தமிழும் சமயமும்.....

தமிழும் சமயமும்..... வான் முகில் வழாது பெய்க! மலி வளம சுரக்க! மன்னன் கோன்முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க

===================================நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க
===================================
பலவந்தமான மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மசிந்து கொடாது சைவ சமயத்தினையே தொடர் ந்து அனுட்டித்து வந்த பெருமைக்குரியவர்கள் பலர். சைவசமயத்துக்கு ஒரு சோதனைக்

காலமாக இருந்த இக்கட்டான காலகட்டத்திலே அறநெறிக் காவலர் ஆறுமுக நாவலர் அவர்கள் தமது சொந்த மதமான சைவ சமயத்தை தமிழ் மக்கள் புறக்கணித்து வருவதைக் கண்டு வேதனையுற்ற ஆறுமுகநாவலர் சைவத்தினைக் காக்கும் பணியில் ஈடுபட்டார்.
தமிழ் மொழிக்குப் புத்துணர்வு தந்து, பாமரமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இனிய கவிதைகளை எழுதியவர் மகாகவி பாரதியார். பழைய தமிழை புதிய வடிவில் வடித்து தந்தவர். ஒருபுறம் புதுமையை விரும்பும் மனம், மறுபுறம் அதன் விளைவைக் கண்டு அஞ்சுகிறது. பழம்பொருட்களாக மீண்டும் மீண்டும் பரிந்து செல்கிறது. இவ்வாறெல்லம் இருப்பினும் தன்னிடத்தில் நிலையான அன்பு கொண்ட ஒன்றாக மனத்தை விரும்பி வேண்டுகிறார் பாரதியார். அதனை மேம்படுத்தி, என்றும் அதனிடம் இன்பமே பெற விழைவதாகப் பாடுகிறார் அதன் விழிப்படாமல் தன் விழிப்பட்ட சிவம் என்னும் பொருளைத் தினமும் போற்றி மனத்திற்கு இன்பம் ஓங்கிடச் செய்வதாகக் கூறுகிறார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற கோட்பாட்டுக்கமைய வாழ்ந்து வந்த பெரியோர் பலர். இங்கு நான் குறிப்பிட்டவர் வெகு சிலரே.
சைவம் தமிழுக்கு செய்த தொண்டு அளவிட முடியாதது. கவிச்சுவையில் சைவர்களான ஔவையும், காளமேகமும் ( பாடுக! என்றதும் மழை பொழிவதைப்போல் பாடும் திறமை பெற்றதால் இவர் ‘காளமேகம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.)செய்த பணிகள் இணையில்லாதவை. பூரணமான அன்புமிகுந்த பக்தி காலத்தையே மாற்றி இறையருளை ஊட்டும் என்பதை அபிராமிப்பட்டர் மற்றும் மார்க்கண்டேயர் கதைகளிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம். தமிழின் இனிமையை மாணிக்கவாசகர், சேக்கிழார் போன்ற சைவப் புலவர்கள் தங்கள் பாடல்களில் உணர்த்தியிருக்கின்றனர். இன்று நமக்கு கிடைத்திருக்கும் தமிழ் நூல்களில் மிகவும் தொன்மையான நூலான தொல்காப்பியத்தில் தமிழர்களால் வணங்கப்பட்ட தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.தொல்காப்பியம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. அதில் குறிஞ்சி நில மக்களின் தலையாய தொழில் வேட்டையாடுவது. அவர்களின் தெய்வமாகவே முருகன் என்பவர் குறிப்பிடப் பட்டிருக்கிறார். சைவமும் தமிழும் தழைத்தோங்க வேண்டுமென்று விரும்பினர் ஆன்றோர்;

சைவம் என்பது ஜாதி மத இன சார்பற்றது என்பதை முதலில் நாம் அனைவரும் உணரவேண்டும்; பிற உயிர்களைக்கொன்று நம் உடல் வளர்க்க வேண்டிய நிலையில் நாம் இல்லை!! இதை எத்தனையோ சித்தர்களும், புத்தர்களும் காலம் காலமாய் கூறிவிட்டார்கள்!! தமிழர்களின் சமய பெருமைகள் அனைவரும் அறிய வேண்டும். நான் ஆன்மீகவாதி தான் என்றாலும், கடவுளின் பெயரில் நடக்கும் கூத்துகளை ரசிக்கும் மூடன் அல்ல. "அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்" என்ற அறநெறியை போதிக்கும் திருநெறியில் ஒழுக விரும்புபவன். இந்து மதத்தின் மிகப்பெரிய நோய் போலி சாமியார்கள் ......தான் இந்த நோயை முதலில் சுகப்படுத்த வேண்டியது இந்துக்களின் முக்கிய கடமை.

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வேனே.
---- திருமந்திரம்

எல்லாம் வல்ல பரம்பொருளின் அருட்பெருங்கருணை ஆலயங்கள் தோறும் விளங்கித் தோன்றுகின்றன. அதனால் நம் முன்னோர் " ஆலயம் தொழுவது சாலமும் நன்று " என்று கூறினர். இவ்வாலயங்களைப் பாடல் பெற்ற திருத்தலம் என்றும் வைப்புத்தலம் என்றும் கூறுவர். தேவாரங்கள் பாடப்பட்டவை பாடல் பெற்ற திருத்தலம் என்றும் மற்றவை வைப்புத்தலம் என்றும் கூறுவர். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகாகத் திகழும் தமிழகம், மணங்கமழும் திருக்கோயில்களின் நந்தவனம். நெறிநிலை தவறாது வாழ்ந்த சங்க காலத்தைப் பறைசாற்றும் பழந்தமிழகத்தில் திருக்கோயில்கள் நிறைந்திருந்தன. இதனை இளங்கோவடிகள் அழகாகச் சொல்கிறார்.

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
---- இளங்கோ அடிகள்

அன்பும் சிவமும் ஒன்றாதலினால் இறைவன் பின் செலுத்தும் மாசற்ற அன்பே, பக்தி வழிபாடே பக்திக்கு வித்தாகிறது. வழிபாடு இருவகையானது ஒன்று அக வழிபாடு, மற்றொன்று புற வழிபாடு. இறைவனைத் தன்னுள்ளே கண்டு பூசனைகள் இயற்றி வழிபடுவது அக வழிபாடு. "தலங்கள் தோறும் சென்று அவ்விடையமர்ந்த
தம்பிரான் திருதளினை வணங்கி"
வலங் கொளும்படி என்னையும் கூட
வா என் கிறவனை வாழி என் நெஞ்சே "
---- இராமலிங்க அடிகளார்

