25/07/2026
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்னை ஸ்கொலாஸ்திக்கா "இறை ஊழியர்" (Servant of God) என அறிவிப்பு கொண்டாட்டம்
இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மகிழ்ச்சியூட்டும் முக்கியமான நிகழ்வாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்னை ஸ்கொலாஸ்திக்கா அவர்கள் "இறை ஊழியர்" (Servant of God) என்ற திருச்சபையின் முதல் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
1917 அக்டோபர் 15 அன்று, கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த பட்டரிவிளை கிராமத்தில் சவரிமுத்து – சவரியாயி தம்பதியருக்கு மகளாகப் பிறந்த அவர், இயேசுவின் திருஇருதய சகோதரிகள் சபையை நிறுவினார்.
இயேசுவின்
திருஇருதய சபையைத் தொடங்கி, தனது வாழ்நாள் முழுவதும் ஆழ்ந்த ஜெப வாழ்க்கை, கருணை, தியாகம் மற்றும் தன்னலமற்ற அன்புச் சேவையின் மூலம் ஏழைகள், ஆதரவற்றோர், நோயாளிகள் மற்றும் முதியோருக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, எண்ணற்ற மக்களின் இதயங்களில் அழியாத ஆன்மீகச் சுவடுகளைப் பதித்தார்.
தற்போது அவர் "இறை ஊழியர்" என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது புனிதர் பட்ட வழக்கு "வணக்கத்துக்குரியவர்" (Venerable), "அருளாளர்" (Blessed) மற்றும் இறுதியில் "புனிதர்" (Saint) என்ற நிலைகளை நோக்கி முன்னேறும்.
இந்தியாவின் முதல் மறைசாட்சிப் புனிதரான புனித தேவசகாயத்தின் வரிசையில், அன்னை ஸ்கொலாஸ்திக்காவும் திருச்சபையால் புனிதராக உயர்த்தப்பட வேண்டி நாம் அனைவரும் இறைவனிடம் மன்றாடுவோம்.