28/01/2026
நடுநாட்டு தனிச்சிற்பங்கள்
இன்றைய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் அடங்கிய பகுதிகள் நடுவில் நாடு எனும் பெயரில் அழைக்கப்பட்டு, இன்று பேச்சு வழக்கில் நடுநாடு என வழங்கப்படுகிறது. இப்பகுதி களப்பிரர் காலம் முதல் சீறூர்த் தலைவர்களால் ஆளப்பட்டது. தமிழகத்தின் பிறப்பகுதிகளை விட, இங்கே முற்கால சிற்பங்களான சிலப்பதிகாரம் கூறும் சிற்ப அமைவில் கொற்றவை, ஐயனார், இடாகினி போன்ற உருக்கள் நிறைய காணக் கிடைக்கின்றன. கோவில்கள் சார்ந்து பயணம் செய்வது இன்றைய சூழலில் எளிதாக இருப்பினும், இத்தகைய முற்காலச் சிற்பங்களை காண்பது என்பது சற்று சவாலான காரியம், நிறைய இடங்களுக்கு Google location கூட கிடையாது. இத்தகைய இடங்களுக்கு தகுந்த வழிகாட்டிகளுடன் மட்டுமே பயணிக்க இய்லும், இத்தகைய பயணம் ஒன்றினை நம் ஆற்றுப்படை வரும் மார்ச் மாதம் 14,15 தேதிகளில் ஒருங்கிணைத்துள்ளது.
நடுநாட்டு கொற்றவை:
கைகளில் சங்கு, சக்கரமும், பக்கவாட்டு கைகளில் வாள், வில், அம்பு, கத்தி ஏந்தி, முதுகில் உள்ள அம்பாரியில் இருபுறமும் விற்கள் பூட்டி, முழுமையாய் போருக்கு செல்வதுபோலவே காட்சியளிக்கிறார் நடுநாட்டு பகுதிகளில் உள்ள பல கொற்றவை அம்மை.
வேண்டியவருக்கு வெற்றியை அள்ளித்தருபவள் என்ற நம்பிக்கையில் கொற்றம்+அவ்வை "கொற்றவை" என இத்தெய்வம் அழைக்கப்பட்டாள். தொல்காப்பியத்தின் உழிஞைத்திணையில் வெற்றியை பெற்றுத்தருபவளாய் கருதி, தமது போர்வாளினை வீரர்கள் நீராட்டி கொற்றவை உருவத்திற்கு முன் வழிபட்டனர் என தொல்காப்பியம் கூறுகிறது. கொற்றவைக்கு உயிர்பலி இட்ட குறிப்புகள் குறுந்தொகையிலும் பதிற்றுப்பத்திலும் காணப்படுகிறது.
கொற்றவை உறையும் இடம் அடர்வனமாகிய "கானகம்" ஆகும். எனவே அவள் "கானமர்செல்வி", "காடுகிழாள்" என அழைக்கப்பட்டாள். அக்கானகத்தின் நடுவிலேயே கொற்றவைக்கு கோவில் எழுப்பியுள்ளனர். இன்று திருவண்ணாமலை, விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்கும் கொற்றவையின் பல்லவர்கால தனிச்சிற்பங்கள் முற்காலத்தில் இவ்வாறு அடர்வனத்தினில் இருந்தவையே! காலஓட்டத்தில் வனங்கள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் தோன்றினாலும். இன்றும் கொற்றவையின் சிற்பங்கள் ஆங்காங்கே வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொற்வையின் வாகனமாய் மான் இருந்ததை சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன.
சிலப்பதிகாரத்தில் கொற்றவையைப் பற்றிக் குறிப்பிடும் வேட்டுவ வரிகளில்
"கரிய திரிக்கோட்டுக் கலைமிசைமேல்நின்றாயால்"என கொற்றவைக்கு வாகனம் மான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொற்றவையின் வாகனமாக ஆமான் உள்ளதால் "ஆமான் பாவை" என கொற்றவை அழைக்கப்பட்டாள்.
இலக்கியத்தில் பயின்று வரும் ஆமான் கொற்றவை வழிபாடு, இலக்கியகாலத்திற்கு முன்பு பாறை ஓவியங்களில் சில இடங்களிலும், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தாழிகளிலும் கிடைத்தது கொற்றவையின் தொன்மையை நிருபிக்கிறது.
இலக்கியத்தில் கூறப்பட்ட தொன்மையான "ஆமான் பாவை" எனப்படும் பழங்கால கொற்றவை சிற்பம் இப்பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது. சங்கம் மருவிய கால இலக்கியமான சிலப்பதிகாரத்தில் திருமாலின் தங்கையாகவும், சிவனின் பாதியாகவும், எருமைத்தலையின் மேல் நிற்பவளாகவும் மாற்றமடைவதை காணலாம். போரில் தமதுஅணி வெற்றிபெற வேண்டி வீரர்களும், தாம் மேற்கொள்ளும் "களவு" நன்முறையில் நடக்கவேண்டி பாலைநில கள்வர்களும், வெற்றிபெற வேண்டி கொற்றவையம்மைக்கு உயிர்பலி கொடுத்துள்ளனர். சில வேண்டுதலுக்காக "அரிகண்டம்","நவகண்டம்" எனும் தற்பலி மேற்கொள்ளும் வழக்கம் பரவலாய் இருந்துள்ளது.
நமது பயணத்தில் இத்தகைய சிறப்புடைய பல முற்கால கொற்றவையை தரிசிக்க உள்ளோம். நிகழ்வில் கலந்து கொள்ள பதிவின் முதல் பின்னூட்டத்தில் தங்கள் வருகையை பதிவு செய்யவும்.