இராமலிங்க அடிகளார், நெஞ்சே ! இடப
வாகனத்தில் மேவும் சிவபெருமான் கோயில் கொண்டுள்ள திருத்தலங்கள் தோறும் சென்று அவன் திருத்தாளை வணங்குக, திருக்கோயிலை வலம் வருக, என்னையும் வா என அழைக்கும் நன்னெறியுடைய தன்மையாயினை, நீ, வாழி" என்று கூறுகிறார். " கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்ற முதுமொழிக்கேற்ப ஆலயங்களில் வழிபடுவது நம் மக்களிடையே தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். பாரத நாட்டில் தானே தோன்றிய " ஸ்வயம் வியக்த " தலங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்பெற்ற தலங்கள் பல உண்டு. ஆதிசங்கரர் முதலிய பெரியோர்கள் கால் நடையாகவே பாரத நாடு முழுதும் சென்று இடையிலுள்ள தலங்களையெல்லம் வழிபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் தலப்புராணங்கள் சிலவற்றிற்கே உள்ளன. தலப்புராணங்களை அறிந்துகொண்டு தரிசித்தால் பல செய்திகளை அறியலாம், இறைவன் அருளையும் முழுமையாகப் பெரலாம். தமிழும் சைவமும் இரு கண்கள் இந்த இரண்டு மட்டுமே இரட்டை குழல் துப்பாக்கி, சமயத்தை விடுத்து வெறும் தமிழை மட்டுமே பேசுவதால் எந்த பயனும் இல்லை, வாழ்க நம் சைவ சித்தாந்த பண்பாடு! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!!!!!! வான் முகில் வழாது பெய்க! மலி வளம சுரக்க! மன்னன் கோன்முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க! நான்மறை அறங்கள் ஒங்க! நற்றவம், வேள்வி மல்க! மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகெலாம்!
எங்கும் நிறைந்திருக்கும் இறைவன், நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிலைக் கலன்களாக விளங்குவதே ஆலயங்களாகும், இங்கு பரம்பொருளாகிய இறைவன், உலகத்திலுள்ள பல உயிர்களுக்கும் துன்பம் நீங்கி, இன்பம் இறங்கி, பல தலங்களில் உருவத்திருமேனி கொன்டு எழுந்தருளி தம்மை மெய்யுணர்வுடன் பணிந்தோருக்கு அருள் செய்து காக்கின்றனர். " இருஞ்சுருபிக் கெங்கும் உருக்காண ஒண்ணாத
பால் முலைப்பால் விம்மி ஒழுகுவதுபோல
வெளிப்பட்டருள்வன் அன்பர்க்கே "
------ சிவஞானசித்தியார்

" எங்கும் சிவனிருப்பன் ஆனாலும் ஏசற்ற
சங்கமத்தும் சற்குருவின் தன்னிடத்தும் - லிங்கத்தும்
ஆவினுடம் பெல்லாமும் அவதரித்து நிற்கினும்பால்
பாவு முலைக்கண் மிகுதிப்பார். "
------ சிவஞானபிரகாச வெண்பா

பசுவின் உடல் முழுவதும் பால் நிறைந்திருந்த போதிலும் மடியின் மூலமாவே பால் வெளிப்படுவது போண்றும், சூரியன் எங்கும் பரவி இருந்த போதும் பளிங்குக் கல்லின் மூலமே கிரணங்கள் வெளிபடுவது போண்றும், நிலத்துக்கடியில் நீர் நிறைந்திருந்த போதும் தோண்டிய இடத்தில் நீர் வெளிப்படுவது போண்றும்,இறைவன் எங்கும் வியாபித்திருந்த போதிலும் ஆலயங்களில் உள்ள மூர்திஅளின் மூலமாகவே அன்பர்க்கு அருள்செய்வான்.

பரம்பொருளாகிய இறைவனின் அருளும் ஆசியும் எலோர்க்கும் கிடைக்க வேண்டும் எனும் அவாவின் உந்துதலால் என்னால் இயன்ற வரை, இன் சிற்றறிவுக்கு எட்டியவரையில், எம்பெருமர்களின் பெருமைகள் மற்றும் தமிழ் மொழி சார்ந்த விடயங்களைப் பகிர்ந்துகொள்ள இயம்புகிறேன். குறை ஏதேனும் இருப்பின் பொறுத்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!
வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!


வாழ்க சைவம், வளர்க அதன் தொண்டு, சைவம் உள்ள வரை நம் தமிழும் தழைத்தோங்கும்.

வாழ்க தமிழ் வாழ்க சைவம்.

ஞானத்தாயாகிய தமிழ்க் கிழவியும், ஞான பண்டிதனாகிய தமிழ்க் குழவியும் ஒரு சமயம் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது கிழவியின் திரு...
28/06/2020

ஞானத்தாயாகிய தமிழ்க் கிழவியும், ஞான பண்டிதனாகிய தமிழ்க் குழவியும் ஒரு சமயம் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது கிழவியின் திருவாக்கால் அமுதத் தமிழை கேட்டு மகிழ விரும்பிய குழவி,

தாயே! உலகில் பெரியது எது ? என்று வினவினார்

" பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது; " என்றார் ஔவைப் பிராட்டியார்.

முருகப் பெருமான் அதனைக் கேட்டு, " ஓ! புவனந்தான் பெரியதோ? " என்று கேட்டார்.

" புவனமோ நான்முகன் படைப்பு " என்று தமிழ்க் கிழவி கூறினார்.

" அப்படியானால் நான்முகந்தான் பெரியவனோ? " என்று வினவினார் அறுமுகன்.

" இல்லை, நான்முகனே கரியமால் உந்தியில் வந்தோன் " என்று தமிழ்ப் பாட்டி கூறினார்.

" ஓ! அப்படியானால் கரியமால் பெரியவரோ? " என்று கேட்டான் மால்மருகன்.

" இல்லை, இல்லை, கரியமாலோ அலைகடல் துயின்றோன் " என்று கூறினார் ஔவைப்பாட்டி

" அலைகடல் பெரியது என்று கூறுகின்றாயோ ? " என்று கேட்டார் வேலாயுதனார்.

" இல்லை, கடலையும் குறுமுனி உண்டாரே " என்று பாட்டியார் கூறியதும் " குறுமுனி பெரியவரோ?" என்று கேட்டார் குன்றுக்குரு.

" இல்லை, குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன் " என்றார் ஔவையார்.

" கலசம் பெரியதோ ? "

" கலசம் புவியிற் சிறுமன் "

" புவி பெரியதோ ? "

" புவியும் உலகைத் தாங்கும் அரவினுக்கு ஒரு தலை பாரம்தானே! "

" அப்படியா! அரவமாகிய ஆதிசேஷன் பெரியவனோ ? "

" அதுவும் இல்லை, அந்த அரவம் உமையவள் சிறு விரல் மோதிரமே ! "

" பின்னே பெரியவர் யார் ? உமையவள்தான் பெரியவரோ ? " என்று வினவினான் சக்திவடிவேலன்.

" அப்படியும் இல்லை, ஏனெனில் உமை இறைவன் பக்கத்து ஒடுக்கம்".

" அவ்வாறாயின், இறைவர்தான் பெரியவரோ ? என்று கேட்டார் இளம்பூரணர்.

" இல்லை இல்லை, இறைவரோ, தொண்டருக்குள் ஒடுக்கம், தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே! " என்றார் தமிழ்க் கிழவி.

இச்சம்பவம் அடியார்களின் பெருமையை நமக்கு உணர்த்துவது போல் அமைந்துள்ளது சிறப்பு. நவவித பக்திகளில் ( #ச்ரவணம், #கீர்த்தனம், #ஸ்மரணம், #பாதசேவனம், #அர்ச்சனம், #வந்தனம், #தாஸ்யம், #சக்யம், #ஆத்மநிவேதனம் ) அனைத்துவித பக்தியையும் நாம் நாயன்மார்க்ளிடமும் ஆழ்வார்களிடமும் காணலாம்.

