளாடுகள்.
யோவான் 14:26,18,19
26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளரே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் .
18. நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்.
19. இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்கள் பிழைப்பீர்கள்.
விளக்கவுரை:
இயேசுகிறிஸ்து மரித்தோரிடத்திலிருந்து உயிர்த்தெழுந்தது போல், நீங்களும் உயிர்த்தெழுவீர்கள்.
யோவான் 14:20
20. நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். (1 கொரிந்தியர் 6:19,20)
விளக்கவுரை:
பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு கிறிஸ்தவன், அவருக்கு கீழ்ப்படிய வேண்டும். அப்பொழுது தான் எல்லாவற்றையும் கற்றுத்தருவார். அதேநேரத்தில், விசுவாசிகளுடைய செயல்கள் மேய்ப்பர்களுக்கு கோபத்தையும், எரிச்சலையும் கொடுக்கக்கூடியதாக இருக்கக்கூடாது. சில நேரங்களில், மேய்ப்பர்கள் சபிக்கும் அளவிற்கு சில விசுவாசிகள் நடப்பதை பார்க்கின்றேன். சில சிறுவர்கள், எலிசாவை கேலி பண்ணியதால், கடவுளுடைய நாமத்தில் அவர்களைச் சபித்தார். இது இருவருக்குமே நல்லது அல்ல. பரிசுத்த ஆவியை பெற்ற ஒரு கிறிஸ்தவன், இயேசுவைப் போல, பரிசுத்த ஆவியைப் போல பரிந்து பேசுபவனாக இருக்க வேண்டும்.
ஆகவே, ஒரு விசுவாசி, உண்மையான மேய்ப்பனை கோபப்படுத்தவோ அல்லது தன்னை சபிக்கும் அளவிற்க்கோ நடந்து கொள்ளக்கூடாது. மேலும், சபைக்குள் அரசியல் செய்யக்கூடாது. (சபைக்குள் தவறான குழுக்களை கொண்டு வருதல், தன்னுடைய ஜாதி, தன்னுடைய இனம், தன்னுடைய பகுதியை (ஊர், மாவட்டம், மாநிலம்) சேர்ந்தவன், சொந்தக்காரர்கள், நன்றாக தெரிந்தவர்கள், தவறான காம நடவடிக்கை, போன்றவைகள்.) கடவுளின் கோபாக்கினை அவர்கள் மேல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் சபையை விட்டு போவது, அவர்களுக்கு நல்லது.
அவன் (எலிசா) அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழிநடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, என்று சொல்லி நிந்தித்தார்கள்.
அப்பொழுது, அவன் (எலிசா) திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது. (2 இராஜாக்கள் 2:23,24)
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.
மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,
தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். (யாக்கோபு 5:16-20)
ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். (ரோமர் 8:27)
விளக்கவுரை:
ஒருவன் கிறிஸ்துவுக்குள் என்ன நோக்கத்திற்காக இருக்கிறான் என்பதை, அவனுடைய உள்மனதின் எண்ணங்களை கொண்டு கடவுள் அறிவார். அவன், தன்னை மகிமைப்படுத்தவா அல்லது கடவுளை மகிமைப்படுத்தவா அல்லது பணத்திற்க்காகவா அல்லது உலக காரியங்களுக்காகவா – இவை போன்ற அவனுடைய எண்ணத்தின் படியே, கடவுள் அவனுக்குச் செய்கின்றார்.
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். (கொலோசெயர் 3:16,17)