இறைவனின் கல்யாண குணங்கள், மகிமை, பெருமை ஆகியவைகளை கேட்பது, ரசிப்பது, பாடுவது, சொல்வது, மனதினில் நிறுத்துவது, அவனுக்கு கைங்கரியம் செய்வது, பூசை செய்வது, அவனையே ஒரே துணையாகக் கோள்வது என பக்தி பலவிதம் உண்டு. ஆனால் இவை அனைத்தையும் விட இறைவனுக்கு இன்பம் சேர்ப்பது யாதெனில் அவன் அடியார் புகழ்பாடுவது. சேயின் புகழ் கேட்டு மகிழும் தாயுமானவன் எம்பெருமான்.

உலகிலே எல்லாவற்றைக் காட்டிலும் பெரியது அடியார் பெருமையே!

#ஔவையார் #தமிழ்க்குழவி #தமிழ்க்கிழவி #நாயன்மார் #ஆழ்வார் #நவவிதபக்தி

திருவுறைமார்பன் ஸ்ரீவத்சம் :-சைவமோ அல்லது வைணமவமோ, இவ்விரு மார்க்கத்தில் எதுவாயினும் அவற்றுள் மூலமூர்தியான சிவனுக்கும் த...
28/06/2020

திருவுறைமார்பன் ஸ்ரீவத்சம் :-
சைவமோ அல்லது வைணமவமோ, இவ்விரு மார்க்கத்தில் எதுவாயினும் அவற்றுள் மூலமூர்தியான சிவனுக்கும் திருமாலுக்கும் எத்துனை மரியாதை கொடுக்கப்பட்டுள்ளதோ அத்துனை பெருமையும் மரியாதையும் அவர்களது துனைவியர் எனப் போற்றப்படும் அன்னை பார்வதிக்கும், தாய் லக்ஷுமிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
சைவத்தில் ஈசுவரனார் தம் தேவியான பார்வதிக்குத் தம் உடலில் சரிபாதியைக் கொடுத்து மாதொருபாகனாய் சிவகாமியுடன் கருணாமூர்தியாக அருள்பாலிக்கிறார். இது, சைவம் பெண்மையைப் போற்றும் பாங்கு. மங்களமூர்த்தியான சிவன் தாயாருடன் சேர்ந்து சர்வமங்கள மூர்தியாக பக்தர்களின் கண்களுக்கு பாக்கியம் அருள்கிறார்.
அவ்வாறே வைணவத்தில் எம்பெருமாள் பகவான் ஸ்ரீவிஷ்னு தம் மார்பில் திருமகள் உறையும்பொருட்டு அருள்செய்து தமது துணைவியாரை மார்பில் சுமக்கிறார். திருமாலின் மார்பில் திருமகள் உறைவதனால் ஸ்ரீவிஷ்ணு திருவுறைமார்பன் என்றும் ஸ்ரீ ( லக்ஷ்மி ) வாசம் செய்வதால் ஸ்ரீனிவாசன் என்றும் அழைக்கப்படுகிறார்.
இதனை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் திருமாலின் திருவுருவங்களில் இறைவனின் திருமார்பின் வலதுபுறத்தில் திருமகள் வாசம் புரிவதுபோல் ஒரு குறியீட்டுடன் படைக்கப்படுகின்றன. திருமாலை வணங்குபவர்கள் பகவானின் திருமார்பின் வலதுபுறத்தில் வாசம்செய்யும் திருமகளையும் சேர்ந்து வணங்கும் பாக்கியம் பெறுவர். மங்களமூர்தியாக விளங்கும் பெருமாளை திருமகளுடன் சேர்ந்து வனங்கும்போது லக்ஷிகடாக்ஷமும் நமக்குக் கிடைப்பது பெரும்பேறு.
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ
ஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹ
#திருவுறைமார்பன் #ஸ்ரீவத்சம் #மாதொருபாகன்

இவர்,வேதத்தை வகுத்து பிரச்சாரம் செய்தவர், ஆதலால் ஒருமுக பிரம்மா.உலகைக் கல்வியால் ரஷித்தவர், ஆதலால் இரு கைகள் கொண்ட விஷ்ண...
28/06/2020

இவர்,
வேதத்தை வகுத்து பிரச்சாரம் செய்தவர், ஆதலால் ஒருமுக பிரம்மா.
உலகைக் கல்வியால் ரஷித்தவர், ஆதலால் இரு கைகள் கொண்ட விஷ்ணு.
சர்வ வித்தைகளையும் வெளியிட்டு முக்தியளிப்பவர், ஆதலால் மூன்றாவது கன் இல்லாத சிவன்.
இவரது சரிதத்தை நன்கு கவனித்தால் ஒப்பற்ற பெருமையால் மும்மூர்த்திகளைப் போன்றவர் என நன்றாகத் தெளிவாகும்.
இவர்,
வசிஷ்டரின் கொள்ளுப்பேரன், சக்தியின் பேரர், பராசரரின் புத்திரர், சுகரின் தந்தை.
விஷ்ணுவின் அவதாரம் இவர்.
சர்வம் அறிந்தவர். சர்வ சக்தி வாய்ந்தவர். சர்வ உபகாரி.
இவர்,
துவாபர யுகத்தின் முடிவில் சத்யவதி - பராசர் மூலமாக ஸ்ரீமன் நாரயனனின் அம்சமாக தோன்றியவர். வித்வ பரம்பரையில் தோன்றி வித்யயைப் பிரசாரம் செய்தவர்.
இவரே வேதநிதி
இவரே வித்யைக் கடல்.
இவரே வசிஷ்டர் மரபில் தோன்றிய வேதவியாசராவார்.
இவரே அகிலத்தை வளம்பெற செய்த வியாச மாமுனி
வ்யாஸாய விஷ்ணு ரூபாய!
வ்யாஸ ரூபாய விஷ்ணவே!!
பகவான் ஸ்ரீ விஷ்ணுவே வியாசராக அவதரித்தார். ஆசாரியாள் வியாசர் சாக்ஷாத் நாராயணனே என்று அர்த்தம், ‘முனிவர்களில் நான் வியாசர்’ என்று கிருஷ்ணரே கீதையில் சொல்லியிருக்கிறார்.
இத்தகைய மஹாமுனியை நாம் ஒவ்வொருவனும் ஸ்மரித்து அவர் அருள் பெறவேண்டுகிறோம்.
#பராசர் #வியாசர்

காலபாசத் திருப்பதிகம்சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனை காலால் உதைத்து, பக்தனைக் காப்பாற்றிய நிகழ்ச்சி திரு...
28/06/2020

காலபாசத் திருப்பதிகம்
சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனை காலால் உதைத்து, பக்தனைக் காப்பாற்றிய நிகழ்ச்சி திருக்கடவூரில் நடைபெற்றது. அதுபோன்று, பல தலங்களில், சிவபெருமான் தனது அடியார்களை காத்த நிகழ்ச்சிகள் பல தலபுராணங்களில் சொல்லப் படுகின்றன. அத்தகைய நிகழ்ச்சிகளை கருத்தில் கொண்டு அப்பர் பிரான் காலதூதர்களை நோக்கி பாடிய பதிகம் என்பதால் காலபாசத் திருப்பதிகம் ( அ ) காலபாசக் குறுந்தொகை என்ற பெயர் பெற்றது. இதன் முதல் பாடல்
கண்டு கொள்ள அரியானைக் கனிவித்துப்
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்
கொண்ட தொண்டரை துன்னிலும் சூழலே
#காலபாச #காலபாசத்திருப்பதிகம் #காலபாசக்குறுந்தொகை

சிவனைடியார்கள் அருகில் செல்ல வேண்டாம் !1. திருவெண்காட்டில் வாழ்ந்து வந்த சுவேதகேது என்ற சிறுவனின் ஆயுள் எட்டு வருடங்கள் ...
28/06/2020

சிவனைடியார்கள் அருகில் செல்ல வேண்டாம் !
1. திருவெண்காட்டில் வாழ்ந்து வந்த சுவேதகேது என்ற சிறுவனின் ஆயுள் எட்டு வருடங்கள் தான் என்று விதிக்கப் பட்டிருந்தது. இறைவனிடம் அளவிலா பக்தி கொண்டு இருந்த அந்த சிறுவனின் உயிரைப் பறிப்பதற்காக வந்த யமனை, தனது பக்தனை அவமரியாதை செய்ததற்காக சிவபிரான் தண்டித்து, சிறுவனுக்கு நீண்ட ஆயுள் கொடுத்தார். சுவேதகேதுவின் பக்தியை மெச்சி அவனுக்கு தனது ஏழு நடனக் கோலங்களின் காட்சி அளித்தார்
2. சுசரிதன் எனும் சிறுவன் சிறு வயதிலேயே தனது தாய் தந்தையரை இழந்து விட்டான். அவனது தாய் இறக்கும் தருவாயில் மகனது தொடையில் தலை வைத்து படுத்துக் கொண்டு இருந்தபோது, மகனை நோக்கி இனிமேல் சிவபிரான் தான் அவனுக்கு தாயும் தந்தையும் என்றும் சிவத்தலங்கள் சென்று தரிசித்து வருமாறும் கூறி இறந்துவிட்டார். தாயின் சொற்படி சிவத் தலங்களை தரிசித்து வந்த மைந்தன் ஒரு நாள் பழனம் வந்தடைந்து இந்த தலத்திலே இரவு தங்கிவிட்டான். நடு இரவில் யாரோ கதவு தட்டும் ஓசை கேட்கவே சிறுவன் எழுந்து கதவைத் திறந்து பார்த்தான்.
அவன் எதிரே தோன்றிய காலதேவன், அவனது ஆயுட்காலம் இன்னும் ஐந்து நாட்களில் முடிவு அடையப் போவதாகவும், அதற்குத் தயாராக இருக்குமாறும் சொல்லி விட்டு மறைந்து விட்டான். மரணத்தைப் பற்றி கவலைப் படாத சிறுவன், தன்னால் தாய் கூறியவாறு சிவத் தலங்கள் செல்ல முடியாமல் போய் விடுமே என்று வருந்தினான். இறைவன் சிறுவனை திருவையாறு செல்லுமாறும் தாம் அங்கே தோன்றி, தக்க சமயத்தில் அவனை காப்பதாகவும் சொல்லி அனுப்பினார். இறைவன் கூறியபடி திருவையாறு சென்ற சிறுவன் தெற்கு கோபுர வாயிலில் அமர்ந்து சிவநாமத்தையே சொல்லிக் கொண்டு இருந்தான். முன்னமே கூறியபடி, ஐந்தாவது நாள் இரவு இயமன் சிறுவனின் அருகில் வரவே, சிவபிரான் தோன்றி மார்க்கண்டேயனை காப்பாற்றியது போல யமனை காலினால் உதைத்து சுசரிதன் பல்லாண்டு காலம் வாழும் வகை அருளினார்.
இவ்விரு நிகழ்வுகளும் அப்பர் பிரான் தாம் பாடிய பதிகத்தில் கூறும் நிகழ்வுகள். இவ்விரு நிகழ்வுகளும், தங்களது கையினில் பாசத்தை வைத்துக் கொண்டு, உயிர்களை பறிப்பதையே தொழிலாகக் கொண்ட காலதூதர்களை நோக்கி பாடிய பதிகம் ஆதலால் இது காலபாசத் திருப்பதிகம் ( எ ) காலபாச குறுந்தொகை என்ரு பெயர் பெற்றது.
இந்த பதிகத்தினை பாராயணம் செய்வது அனைத்து விதமான சங்கடங்களையும் தீர்க்க வல்லது என்று பெரியோர்கள் கருதுகின்றனர்.
#காலபாசகுறுந்தொகை #காலபாசத்திருப்பதிகம்

பைத்தியக்காரர்களுக்கெல்லாம் தலைவன் !அப்பைய தீக்ஷிதர் என்கிற பெரிய சிவபக்தர் சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு விரிஞ்ச...
28/06/2020

பைத்தியக்காரர்களுக்கெல்லாம் தலைவன் !
அப்பைய தீக்ஷிதர் என்கிற பெரிய சிவபக்தர் சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு விரிஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் இருந்தார். அவர் தாமாக மனசு உருகிப் பல ஸ்தோத்திரங்கள் பண்ணியிருக்கிறார். அவர் சிவபெருமானை " எருக்கம்பூ, தும்பைப்பூ இவற்றினால் பூசை பண்ணினாலும் பிரீதி அடையக்கூடியவனாக, சுலபமாக ஆராதிக்கக் கூடியவனாகப் பரமேசுவரன் இருக்கிறான் " என்று ஸ்தோத்திரம் செய்கிறார். " நீ யார் ? உன்மத்தசேகரன் - உன்மத்தர்களுக்கெல்லாம் - பைத்தியக்காரர்களுக்கெல்லாம், சேகரனாக - தலைவனாக இருக்கிறாய் " என்றும், " ஊமத்தம்பூவைத் தலையில் வைத்துக்கொண்டிருக்கிறாய் " என்றும் சிலேடையாகத் தோன்றும்படி இரண்டு அர்த்தத்திலே சொன்னார்.
ஈசுவரனுக்கு ஏழைப் பங்காளன் என்று பெயர். ராஜாவாக இருந்தால் கிட்டவே போகமுடியாது. பைத்தியக்காரன் எங்கே போனாலும் அவனைப் பார்க்கலாம். அவனைச் சுற்றிக்கொண்டு ஓடலாம். சில காலம் பைத்தியமாக இருக்கிறவனுக்குப், பைத்தியம் பிடித்த காலத்தில் " பாவம் " இல்லையென்று சொன்னால், எப்பொழுதுமே பைத்தியக்காரனாக இருப்பவனுக்கு எப்பொழுதும் " பாவம் " இல்லை என்றே சொல்லவேண்டும். பாவத்திற்கு மேற்பட்டவர் ஈசுவரன். அதற்கு உட்பட்டவர்கள் ஜீவர்கள். ஈசுவரன் எப்பொழுதும் பைத்தியக்காரன். எப்பொழுதும் பாவம் இல்லாதவன்.
தமிழ்நாட்டில் பல மகான்கள் இருந்தார்கள். அவர்கள் இந்தத் தேசத்தில் பக்தியை நிறைய விருத்தி பண்ணினார்கள். சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஈசுவரன் தடுத்தாட்கொண்டான் என்று சொல்லுவார்கள். அவர் கல்யாணம் பண்ணிக்கொள்ள இருந்தபோது ஈசுவரன் கிழ
பிராம்மணராக வந்து, " நீ என் அடிமை " என்று சொல்லிச் சண்டை போட்டார் என்ற கதை பலருக்குத் தெரிந்திருக்கும். தம்மை தடுத்து ஆட்கொண்ட பரமசிவனை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாட ஆரம்பித்தார். " பித்தாபிறை சூடிபெரு மானே அரு ளாளா " என்று பாடினார். பித்தா என்றுதான் ஆரம்பித்தார். பைத்தியக்காரனைப் போல மற்றவர்கள் வைத்துக் கொள்ளாத பூவையெல்லாம் பரமசிவன் வைத்துக்கொண்டிருக்கிறான். எனவேதான் " அர்க்கத்ரோண " என்று பாடினார் அப்பைய தீக்ஷிதர்.
அப்பைய தீக்ஷிதருக்கு ஒருமுறை சந்தேகம் வந்தது. " ஈசுவரனிடத்தில் நான் பக்தி பண்ணுகிறேனே, என் ஜன்மம் கடைத்தேறுமா ? கடைத்தேறாதா ? நிஜமான பக்தி இருக்கிறதா ? சும்மா வேஷம் போடுகிறோமா ? சமயம் வந்தால் - ஆபத்து வந்தால் ஈசுவரன் நினைப்பு மறந்து போகுமா ? என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. அவருக்குத் தம்மைத் தாமே பரீட்சை செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை. நாம் சுவாமி தரிசனம் செய்கிறோம், மழை வந்தால் ஓடிவிடுகிறோம். இதுதான் நம் பக்தியின் நிலை. நன்றாக இருக்கிற வரைக்கும் பக்தன் என்று நம்மை நினைத்துக் கொண்டிருப்போம். நம் பக்தி சோதனைக் காலங்களில் தளர்ந்து விடும்.
அப்பைய தீக்ஷிதரும் தம் பக்தியைச் சோதித்துப் பார்க்க முடிவு செய்தார். ஆனால் அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழியோ மிகவும் ஆச்சரியமானது, அபாயமானது. பைத்தியம் பிடித்தால் அந்தச் சமயத்தில் கெட்ட வார்த்தைகள் சொல்லாமல், காம வார்த்தைகள் சொல்லாமல், ஈசுவர பக்தி பண்ணினால் அப்பொழுது நம்முடைய பக்தி மெய்யானதுதான் என்று தெரிந்துகொள்ளலாம், ஆகையால் நமக்குப் பைத்தியம் வந்தால் நல்லது என முடிவு செய்தார். ஊமத்தங்காய் - ஊமத்தம்பூ இவற்றைச் சாப்பிட்டால் பைத்தியம் பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவருக்கு இன்னொரு பயம் வந்தது. பைத்தியம் பிடித்திருக்கும்போது நாவில் ஈசுவர நாமங்கள் வந்தால் குற்றமில்லை மாறாக கெட்ட வார்த்தைகளோ அல்லது காம வார்த்தைகளோ வந்துவிட்டால் அப்புறம் ஆயுள் முழுவதும் அப்படியே பைத்தியமாகத் திரிய வேண்டியதுதான். ஜன்மம் முழுதும் வீணாய்ப் போய்விடுமே ! திரும்பவும் பைத்தியம் தெளிந்தால்தானே ஈசுவரனிடத்தில் பக்தி பண்ணி ஜனன நிவிருத்தி பண்ணிக்கொள்ளலாம் ? என்று எண்ணினார்.
பைத்திய நிவர்த்திக்காக இன்னொரு மருந்தையும் சித்தம் பண்ணி வைத்துக்கொண்டார். சிஷ்யர்களைக் கூப்பிட்டுப் பக்கத்தில் வைத்துக்கொண்டு " நான் சொல்வதையெல்லாம் எழுதுங்கள் " என்று கூறினார். பின்னர் பைத்தியம் பிடிக்கிற மருந்தைச் சாப்பிட்டார். அவருக்குப் பைத்தியம் பிடித்தது. உடனே உளற ஆரம்பித்தார். அவர் சொன்னதையெல்லாம் சிஷ்யர்கள் எழுதிக்கொண்டார்கள். திரும்ப அந்தப் பைத்தியக் காலத்திற்குள் ஊமத்தம்பூவின் குணத்தை மாற்றக்கூடிய மருந்தைக் கொடுத்தார்கள். பைத்தியம் தெளிந்துவிட்டது அப்பைய தீக்ஷிதருக்கு. அவருக்குப் பைத்தியம் பிடித்திருந்த காலத்தில் என்ன பிதற்றினார் என்று பார்த்தால் ஐம்பது சுலோகங்கள் ஈசுவரன்மேல் பாடியிருந்தார். " உன் அனுக்கிரகத்தை நான் என்ன சொல்வேன் ! பரம சுலபமான புஷ்பங்களைப் பக்தர்களிடத்திலிருந்து கிரகித்துக்கொண்டு, அவர்களுக்கு நீ எவ்வளவு பெரிய அனுக்கிரகம் செய்கிறாய் ! நான் போடுவது தும்பைப் பூ, நீ எனக்குக் கொடுக்கிறது மோக்ஷம் " என்று கண்ணிலிருந்து தாரை தாரையாக ஜலம் வர ஸ்தோத்திரம் செய்தார். அந்தக் கிரந்தத்துக்கு " ஆத்மார்ப்பண ஸ்துதி " அல்லது " உன்மத்த பஞ்சாசத் " என்று பெயர்.
உன்மத்தம் என்றால் ஊமத்தம்பூ. ஊமத்தம்பூவைச் சாப்பிட்டுவிட்டுப் பாடிய பாட்டு அது. அவருக்கு நிறைந்த பக்தி இருந்ததால்தான், பைத்தையம் பிடித்தபோதும், அந்த பக்தி மாறவில்லை, பக்தியில் ஈடுபட்டிருந்ததனால் அப்படியே தன்மயமாக இருந்தார். பைத்தியம் பிடித்தபோதுகூடப் புத்தி மாறாமல் ஒரு ஆத்மா இருந்ததானால் அது தான் சாகிறபோதும், என்ன துக்கம் வந்தாலும், வியாதி வந்தாலும் ஈசுவரன் ஒருவனைத்தான் நினைக்கும். மற்றதை நினைக்கக்கூடாது என்று ஈசுவரனையே நினைக்கும்.
உருத்திரனை " விச்வாதிகன் " என்றும் " மகரிஷி " என்றும் வேதம் சொல்கிறது. பித்தன் மட்டுமல்ல பிச்சைக்காரனும்கூட அவன். கையிலே கபாலத்தை ஏந்திக்கொண்டு பிக்ஷாடன மூர்த்தியாகத் திரிகிறான். அவனை ஆராதிப்பது மிகவும் சுலபம், அவன் நமக்கு எளியவன். அந்தரங்க அன்போடு ஒரு தும்பைப்பூவை எடுத்துப் போட்டாலும் போதும். அது நமக்குப் பரம மோக்ஷத்தை வாங்கித் தந்துவிடுகிறது. எல்லாராலும் சுலபமாக ஆராதிக்கக்கூடியவன் ஈசன். அவனை நினைத்து மனசு கரையவேண்டும் அவ்வளவே ! நாம் அவனையே நினைத்துப் பக்தி பண்ணவேண்டும். அவனையே நாம் நினைத்தால் நாம் அவனாகவே ஆகக் கூடும். குறையில்லாத பூர்ணமான வஸ்துவை நாம் நினைத்தால் நாமும் நிரம்பியவர்கள் ஆகிவிடுகிறோம். நம் குறைகள் எல்லாம் நிவிருத்தி ஆகிவிடுகின்றன. சதா ஆனந்தமாக, உற்சாகமாக நம் காரியங்களைச் செய்வதற்காக, நாம் நித்திய சுத்தன் - நித்திய புத்தன் - ஸர்வக்ஞனாகிய ஈசுவரனைப் பற்றிக்கொண்டு பக்தி செய்வோமாக.
நன்றிகள்,
சென்னை உபந்நியாசங்கள் ( 22-07-58 ), கி. வா. ஜகந்நாதன்,
கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர். #அப்பையதீக்ஷிதர்

திருமந்திரம்"மந்" என்றால் நினைப்பவர் என்று பொருள். " த்ர " என்றால் காப்பது என்று பொருள். ஆகவே நினைப்பவரை எடுத்துக் காப்ப...
28/06/2020

திருமந்திரம்
"மந்" என்றால் நினைப்பவர் என்று பொருள். " த்ர " என்றால் காப்பது என்று பொருள். ஆகவே நினைப்பவரை எடுத்துக் காப்பது எதுவோ அதுவே " மந்த்ரம் " எனப்படும். " திரு " என்பது தெய்வீகத்தைக் குறிக்கும் சொல். ஆக, இது தெய்வீக ஆற்றலுடன் விளங்கி, நினைப்பவரை பாவக்குழியிலிருந்து எடுத்துச் சிவகதி சேர்த்துக் காக்கும் தகுதியுடையது. #திருமந்திரம்

பெரியபுராணம்:உலகெல்லாம் உவந்து ஏத்தும் கந்தபுராணம் சிவநூல்.இராமாயணம் அன்புநூல். மஹாபாரதம் அறநூல்.சிலப்பதிகாரம் விதிநூல்....
28/06/2020

பெரியபுராணம்:
உலகெல்லாம் உவந்து ஏத்தும் கந்தபுராணம் சிவநூல்.
இராமாயணம் அன்புநூல். மஹாபாரதம் அறநூல்.
சிலப்பதிகாரம் விதிநூல். சிந்தாமணி இன்பநூல்.
பெரியபுராணம் அருள்நூல்.
திருவருள் எனும் தங்கக் கயிற்றில் நாயன்மார்கள் எனும் இரத்தின மணிகளைக் கோத்த மணிமாலை இந்தப் பெரியபுராணம். திருவருள்மயமானது இந்தத் திருத்தொண்டர் புராணம். சூரியானார் எப்படிப் புற இருளை அகற்றி நாம் வாழ அவசியமான வெளிச்சத்தைத் தருகிறாரோ, அவ்வாறு அக இருளை அகற்றும் அற்புதத் திருவொளி இப்புராணம். #பெரியபுராணம்

உயர்ந்திருக்கும் நாம் தாழ்ந்திருக்கின்றோம் !பெரியநம்பியுடன், ஆளவந்தாருக்குச் சீடர்களாக இருந்த பலருள், ஹரிஜன ( ஸ்ரீ ஹரியி...
28/06/2020

உயர்ந்திருக்கும் நாம் தாழ்ந்திருக்கின்றோம் !

பெரியநம்பியுடன், ஆளவந்தாருக்குச் சீடர்களாக இருந்த பலருள், ஹரிஜன ( ஸ்ரீ ஹரியின் மக்கள் எனக்கொள்வதே சிறந்தது ) வகுப்பினரான மாறனேரியும் ஒருவர். இவர் மாறனேரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கோஷ்டியூரைச் சேர்ந்த பெரியவரை கோஷ்டியூர்நம்பி என்று கூறுவதுபோல் மாறனேரிநம்பி என்று இவரைக் குறிப்பிட்டார்கள். மாறனேரிநம்பியை " மாறனேர்நம்பி " என்றும் குறிப்பிடுவது உண்டு. இவரிடம் பெரியநம்பிக்கு சிறப்பான அபிமானம் உண்டு. அவர் மகள் அத்துழாயும் இந்த பாகவதரிடத்தில் அன்பு கொண்டிருந்தாள். இவர் நோயுற்று வருந்தும்போது பெரியநம்பி இவருக்குப் பணி செய்தார் என்றும், தம் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து அமுது செய்வித்தார் என்றும் குரு பரம்பரைகளில் ஐதிக வரலாறு உண்டு.

ஒரு நாள் மாறனேரிநம்பிக்கு பெரியநம்பி உணவு கொண்டு போகையில் இராக்காலமாக இருந்ததால் இராமாநுஜர் நம்பிக்குத் தெரியாமல் திருமேனிக் காவலாய் கூடவே தொடர்ந்தார். பெரியநம்பி, மாறனேரிநம்பி வசித்து வந்த நந்தவனத்திற்குள் போனார். இராஜரணமாகிய நோயுடன் இருந்த மாறனேரிநம்பியை பெரியநம்பி நீராடச் செய்து இலையில் உணவு பரிமாறினார். பெரியநம்பியைத் தொடர்ந்து வந்த இராமாநுஜர் பெரியநம்பிக்கும் மாறனேரிநம்பிக்கும் தெரியாமலேயே ஓரிடத்தில் நின்று நடப்பதைக் கவனித்தார். " இதுவன்றோ பாகவத கைங்கரியம் ! " என்று அதிசயித்து மெய்மறந்து நின்றார்.

மாறனேரிநம்பி உணவுகொண்டு பசி தீர்ந்து " ஆளவந்தார் திருவடிகளே தஞ்சம் " என்று களைப்பாறத் தொடங்கியதும் பெரியநம்பி அந்தக் குடிசையை விட்டு வெளியேறினார். இராமாநுஜரும் விலகி விரைந்தார். அப்போது நல்ல நிலவு. அந்த நிலவில் அதிசுந்தரராய், ஆஜானுபாகுவாய், கம்பீரப் பொலிவு வாய்ந்த நெடிய, சிவந்த வடிவினராய் இராமாநுஜர் காவி ஆடை ஒளிரச் செல்வதைக் கண்ணுற்றார் பெரியநம்பி. " எம்பெருமானார் அல்லவா ! நம் பிரிய சீடரான எத்திராஜர் அல்லவா ! மகானுபாவரான இராமாநுஜமுனி இங்கே எப்படி வந்தார் " என்று அதிசயித்தார். பின்னர் சில காலத்தில் மாறனேரிநம்பி காலமாக, அவருக்குப் பெரியநம்பி பாகவதர்களுக்குச் செய்யப்படும் முறையில் பிரம்மேத சம்ஸ்காரம் செய்தார். இதை அறிந்த அத்துழாய் " இன்றே என் தந்தையை உள்ளபடி அறிந்து கொண்டேன் " என்று மகிழ்ந்தாளாம். ஆயினும் அத்தகைய பெரியநம்பியின் மனப்பான்மையை இராமநுஜர் கூட அச்சமையம் அத்துழாய் அளவிற்கு உணர்ந்துகொண்டிருக்கவில்லை என்று குருபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. ஆனால் " உயர்ந்திருக்கும் நாம் தாழ்ந்திருக்கின்றோம் " என்பதை உணராதவரா இராமாநுஜ முனி !

இராமாநுஜமுனி இதுபற்றி பெரியநம்பியிடமே விளக்கம் கேட்டார். அதற்குப் பெரியநம்பியவர்கள் கொடுத்த விளக்கம் எத்துனை சிறப்பானது என்று பாருங்கள். " இராமாநுஜ முனியே ! இராமபிரான் ஜடாயு என்ற கழுகு அரசனைத் தம் பெரியப்பாவாகக் கொண்டு அந்திமக்கிரியை செய்யவில்லையா ? இராமபிரானைக் காட்டிலும் நான் பெரியவனா ? ஜடாயுவைக் காட்டிலும் மாறனேரி நம்பி சிறியவரா ? ஒரு பணிப்பெண்ணின் புதல்வரான விதுரருக்குத் தருமபுத்திரர் அந்திமக்கிரியை செய்யவில்லையா ? தருமபுத்திரரைக் காட்டிலும் நான் பெரியவனா ? விதுரரைக் காட்டிலும் மாறனேரி நம்பி சிறியவரா ? ஆழ்வார்கள் திருவுள்ளத்தை நீர் அறியாதவரோ ? " என்று கேட்டார் பெரியநம்பி. அது கேட்ட இராமாநுஜருக்கு இப்போது பெரியநம்பியின் பெரும்பக்தி உள்ளம், உள்ளங்கை நெல்லிக்கணிபோல் இனிது புலனாகிவிட்டது. பாகவதர்கள் விஷயத்தில் குலம் குறித்துச் சிந்திப்பதே பழிப்பாகும், பாவமாகும் என்ற தொண்டரடிப்பொடியாழ்வாரின் தூய உள்ளமும், இது விடயமாகத் திருவாய்மொழியில் பிரதிபலிக்கும் நம்மாழ்வாரின் தாயுள்ளமும் உள்ளங்கை நெல்லிக்கணியாகிவிட்டன. இங்கு இராமாநுஜரின் ஐயப்பாட்டை களைந்தெறிந்தார் பெரியநம்பி. ஆனாலும் திருவரங்கத்து மக்களின் தூசிபடிந்த மனதை யார் சுத்தம் செய்வார் ? அதைச் செய்து காட்டியது அத்துழாய் அம்மாள் அன்றோ !

மாறனேரிநம்பிக்குப் பெரியநம்பி அந்திமக்கிரியை செய்ததால் ஆத்திரப்பட்ட திருவரங்கத்து மக்கள் பலரும் பெரியநம்பியின் வீட்டு வாசலில் முட்களைப் போட்டு ஒருவரும் அவர் வீட்டுக்குப் போகாமலும், அவரை ஒருவர் வீட்டுக்கும் போகவிடாமலும் விலக்கி வைத்தனர். அது அரங்கநாதனுக்குத் தேர்விழாக் கொண்டாடும் காலம். பெரியநம்பி வசிக்கும் வீதி வழியே வந்தது திருத்தேர். அத்துழாய் அம்மாள் அரங்கனைத் தண்டனிட்டு, " திரு ஆணை, நின் ஆணை கண்டாய் " என்று சொல்லிக் கொண்டே குறுக்கிட்டு இரதத்தை நிறுத்திவிட்டாள். மக்கள் திகைத்து நின்றார்கள். " இவள் தந்தைக்கு ஊரார் உபத்திரவம் செய்தார்கள் என்றால், அதற்குப் பெருமாள் என்ன செய்வார் ? என்று சிலர் பேசிக்கொண்டனர்.

அத்துழாய் அம்மாள் பெருமாளை நோக்கி, " நீ மாடுமேய்க்கும் பிள்ளைகளுடன் ஒன்றாய் கலந்து உணவு கொண்டாயே ! மேலும் தாழ்ந்த வகுப்பினர் என்று ஒதுக்கப்பட்டிருந்த திருப்பாணாழ்வாரை அங்கீகரித்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டாயே ! இப்படியெல்லாம் நடந்துகொண்ட நீ, மாறனேரிநம்பிக்கு அடியாளின் தந்தை செய்த பிரமமேத சம்ஸ்காரத்தை அங்கீகரிக்கவில்லையா ? இவ்வூரில் உள்ளவர்கள் எங்களை விலக்கி வைத்துத் தெரு வாசலில் முட்களைப் போட்டுள்ளார்களே ! " என்று முறையிட்டாள். " பெரியநம்பி செய்தது சரியன்றோ அல்லது சரியல்ல என்றோ முடிவு செய்த பின்னரே திருத்தேர் அப்பால் செல்லவேண்டும் " என்று கூறிய அம்மாள் திருத்தேரை மறித்துக்கொண்டு நின்றுவிட்டள். வடம் பிடித்தவர்கள் வடத்தைக் கீழே போட்டுவிட்டார்கள். திருத்தேர் மாலைவரை அங்கேயே நின்றது. பின்னர் அர்ச்சகர் ஒருவருக்குப் பெருமாளின் ஆவேசம் வந்துவிட்டது. அவர் பெரியநம்பியை விலக்கிய குழுவினரின் தலைவரை நோக்கி, " பெரியநம்பியை உமது தோள்மீது தூக்கிக்கொண்டு வரவேண்டும் என்பது பெருமாளின் ஆணை " என்றார்.

அப்படியே அவரும் முள்ளை ஒதுக்கிக் கொண்டு பெரியநம்பியின் இல்லத்திற்குள் புகுந்து அவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு தேர்த்தட்டில் இறக்கிவிட்டார். உடனே, " பெருமாள் மாறனேரிநம்பிக்கு நீவிர் செய்த இறுதிக் கைங்கரியத்திற்காக உகந்தருளினார் " என்றார் அர்ச்சகர். பிறகு, மாலை முதலான வரிசைகள் வழங்கப்பட்டது நம்பிக்கு. முன்புபோல் கோஷ்டியில் இடம்பெற்றார் பெரியநம்பி.

" பெரியநம்பியைத் திருவரங்கத்து மக்கள் சந்தேகித்த சமயம் இராமாநுஜரும் பெரியநம்பியிடம் அவர் செய்த காரியங்களுக்கான காரணங்களைக் கேட்டார் " என்று மேலே நாம் படித்தோம். ஆனால் " பெரியநம்பியின் திருவுள்ளத்தை அறியாதவரா இராமாநுஜர் ? அல்லது ஏற்றத்தாழ்வு பார்க்கும் அற்பமான அறம் கொண்டவரா இராமாநுஜர் ? இருக்கவே முடியாது. " பெரியநம்பியின் திருவாக்கிலே அவர் செய்த காரியங்களின் உள்ளர்த்தம் வெளிவரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கேட்டிருப்பார் இராமாநுஜர். வேறு யார் பெரியநம்பியிடம் நேரின் அதைக் கேட்பது ? சீதையைச் சிதையில் மூழ்கச் சொன்னது, இராமன் சீதையின் மேல் கொண்ட சந்தேகத்தாலா ? அவள் திருமகள் என்பதை அறியாதவனா இராமன் ? உலகம் சீதையை உணரவேண்டியே அவ்வாறு செய்தான் இராமன். வேறு யார் சீதையிடம் கூறமுடியும் அவளின் தூய்மையை நிரூபிக்கச் சொல்லி ? இராமாநுஜரும் அவ்வாறே உலக மக்களின் தூசு படிந்த உள்ளங்களைத் தூய்மைப் படுத்தவே பெரியநம்பியிடம் வினா எழுப்பினார்.

இராமாநுஜ முனி தாம் ஏற்றத்தாழ்வுகள் அற்ற மனத்தினர் என்பதை பல்வேறு சமயங்களில் பல்வேறு நிகழ்வுகளில் உணர்த்தியுள்ளார். உதாரணமாக இராமாநுஜர் காவிரியில் நீராடச் செல்லும்போது தம் அந்தரங்கச் சீடர்களான முதலியாண்டானையும் கூரத்தாழ்வானையும் இருபுறமும் ஆதரவாய்ப் பற்றிச் செல்வார். காவிரியில் நீராடித் திரும்பும்போது இருவர் கைகள் மீதும் ஈரத் துணியிட்டுப் பிடித்துக்கொண்டு வருவார். ஒரு நாள் இவர் இப்படி நீராடித் திரும்பும்போது இராமாநுஜரை அடிதொழுது நின்றார் உறங்காவில்லி. உடனே இவர் தம் கயை வில்லியாரின் வெறும் தோள்மேல் வைத்து நடந்து வந்தார். இது கண்ட சீடர்களில் சிலர் " நீராடிய பின் கூரன் முதலான அந்தணர்களையும் துணி கொண்டு தீண்டும் இவர், வேட மறவர்குலத்தினரான உறங்காவில்லியை வெறும் கைகளால் தீண்டுவது பொருத்தமானதா ? என்று புலம்பினர். அவர்களின் சர்ச்சையை பின்னர் இராமநாஜ முனி தீர்த்து வைக்கவே செய்தார். இவ்வாறு ஏற்றத்தாழ்வற்ற இறைத் தொண்டிற்குத் தாமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய இராமாநுஜ ஆழ்வாரின் பாதம் தொட்டு வணங்கி, அவர் காட்டிய நல்வழியில் வாழ்வோமாக.

நன்றி,
துயில் எழுப்பிய தொண்டர், பி.ஸ்ரீ, கலைமகள் காரியாலயம் ( 1957 )
ஸ்ரீ ராமானுஜர், பி.ஸ்ரீ, சுதேசமித்திரன் ( 1964 )

இறைவனுடைய சடாமுடியும் அதில் ஆடுகின்ற தீபோன்ற சடைகள், மிக்க முழங்கெரியும், திமு திமு என ஓசையிட்டுகொன்டே எரியும் பெரு நெரு...
28/03/2020

இறைவனுடைய சடாமுடியும் அதில் ஆடுகின்ற தீபோன்ற சடைகள், மிக்க முழங்கெரியும், திமு திமு என ஓசையிட்டுகொன்டே எரியும் பெரு நெருப்புப் போல பிரகாசிக்கிறது. இன்னொருபுறம் இடப்பாகத்தில் இருக்கும் தேவியின் அழகான குழலார் சிறுபுறத்துக் கோல்வளை ( அழகிய கூந்தல் புரளுகின்ற முதுகை உடைய உமையாள் ). இரண்டும் ஒன்றாக இருப்பது ஒவ்வாது. எனினும், இரண்டும் ஒத்து அழகாகவே இப்பண்பு அமைந்துள்ளது இறைவனின் திருவுருவத்தில். முரணும் முரனாகும் எம் அம்மை அப்பன் திருவருளால்.

ஸ்ரீ சங்கரபகவத் பாதாசார்யாள் வாரணாசியில் தங்கியிருந்த சமயத்தில் அங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீ காலபைரவரை தரிசித்து ஸ்தோத்தி...
26/03/2020

ஸ்ரீ சங்கரபகவத் பாதாசார்யாள் வாரணாசியில் தங்கியிருந்த சமயத்தில் அங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீ காலபைரவரை தரிசித்து ஸ்தோத்திரம் செய்தருளினார். அதுவே 9 சுலோகங்கள் கொண்ட " #காலபைரவாஷ்டகம் ". முதல் 8 சுலோகங்கள் ஸ்தோத்திரமாகவும் ,கடைசி சொலோகம் பலச்ருதியாகவும் ( பலச்ருதி என்றால் இதை ஜபம் செய்தால், ஜபம் செய்பவர்களுக்கு என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என்று கூறுவது ) அமைந்துள்ளது.

எட்டு சுலோகங்கள் கொண்ட இந்த காலபைரவாஷ்டகம் படிப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையானது. ஞானத்தைக் கொடுத்து அதன்மூலம் மோக்ஷத்தைத் தரவல்லது. ஞானத்திற்கு சாதனமாக ஏராள்மான புண்ணியங்களைப் பெருக்குகிறது. சோகம், மோஹம், பேராசை, ஏழ்மை, கோபம், ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் என்ற தாபங்கள் இவற்றையெல்லாம் அடியுடன் போக்கக்கூடியது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் படிப்பவர்கள் நிச்சயமாக காலபைரவரின் ஸ்ரணாரவிந்த சந்நிதியை அடைவார்கள்.
நன்றி, ஸ்ரீ ஜகத்குரு க்ரந்தமாலா, பாகம் 5

ஸ்ரீ சங்கரபகவத் பாதாசார்யாள் வாரணாசியில் தங்கியிருந்த சமயத்தில் அங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீ காலபைரவரை தரிசித்து ஸ்தோத்தி...
26/03/2020

ஸ்ரீ சங்கரபகவத் பாதாசார்யாள் வாரணாசியில் தங்கியிருந்த சமயத்தில் அங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீ காலபைரவரை தரிசித்து ஸ்தோத்திரம் செய்தருளினார். அதுவே 9 சுலோகங்கள் கொண்ட " காலபைரவாஷ்டகம் ". முதல் 8 சுலோகங்கள் ஸ்தோத்திரமாகவும் ,கடைசி சொலோகம் பலச்ருதியாகவும் ( பலச்ருதி என்றால் இதை ஜபம் செய்தால், ஜபம் செய்பவர்களுக்கு என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என்று கூறுவது ) அமைந்துள்ளது.

எட்டு சுலோகங்கள் கொண்ட இந்த காலபைரவாஷ்டகம் படிப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையானது. ஞானத்தைக் கொடுத்து அதன்மூலம் மோக்ஷத்தைத் தரவல்லது. ஞானத்திற்கு சாதனமாக ஏராள்மான புண்ணியங்களைப் பெருக்குகிறது. சோகம், மோஹம், பேராசை, ஏழ்மை, கோபம், ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் என்ற தாபங்கள் இவற்றையெல்லாம் அடியுடன் போக்கக்கூடியது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் படிப்பவர்கள் நிச்சயமாக காலபைரவரின் ஸ்ரணாரவிந்த சந்நிதியை அடைவார்கள்.
நன்றி, ஸ்ரீ ஜகத்குரு க்ரந்தமாலா, பாகம் 5

Address

Chennai

Telephone

+919790794573

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழும் சமயமும்..... posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to தமிழும் சமயமும்.....:

Share